பள்ளிக்கு சென்று கொண்டிருந்த குழந்தைக்கு அபராதம்... போலீஸை அலற விட்ட பாசக்கார தந்தை...
பள்ளிக்கு சென்று கொண்டிருந்த குழந்தைக்கு அபராதம் விதித்த போலீசாரை கண்டித்து, தந்தை நூதன முறையில் போராட்டம் நடத்தினார்.

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் என்ற விதிமுறை இந்தியாவில் அமலில் உள்ளது. ஆனால் பெரும்பாலானோர் இதை கடைபிடிப்பது கிடையாது. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பாதுகாப்பே ஹெல்மெட்தான். ஆனால் பலர் இதை உணர்ந்து கொள்வதாக இல்லை.

சாலை விபத்தின்போது தலையில் காயம் ஏற்படுவதை ஹெல்மெட் தடுக்கிறது. விபத்தின்போது தலை முதலில் சாலையில் பட்டால் உயிரிழப்பு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

உலகிலேயே இரு சக்கர வாகனங்கள் மிகவும் அதிகமாக இருக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. இதன் காரணமாக இரு சக்கர வாகன விபத்துக்களால் நிகழும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் இங்கு அதிகமாக உள்ளன. டூவீலர்களில் பயணிப்பவர்கள் இதனை புரிந்து கொண்டு, ஹெல்மெட் அணிந்தால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கண்டிப்பாக குறைக்க முடியும்.

ஹெல்மெட் அணிவதை தவிர்ப்பது மட்டுமல்லாது மேலும் பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களிலும் இந்திய வாகன ஓட்டிகள் ஈடுபடுகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்கும் விதமாக, சமீபத்தில் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில், விதிமீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.

புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே ஒரு சில மாநில அரசுகள் உயர்த்தப்பட்ட அபராத தொகைகளை குறைத்துள்ளன.

இதில், பாஜக ஆளும் குஜராம் மாநில அரசும் ஒன்று. ஆனால் குஜராத் மாநில அரசு அபராத தொகைகளை குறைத்த பிறகும் கூட பெரும்பாலான வாகன ஓட்டிகள் திருப்தியடையவில்லை. ஒரு சில இடங்களில் போலீசாருடன் வாக்குவாதங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் அபராதத்திற்கு எதிர்ப்பு வாகன ஓட்டி ஒருவர் நூதன முறையில் போராட்டம் நடத்தியுள்ளார்.

குஜராத் மாநிலம் வதோதராவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அபராதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடு ரோட்டில் படுத்து வாகன ஓட்டி ஒருவர் போராட்டம் நடத்தியுள்ளார். சம்பவத்தன்று அந்த வாகன ஓட்டி தனது குழந்தையுடன் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் ஹெல்மெட் அணியவில்லை. ஹெல்மெட் அணியாததை பார்த்ததும் போலீசார் பைக்கை நிறுத்தினர்.

இதன்பின் ஹெல்மெட் அணியாததற்கு போலீசார் அபராதம் விதித்தனர். அந்த சமயத்தில் அந்த குழந்தை பள்ளிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த வாகன ஓட்டி அதிருப்தியடைந்தார். அதே நேரத்தில் அவர் ஆர்சி மற்றும் இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்களையும் போலீசாரிடம் சமர்பிக்க தவறினார்.

இதன் காரணமாக போலீசார் அதிகப்படியான அபராதத்தை அவருக்கு விதித்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அந்த பைக்கை பறிமுதல் செய்யவும் போலீசார் முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசார் எவ்வளவு அபராதம் விதித்தனர்? என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் அந்த குழந்தையின் தந்தை அபராதத்தை செலுத்த விரும்பவில்லை.

எனவே அவர் சாலையில் படுத்து கொண்டு போராட்டம் நடத்த தொடங்கி விட்டார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தனது குழந்தையை பள்ளியில் டிராப் செய்ய செல்லும் போது போலீசார் இப்படி நடந்து கொள்கின்றனர் என அவர் அந்த வீடியோவில் கூறுகிறார்.

இதனால்தான் போராட்டம் நடத்தியதாகவும் அவர் அந்த வீடியோவில் தெரிவிக்கிறார். மேலும் நகர எல்லைக்குள் மெதுவாக வண்டியை ஓட்டி வந்ததாகவும், இதுபோன்ற சமயங்களில் ஹெல்மெட் தேவையில்லை என அவர் கூறுவதையும் கேட்க முடிகிறது. தற்போது வைரலாக பரவி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
டூவீலர்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். பெரும்பாலான மாநிலங்களில் இந்த விதிமுறை அமலில் உள்ளது. எனினும் புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதியை நீக்க குஜராத் அரசு முடிவு செய்தது.

இருந்தபோதும் பின்னால் அமர்ந்து வந்த குழந்தைக்கும் சேர்த்து ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக போலீசார் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக தந்தை நடத்திய நூதன போராட்டம் குஜராத் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தான் ஹெல்மெட் அணியாதது மட்டுமின்றி குழந்தையையும் ஹெல்மெட் அணியாமல் அழைத்து வந்து விட்டு போராட்டம் நடத்திய அந்த தந்தையின் செயல்பாடு சரியா? குழந்தை பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் நேரத்தில் அபராதம் விதித்த போலீசாரின் நடவடிக்கை எப்படிப்பட்டது? என்பது தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








