ஆட்டம் போட்ட ஆட்டோ டிரைவர்களுக்கு செக் வைத்த அரசு... அதிரடி உத்தரவால் செம ஹேப்பி... என்னனு தெரியுமா?
ஆட்டோ டிரைவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவுகளால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவில் ஆட்டோக்களை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் விதிமுறைப்படி மீட்டர் பொருத்துவது கிடையாது. அதற்கு மாறாக தாறுமாறாக கட்டணங்களை வசூலிக்கின்றனர். இதன் காரணமாக பயணிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுக்க இந்த பிரச்னை காணப்படுகிறது. குறிப்பாக பெரு நகரங்களில், இந்த பிரச்னை மிகவும் அதிகமாக இருக்கிறது. இதில், ஹரியானா மாநிலம் குர்கானும் ஒன்று. குர்கான் நகரில் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் மீட்டர் இல்லாமல்தான் வலம் வருகின்றனர். அத்துடன் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.

இது தொடர்பாக தொடர்ச்சியாக புகார்கள் வந்த காரணத்தால், தற்போது ஒரு சில அதிரடியான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஒரு வாரத்திற்குள் ஆட்டோக்களில் கட்டண மீட்டர் பொருத்த வேண்டும் என நேற்று (பிப்ரவரி 17) உத்தரவிடப்பட்டுள்ளது. தவறுவோர் மீது, மோட்டார் வாகன சட்டம், 1988 மற்றும் மோட்டார் வாகன சட்டம், 1989-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்சிஜி எல்லை மற்றும் அதற்கு ஐந்து கிலோ மீட்டர்கள் வெளியே இயக்கப்படும் ஆட்டோக்களில் கட்டண மீட்டர்கள் பொருத்தப்படுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைதான் ஆட்டோ டிரைவர்கள் வசூலிக்க வேண்டும். இதன்படி முதல் ஒரு கிலோ மீட்டருக்கு 12 ரூபாய் கட்டணமாக வசூலிக்கலாம்.

அதன்பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 8 ரூபாய் கட்டணமாக வசூலித்து கொள்ளலாம். அதே சமயம் இரவு நேரம் என்றால் (இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை), மொத்த கட்டணத்தில் 25 சதவீதம் கூடுதலாக வசூலித்து கொள்ளலாம். அதே சமயம் வெயிட்டிங் சார்ஜிங் எவ்வளவு? என்பதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி காத்திருப்பு கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு 30 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் பயணிகள் கூடுதல் லக்கேஜை கொண்டு வந்தால், மொத்த கட்டணத்தில் ஆட்டோ டிரைவர்கள் கூடுதலாக 7.50 ரூபாயை வசூலித்து கொள்ள முடியும். அதே நேரத்தில் ஷாப்பிங் பேக்குகள், சிறிய சூட்கேஸ்கள் ஆகியவற்றுக்கு கூடுதல் கட்டணங்கள் கிடையாது.

அத்துடன் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே ஆட்டோ ரிக்ஸாக்களில் பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓவர்லோடுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும், இதனை மீறும் ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் இந்த அதிரடி உத்தரவால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால் இதுபோன்ற உத்தரவுகள் நாடு முழுக்க அவ்வப்போது பிறப்பிக்கப்பட்டு கொண்டேதான் இருக்கிறது. அவை முறையாக பின்பற்றப்படுவதில்லை என்பதுதான் உண்மை. இதனால் இம்முறையாவது இந்த உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் குர்கான் பயணிகளின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








