ஒருத்தர் பெயர்ல வாங்கன காரை குடும்பத்துல வேற யாரும் ஓட்ட கூடாதா? இந்த உண்மையை வேற யாரும் சொல்ல மாட்டாங்க!
இந்தியாவின் பெரு நகரங்களில் ஓலா (Ola), உபேர் (Uber) மற்றும் ரேபிடோ (Rapido) போன்ற நிறுவனங்களின் சேவை கிடைக்கிறது. எனவே சொந்த கார் இல்லாதது ஒரு பிரச்னையே கிடையாது. ஆனால் இந்தியாவின் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களின் சூழலே வேறு. அங்கெல்லாம் ஓலா, உபேர் மற்றும் ரேபிடோ போன்ற நிறுவனங்களின் சேவை கிடையாது. எனவே அங்கெல்லாம் சொந்த கார் இல்லாவிட்டால், நடைமுறையில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது. அந்த சிக்கல்களை தவிர்க்க வேண்டும் என்றால், நண்பர்கள்/உறவினர்களிடம் காரை கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறோம்.
ஆனால் நண்பர்கள்/உறவினர்களிடம் காரை கடன் வாங்கி பயன்படுத்துவது சட்டப்படி சரியா? என்ற குழப்பம் பலருக்கும் நீண்ட நாட்களாக உள்ளது. இந்த குழப்பம் உங்களுக்கும் இருக்கிறது என்றால், நீங்கள் சரியான செய்தியைதான் தேர்வு செய்துள்ளீர்கள். ஏனெனில் இந்த செய்தி, உங்களின் நீண்ட நாள் குழப்பத்தை நிவர்த்தி செய்யும்.

வாகனங்களை கடன் வழங்குவது குறித்த சந்தேகங்கள் தொடர்பாக கேரள மோட்டார் வாகன துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது. இதன்படி நண்பர்கள்/உறவினர்களின் கார்களை, அவசர சூழல்களில் கடனாக பெறுவதில் எந்தவொரு சட்ட சிக்கலும் இல்லை. ஆனால் 8 அல்லது அதற்கும் மேற்பட்ட இருக்கைகளை கொண்ட கார்களை நாம் கடனாக பெற முடியாது.
இதை இன்னும் உங்களுக்கு புரியும்படி சொல்வதென்றால், சிறிய கார்களை அவ்வப்போது ஏற்படும் அவசர சூழல்களின்போது, தாராளமாக கடனாக பெற்று பயன்படுத்தலாம். ஆனால் ஒருவருக்கு சொந்தமான தனியார் காரை (Private Car), தொடர்ச்சியாக வேறு ஒருவர் பயன்படுத்தி கொண்டிருப்பது சட்ட விரோதமாக கருதப்படும்.

எனவே நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சிறிய கார்களை, அவசர சூழல்களின்போது மட்டும் கடன் வாங்கி பயன்படுத்துவது நல்லது. இந்த நேரத்தில் பெற்றோர் அல்லது குடும்பத்தில் ஒருவரின் காரை பயன்படுத்துவது சரியா? என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படலாம். இதை நீங்கள் தாராளமாக செய்ய முடியும்.
தனியார் கார்கள் எல்லாம், அதன் உரிமையாளர் மற்றும் அவரின் குடும்பத்தினர் பயன்படுத்தும் நோக்கத்திலேயே பதிவு செய்யப்படுகின்றன. எனவே ஒருவரின் காரை, அவரது குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்துவதை எந்த சட்டமும் தடை செய்யாது. ஆனால் இங்கே ஒரு விஷயத்தை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
குடும்ப உறுப்பினர்கள் என்பது வேறு. நண்பர்கள்/உறவினர்கள் என்பது வேறு. தற்போது காரை கடன் கொடுப்பது மற்றும் கடனாக பெறுவதில் உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் நிவர்த்தியாகி இருக்கும் என நம்புகிறோம். இந்த நேரத்தில், கடனாக கொடுக்கப்பட்ட கார் விபத்தில் சிக்கினால், இன்சூரன்ஸ் (Insurance) க்ளைம் செய்வதில் ஒரு சிலருக்கு இருக்கும் குழப்பங்களையும் தெளிவுபடுத்தி விடுகிறோம்.
காரை அதன் உரிமையாளர்/குடும்ப உறுப்பினர் தவிர, வேறு யாராவது ஒருவர் ஓட்டும்போது சாலை விபத்து ஏற்பட்டால், காப்பீடு நிறுவனம் இழப்பீடு வழங்க மறுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது போன்ற சூழல் ஏற்பட்டால், இழப்பீடு பெறுவதற்கு, அந்த பயணம் உரிமையாளருக்காக மேற்கொள்ளப்பட்டது என்பதையும், வாடகைக்கு விடவில்லை என்பதையும் நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் டாக்ஸிகள் சட்ட விரோதமாக இயக்கப்படுவதை தடுக்கவே இது போன்ற சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதாவது தனியார் கார்கள் என பதிவு செய்து விட்டு, வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பதை தடுப்பதையே இந்த சட்டங்கள் நோக்கமாக கொண்டுள்ளன. தற்போது இதன் விதிமுறைகள் உங்களுக்கு தெளிவாகியிருக்கும் என்று நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications








