வாகன ஓட்டிகளுக்கு 6 கோடி ரூபாய் அபராதத்தை போட்டு தாக்கிய அதிகாரிகள்... இனியும் இந்த தப்ப செய்வீங்க?
போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக வாகன ஓட்டிகளுக்கு 6 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில், கடந்த மூன்று மாதங்களில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக 6.12 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறல்கள் அதிகரித்து கொண்டே வந்ததையடுத்து, குர்கான் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ஓவர்லோடு ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் சாலைகளில் முறைகேடாக இயங்கும் பயணிகள் வாகனங்களை கண்டறிவதற்காக குர்கான் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் சிறப்பு வாகன தணிக்கையை மேற்கொண்டனர். இதில் கண்டறியப்பட்ட வாகனங்களுக்குதான் அதிரடியாக அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக குர்கானில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அத்துடன் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்துவதற்காக பிரச்சாரம் ஒன்றை தற்போது தொடங்கியுள்ளோம்.

வரும் பிப்ரவரி 17ம் தேதி வரை இந்த பிரச்சாரம் நடைபெறும். வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். சாலை பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் தெரிந்து வைத்து கொண்டு, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இதன் மூலம் சாலை விபத்துக்கள் தவிர்க்கப்படும்'' என்றனர்.

ஓவர்லோடு வாகனங்களும், முறைகேடாக இயக்கப்பட்ட பயணிகள் வாகனங்களும் அதே காரணத்திற்காக மீண்டும் பிடிக்கப்பட்டால், வாகனத்தின் பதிவு எண்ணுடன் ஓட்டுனரின் உரிமம் மூன்று மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும் எனவும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் அதிரடியாக தெரிவித்துள்ளனர்.

வாகனங்களில் அதிகபாரம் ஏற்றுவதால் ஏற்படும் பாதிப்புகளை வாகன ஓட்டிகள் பலர் உணர்வதில்லை. ஓவர்லோடு செய்தால் வாகனம் அதிக எரிபொருளை நுகரும் சூழல் உருவாகும். இதன் விளைவாக பயணத்திற்கான செலவு அதிகரிக்கும். இதுமட்டுமின்றி ஓவர்லோடு ஏற்றுவதால், வாகனத்தின் முக்கியமான பாகங்களில் ஏராளமான பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

குறிப்பாக டயர்கள், சஸ்பென்ஸன், இன்ஜின் போன்ற மிக முக்கியமான பாகங்களில் பிரச்னைகள் ஏற்படலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள். இதன் விளைவாக உங்கள் வாகனத்தின் ஆயுள் குறையலாம். எனவே ஓவர்லோடு ஏற்றுவதை தவிர்ப்பதன் மூலம் உங்கள் வாகனத்தின் ஆயுளும், மைலேஜூம் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமடைந்து வருகின்றன. சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதில் மத்திய, மாநில அரசுகள் மிகவும் தீவிரமாக உள்ளன. எனவே போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றுவது நல்லது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








