போக்குவரத்து விதிமீறிய போலீஸ் அதிகாரிக்கு சமூக வலைதளம் மூலம் தண்டனை வாங்கி கொடுத்த இளைஞர்
போக்குவரத்து விதிமீறிய போலீஸ் அதிகாரி ஒருவருக்கு, 28 வயதே ஆகும் இளைஞர் ஒருவர் தண்டனை வாங்கி கொடுத்துள்ளார்.
போக்குவரத்து விதிமீறிய போலீஸ் அதிகாரி ஒருவருக்கு, 28 வயதே ஆகும் இளைஞர் ஒருவர் தண்டனை வாங்கி கொடுத்துள்ளார். மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் சமூக வலைதளத்தைதான், இதற்கு அந்த இளைஞர் ஆயுதமாக பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நமது நாட்டில் சாலை விபத்துக்களின் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.5 லட்சம் பேர் உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர்.

எனவே சாலை விபத்துக்களின் எண்ணிக்கையையும், சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையையும் குறைக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், முக்கியமானது ஹெல்மெட். இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது தமிழ்நாடு உள்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது, பின்னால் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்.

ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இதனை கடைபிடிப்பது இல்லை. எனவே ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த அபராத தொகையை அதிகரிப்பது குறித்த பரிசீலனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளை கண்காணிக்க வேண்டிய போலீஸ் அதிகாரிகள் சிலரே, ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் போலீஸ் அதிகாரிகளை, சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது.

அவர்கள் மீதெல்லாம் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என சட்டத்தை சரியாக பின்பற்றும் சாமானிய மக்கள் புலம்பி கொண்டுள்ளனர். ஆனால் வெறும் புலம்பலோடு நிறுத்தி விடாமல், ஹெல்மெட் அணியாமல் பயணித்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு, 28 வயதேயாகும் இளைஞர் தண்டனை வாங்கி கொடுத்துள்ளார்.

ஹர்மீத் பத்ரா என்பவர்தான் அந்த இளைஞர். இன்டீரியர் டிசைனராக பணியாற்றி வரும் ஹர்மீத் பத்ரா, அரியானா மாநிலம் குர்கானில் உள்ள சிக்கந்தர்பூர் பகுதியில், போலீஸ் அதிகாரி ஒருவர் ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதை யதேச்சையாக பார்த்துள்ளார்.

அந்த போலீஸ் அதிகாரி, இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அவர் பின்னால் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். ஆனால் இருவருமே ஹெல்மெட் அணியவில்லை. இதைக்கண்ட ஹர்மீத் பத்ரா, அந்த போலீஸ் அதிகாரிக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டார்.

இதற்கு அவர் பயன்படுத்தி ஆயுதம் பிரபலமான சமூக வலைதளங்களுள் ஒன்றான டிவிட்டர். போலீஸ் அதிகாரி ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதை, ஹர்மீத் பத்ரா உடனடியாக புகைப்படம் எடுத்து கொண்டார்.

பின்னர் குர்கான் நகர போலீசார் மற்றும் குர்கான் போலீஸ் துணை கமிஷனர் ஆகியோருடன் அந்த படத்தை பகிர்ந்தார் ஹர்மீத் பத்ரா. அத்துடன், ''குர்கான் போலீஸ் அதிகாரி ஹெல்மெட் இல்லாமல் பயணிக்கிறார். இதுதொடர்பாக யாரிடம்? எப்படி? புகார் அளிக்க வேண்டும்'' என கேள்வியும் எழுப்பியிருந்தார்.

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை தண்டிப்பதற்காக, குர்கானில் போலீசில், போஸ்டல் சலான் பிராஞ்ச் என்ற பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டால், புகைப்படம் எடுத்து இந்த பிரிவுக்கு அனுப்பலாம்.

இதற்காக பிரத்யேகமாக வாட்ஸ் அப் எண் மற்றும் இமெயில் முகவரி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த புகைப்படத்தில் உள்ள வாகனத்தின் நம்பர் பிளேட்டை வைத்து, போக்குவரத்து விதியை மீறிய நபரை கண்டறிவார்கள். பின்னர் அவரது முகவரிக்கு, அபராதம் விதித்தற்கான ரசீது அனுப்பி வைக்கப்படும்.

இதன்படி ஹர்மீத் பத்ராவின் புகாரும், போஸ்டல் சலான் பிராஞ்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை ஹர்மீத் பத்ராவிற்கு, குர்கான் போலீசார் தெரியப்படுத்தினர். எனினும் நான் அளித்த புகாரின் தற்போதைய நிலை என்ன? என்று ஹர்மீத் பத்ரா மீண்டும் டிவிட் செய்தார்.

இதற்கு பதில் அளித்த குர்கான் போலீசார், ஹெல்மெட் அணியாமல் பயணித்த போலீஸ் அதிகாரிக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஹர்மீத் பத்ரா, சமூக வலை தளத்தை சரியாக பயன்படுத்தியதால், போக்குவரத்து விதியை மீறிய போலீஸ் அதிகாரிக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதையும் ஹர்மீத் பத்ரா நிரூபித்து விட்டார்.
Image Courtesy: Twitter / Harmeet Batra
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications