அதிரடி காட்டும் இந்தியா... அமெரிக்காவின் 'லேசர் ஸ்பீடு கன்' திடீரென இறக்குமதியாவதற்கு காரணம் இதுதான்
அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு அதிநவீன லேசர் ஸ்பீடு கன் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. இங்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து தண்டிக்க இந்திய போலீசார் பல்வேறு அதிநவீன கருவிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ளது ''லேசர் ஸ்பீடு கன்'' (Laser Speed Gun).

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதற்கு மற்றொரு முக்கிய காரணம் அதிவேகம். இந்திய சாலைகளில் அதிவேகத்தில் பயணிப்பது மிகவும் அபாயகரமானது. ஆனால் அதனை உணர்ந்து கொள்ளாமல், தொடர்ந்து பலர் அதிவேகத்தில் சென்று கொண்டேதான் உள்ளனர்.

அத்தகைய நபர்களை கண்டறியவே இந்த லேசர் ஸ்பீடு கன் கருவி பயன்படுத்தப்படவுள்ளது. தற்போதைய நிலையில் வேக கட்டுப்பாடுகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடிக்க ஸ்பீடு ட்ராப் கேமராக்கள் மற்றும் ரேடார்களை மட்டுமே போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் குஜராத் அரசு, அம்மாநில போக்குவரத்து போலீசாருக்கு அதிநவீன லேசர் ஸ்பீடு கன் கருவியை வழங்க தொடங்கியுள்ளது. போக்குவரத்து போலீசாருக்காக முதற்கட்டமாக 39 லேசர் ஸ்பீடு கன் கருவிகளை குஜராத் அரசு வாங்க முடிவு செய்துள்ளது.

இதற்காக 3.9 கோடி ரூபாயை குஜராத் அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஒரு லேசர் ஸ்பீடு கன் கருவியின் விலை 10 லட்ச ரூபாய். வழக்கமான ரேடார் சார்ந்த ஸ்பீடு கன்களுடன் ஒப்பிடுகையில், லேசர் ஸ்பீடு கன்கள் முற்றிலும் வித்தியாசமானது. அத்துடன் அதிநவீனமானது.

போக்குவரத்து போலீசார் இதனை கைக்கு அடக்கமாக வைத்து பயன்படுத்த முடியும். ஒரே நேரத்தில் மூன்று வாகனங்களின் வேகத்தை கண்டறியும் திறன் இந்த லேசர் ஸ்பீடு கன்களுக்கு உள்ளது. இதன் மற்றொரு முக்கியமான சிறப்பம்சம் ரேஞ்ச்.

பெரும்பாலான ரேடார் சார்ந்த ஸ்பீடு கன்களின் ரேஞ்ச் 500 மீட்டர்கள் மட்டுமே. அதாவது 500 மீட்டர்கள் தொலைவிற்குள் உள்ள வாகனங்களின் வேகத்தை மட்டுமே கண்டறிய முடியும். ஆனால் லேசர் ஸ்பீடு கன்களின் ரேஞ்ச் 1 கிலோ மீட்டர்.

ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் சென்று கொண்டிருக்கும் வாகனத்தின் வேகத்தை கூட லேசர் ஸ்பீடு கன் மிக எளிதாக கண்டறிந்து விடும். அத்துடன் மிக துல்லியமான தகவல்களை உடனடியாக கொடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

தற்போதைய நிலையில் முதற்கட்டமாக 5 லேசர் ஸ்பீடு கன்கள் மட்டும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அவை அகமதாபாத் நகர போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்படவுள்ளன. வரும் நாட்களில் அனைத்து மாவட்ட போக்குவரத்து போலீசாருக்கும் லேசர் ஸ்பீடு கன் வழங்கப்படவுள்ளது.

குஜராத் மாநிலத்தில் மொத்தம் 33 மாவட்டங்கள் உள்ளன. குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு லேசர் ஸ்பீடு கன் கருவியையாவது ஒதுக்கீடு செய்ய அம்மாநில அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அதிநவீன லேசர் ஸ்பீடு கன் கருவியில் இணைய வசதியும் உள்ளது. அதிவேகமாக பயணம் செய்யும் வாகனத்தின் உரிமையாளருக்கு போட்டோவுடன் இ-சலானையும் இது அனுப்பி விடும். அதிவேகமாக செல்லும் வாகனங்களின் வீடியோக்களை ரெக்கார்ட் செய்யும் திறனும் இதற்கு உண்டு.

இந்தியாவிலேயே முதல் முறையாக குஜராத் மாநில போக்குவரத்து போலீசார்தான் இத்தைகய அதிநவீன லேசர் ஸ்பீடு கன்களை பயன்படுத்த உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் கராய் போலீஸ் அகடாமியில் மூன்று நாள் சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த அதிநவீன லேசர் ஸ்பீடு கன் கருவியை எப்படி திறம்படவும், முறையாகவும் பயன்படுத்துவது என்பது தொடர்பாக இந்த பயிற்சி முகாமில் போலீசாருக்கு கற்று கொடுக்கப்பட்டது. இதில், 200க்கும் மேற்பட்ட போலீசாருக்கு பயிற்சி பெற்றனர்.

மிக வேகமாக வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளால், இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே அதிநவீன லேசர் ஸ்பீடு கன் கருவி அமெரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது சமீப காலமாக மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான சட்டங்களும் அதிரடியாக கடுமையாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








