ஜிஎஸ்டி எதிரொலி: தமிழகம் உட்பட மாநில எல்லைகளில் இருந்த 22 சோதனை சாவடிகள் அகற்றம்..!!
ஜிஎஸ்டி எதிரொலி: தமிழகம் உட்பட மாநில எல்லைகளில் இருந்த 22 சோதனை சாவடிகள் அகற்றம்..!!
ஒரே தேசம், ஒரே வரி என்ற பரப்புரையின் கீழ் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு கடந்த 1ம் தேதி நடைமுறைக்கு வந்தது.
இதனால் கடந்த மூன்று நாட்களில் இந்தியாவின் 22 மாநிலங்களில் உள்ள சோதனை சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன.

பொருட்கள் மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி கடந்த 1ம் தேதி பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமலானது.
ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டதை தொடர்ந்து, பல தரப்பு மக்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் அதிருப்தி தெரிவித்தன.

மசோதா நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்ததால், ஜிஎஸ்டி நடைமுறைகளை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.
ஜிஎஸ்டி நடைமுறையால் மாநில எல்லைகளில் உள்ள வணிக வரி சோதனை சாவடிகள் தற்போது அகற்றப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஜிஎஸ்டி அறிமுகமான 1ம் தேதியே தமிழ்நாடு-ஆந்திரா மற்றும் தமிழ்நாடு-கேரளா எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகள் அகற்றப்பட்டன.
மேலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள சோதனை சாவடிகள் அகற்றப்பட்டு வருதாக அந்தந்த மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு முன்பு, மாநிலங்களுக்கு இடையில் அத்தியாவசப் பொருட்கள் மற்றும் சரக்குகளை எடுத்து செல்லும் லாரி, கண்டெய்னர் போன்ற வாகனங்கள் பொருட்களுக்கான வரியை அந்தந்த மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்.

இந்த வரி நெறிமுறைகளை சோதிக்க எல்லைகளில் வணிக வரி சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன. வரி கட்டப்பட்டதற்கான ஆவணங்களை காட்டி அதிகாரிகளின் ஒப்புதலை பெற மாநில எல்லைகளில் லாரிகள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கும்.

இதன் காரணமாக சரக்கு மற்றும் கண்டெய்னர் லாரிகள் செல்வதில் தாமதம் ஏற்படுவதும் உண்டு. இதனால் பொருட்கள் தேங்கி விடுவதும் வாடிக்கையாக இருந்தது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதன் காரணமாக இனி சோதனை சாவடிகளுக்கு வணிக வரி வசூலிக்கும் உரிமை இல்லை என்பதால், இந்தியாவின் நூற்றுக்கணக்கான சோதனை சாவடிகள் தினசரி பணியை நிறுத்தி விட்டன

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பீகார், உத்தரபிரதேசம், அரியானா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 22 மாநிலங்களின் எல்லைகளில் இருந்த 22 சோதனை சாவடிகள் மூடப்பட்டு விட்டன.

இதனால் இந்தியாவில் தற்போது வணிக வரி சோதனை சாவடிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது.

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளிலும், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் போன்ற வட மாநில பகுதிகளிலும் வணிக வரி சோதனை சாவடிகள் அகற்றும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதனை அடுத்து இந்தியளவில் உள்ள அனைத்து வணிக வரி சோதனை சாவடிகள் இன்னும் சில தினங்களில் அகற்றப்பட்டு விடும் என மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜிஎஸ்டி வரி மதிப்பு முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன் பிறகு அங்கேயும் வணிக வரி சோதனை சாவடிகள் மூடும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








