ரவீந்திர ஜடேஜாவின் காரை நிறுத்திய பெண் போலீஸ்... அதன்பின் என்ன நடந்தது தெரியுமா? பரபரப்பு சம்பவம்
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் காரை பெண் காவலர் நிறுத்திய பின்னர் பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையிலும், ஊரடங்கு உத்தரவில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளையும் வழங்கி கொண்டே வருகின்றன. எனவே சாலைகளில் வாகன போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

ஆனால் வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனம் என்றாலும் சரி அல்லது கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் என்றாலும் சரி, அனைத்து வகையான வாகனங்களில் பயணம் செய்பவர்களும் தற்போது கட்டாயமாக முக கவசம் அணிந்தாக வேண்டும்.

இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். எனினும் கார்களில் தனியாக பயணிக்கும் ஒரு சிலர் முக கவசம் அணிவதில்லை. இதனால் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, டெல்லி காவல் துறையினர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். இதன்படி கார்களில் தனியாக பயணம் செய்பவர்களும் முக கவசம் அணிவது கட்டாயம்.

அதேபோல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் தலை கவசம் அணிந்து அதன் மேல் முக கவசம் அணிய வேண்டும். இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என காவல் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முக கவசம் தொடர்பான சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா நேற்று இரவு சுமார் 9 மணியளவில் ராஜ்கோட் நகரில் உள்ள கிஷன்பாரா சௌக் பகுதியில் காரில் வந்து கொண்டிருந்தார். காரில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியும் உடனிருந்தார். அப்போது அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் சோனல் கோசாய் அவரது காரை நிறுத்தியுள்ளார்.

முக கவசம் அணியாத காரணத்திற்காக ரவீந்திர ஜடேஜாவின் காரை தலைமை காவலர் சோனல் கோசாய் நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்காக அபராதம் செலுத்துமாறு தலைமை காவலர் சோனால் கோசாய் கூறியதாகவும், அத்துடன் ரவீந்திர ஜடேஜாவின் ஓட்டுனர் உரிமத்தை காட்டும்படி அவர் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அந்த பெண் காவலர் தன்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் என ரவீந்திர ஜடேஜா காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதே சமயம் ரவீந்திர ஜடேஜாவின் காரை தடுத்து நிறுத்தியதாக கூறப்படும் பெண் காவலர் மன அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.

முன்னதாக அந்த பெண் காவலருக்கும், ரவீந்திர ஜடேஜாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து காவல் துறை துணை ஆணையர் மனோகர்சிங் ஜடேஜா கூறுகையில், ''முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக ரவீந்திர ஜடேஜாவும், பெண் காவலரும் ஒருவருக்கொருவர் புகார் செய்துள்ளனர்.

ஆனால் இரு தரப்பில் இருந்தும் இதுவரை முறையாக புகார் எதுவும் வரவில்லை. எனக்கு கிடைத்த தகவல்படி ரவீந்திர ஜடேஜா முக கவசம் அணிந்திருந்தார். ஆனால் அவரது மனைவி முக கவசம் அணிந்திருந்தாரா? அல்லது இல்லையா? என்பது பற்றி நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications