ரூ.15 லட்சம் பைக்கில் ஓவர் சீன்! வாழ்க்கையில் மறக்கவே முடியாத தண்டனையை கொடுத்த கமிஷனர்! சூப்பர் சார்
மிகவும் விலை உயர்ந்த பைக்குகளில் அட்டகாசம் செய்த ரைடர்களுக்கு, மிகவும் வித்தியாசமான தண்டனையை காவல் துறையினர் வழங்கியுள்ளனர்.

உலகில் சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகளை சந்திக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. இங்கு சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். போக்குவரத்து விதிமுறைகள் எதையும் வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்றாததே இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பைக் ரைடர்கள் சிலர் அதிவேகத்தில் பறக்கின்றனர். இந்தியாவில் தற்போது சூப்பர் பைக்குகளின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம். அத்தகைய பைக் ரைடர்கள் ஒரு சிலர், வேக வரம்புகள் எதையும் மதிக்காமல், பொது சாலையில் மின்னல் வேகத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டுகின்றனர்.

போதாக்குறைக்கு கோவிட்-19 வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஊரடங்கு, அவர்களுக்கு வசதியாக போய் விட்டது. வாகனங்களை இயக்குவதற்கும், பயணங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதை பயன்படுத்தி கொண்டு சூப்பர் பைக் ரைடர்கள் சிலர் அதிவேகத்தில் பறக்கின்றனர்.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, ஊரடங்கு விதிகளை மீறிய 100க்கும் மேற்பட்ட சூப்பர் பைக் ரைடர்கள் அடங்கிய குழுவிற்கு கர்நாடக போலீசார் அபராதம் விதித்தனர். தற்போது அதே பாணியிலான சம்பவம் ஹரியானா மாநிலம் குர்கானில் நடந்துள்ளது. ஆனால் மற்ற காவல் துறையினரை போல் அல்லாமல், வித்தியாசமான தண்டனையை சூப்பர் பைக் ரைடர்களுக்கு குர்கான் போலீசார் வழங்கியுள்ளனர்.

நள்ளிரவு நேரத்தில் பொது சாலையில் அதிவேகத்தில் பயணித்த காரணத்திற்காகவும், மிக அபாயகரமான ஸ்டண்ட்களை செய்த காரணத்திற்காகவும், 19 சூப்பர் பைக்குகளை குர்கான் காவல் துறையினர் தற்போது பறிமுதல் செய்துள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குர்கானில், கடந்த ஞாயிற்று கிழமை இரவு (ஜூன் 7ம் தேதி) அரங்கேறியுள்ளது.

அன்றைய தினம், விலை உயர்ந்த ஹை-எண்ட் மோட்டார்சைக்கிள்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் ஒரு சிலர், ரைடு செல்வதற்காக சந்தித்துள்ளனர். இந்தியாவின் மற்ற பகுதிகளை போலவே குர்கானிலும் தற்போது லாக்டவுன் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதன்படி பார்த்தால், சம்பந்தப்பட்ட பைக் ரைடர்கள் ஊரடங்கு விதிமுறைகள் எதையும் மீறவில்லை.

ஆனால் பொது சாலையில் அபாயகரமான ஸ்டண்ட்களை அவர்கள் செய்துள்ளனர். அத்துடன் அதிவேகத்தில் பைக்குகளை ஓட்டியுள்ளனர். அந்த சமயத்தில் குர்கான் போலீஸ் துணை கமிஷனர் (போக்குவரத்து) சந்தர் மோகன் அவ்வழியாக வந்துள்ளார். பைக் ரைடர்கள் அட்டகாசம் செய்வதை பார்த்த அவர், அவர்களை சமாளிப்பதற்காக காவல் துறையினர் 2 பேரை அனுப்பி வைத்தார்.

ஆனால் பைக் ரைடர்களோ, போலீசாரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் போலீஸ் துணை கமிஷனர் சந்தர் மோகனே நேரடியாக அங்கு சென்றார். இதன்பின்னர் அங்கிருந்த 19 பைக்குகளும் ஸ்பாட்டிலேயே பறிமுதல் செய்யப்பட்டன. இதில், சுஸுகி ஹயபுசா போன்ற பைக்குகளும் அடக்கம். நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் பைக்குகள் விடுவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் பொது சாலையில் தாறுமாறாக பைக் ஓட்டிய குற்றத்திற்காக, ஒவ்வொரு ரைடருக்கும் போலீசார் 17 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதவிர பைக் ரைடர்களை போலீசார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கும் மேல் பைக்குகளை தள்ள வைத்தும், வித்தியாசமான தண்டனையை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து குர்கான் போலீஸ் துணை கமிஷனர் (போக்குவரத்து) சந்தர் மோகன் கூறுகையில், 'நான் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கும்போது, கோல்ஃப் கோர்ஸ் சாலையில் பைக் ரைடர்கள் குழுவாக இருப்பதை பார்த்தேன். அவர்கள் அதிவேகத்திலும், பொறுப்பற்ற முறையிலும் பைக்குகளை ஓட்டி கொண்டிருந்தனர். வாகன ஓட்டிகள் விதிகளை பின்பற்றினால், போலீசார் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

ஆனால் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறினாலோ அல்லது சாலையில் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் நடந்து கொண்டாலோ, அது ஒரு பிரச்னையாக மாறும்' என்றார். சாலைகள் வெறிச்சோடி இருப்பதால், சமீப காலமாகவே இத்தகைய விதிமுறை மீறல்கள் நடைபெற்று வருவதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.

பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கியிருப்பதால், அதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு சில பைக் ரைடர்கள் பொது சாலையில் அதிவேகத்தில் பயணம் செய்வதுடன், ஸ்டண்ட்டிங்கிலும் ஈடுபடுகின்றனர். தற்போது குர்கானில் 6 லட்ச ரூபாய் முதல் 15 லட்ச ரூபாய் வரை விலை கொண்ட சூப்பர் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

அதிவேகத்தில் பைக் ஓட்டும் உற்சாகமான அனுபவத்திற்காகவே இவ்வளவு விலை கொடுத்து சிலர் சூப்பர் பைக்குகளை வாங்குகின்றனர். ரேஸ் டிராக் உள்ளிட்ட மிக பாதுகாப்பான இடங்களில், இந்த உற்சாகத்தை அனுபவிக்க அவர்கள் முயற்சி செய்யலாம். இதன் மூலம் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. ஆனால் பொது சாலைகளில் அதிவேகத்தில் பைக் ஓட்டுவது என்பது அபாயகரமானது.

இந்திய சாலைகளில் எப்போது என்ன நடக்கும்? என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. திடீர் திடீரென கால்நடைகள் குறுக்கே வரும். பாதசாரிகள் குறுக்கே வருவார்கள். அல்லது வேறு வாகனங்கள் குறுக்கே வரக்கூடும். அப்போது நீங்கள் அதிவேகத்தில் பயணித்து கொண்டிருந்தால், பைக்கை கட்டுப்படுத்த முடியாமல் போய் விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை மனதில் கொள்ளுங்கள்.
குர்கானில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் குறித்து, டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. காவல் துறையினரிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால், விதிமுறைகளை முறையாக பின்பற்றி வாகனம் ஓட்டுங்கள். இது உங்களையும், மற்றவர்களையும் சாலை விபத்தில் இருந்தும் காப்பாற்றும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








