வெளியானது அதிரடி உத்தரவு... வண்டிய நிறுத்தி பணம் பறிக்கும் போலீஸ்காரங்களுக்கு செக்... இனிமேல் வாலாட்ட முடியாது
இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்காணிப்பதற்கு தற்போது பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டு விட்டன. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கேமராக்கள் மூலம் கூட போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் என்னதான் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் வந்து விட்டாலும் கூட, பழைய முறையை காவல் துறை இன்னமும் கைவிடவில்லை. சாலைகளில் ஆங்காங்கே நின்று கொண்டு வாகன தணிக்கை செய்வதை பற்றிதான் நாங்கள் தற்போது பேசி கொண்டுள்ளோம்.
காவல் துறை அதிகாரிகளின் வாகன தணிக்கையில், வாகன ஓட்டிகள் துன்புறுத்தப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்தியாவில் காவல் துறை மீதான இந்த புகார்கள் ஒன்றும் புதிதல்ல. நீண்ட காலமாகவே இருந்து வரக்கூடிய ஒரு புகார்தான். குறிப்பாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளிடம், காவல் துறை அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்துவதாக புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த பிரச்னையை தவிர்ப்பதற்காக தற்போது காவல் துறைக்கு அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, இனிமேல் காவல் துறையினர் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளை நிறுத்த கூடாது. அபராதமும் விதிக்க கூடாது. ஹரியானா மாநிலம் குருகிராம் காவல் துறைக்குதான் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: இரவு நேரங்களில் எந்தவொரு வாகனத்தையும் நிறுத்த கூடாது. அபராதமும் விதிக்க கூடாது. இதை இன்ஸ்பெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை தவிர்க்க முடியாத சூழல்களில், அபராதம் விதிக்க நேரிட்டால், உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.

உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்ற பிறகுதான், அபராதம் விதிக்க வேண்டும். இந்த உத்தரவை எக்காரணம் கொண்டும் காவல் துறையினர் மீற கூடாது. யாராவது மீறியது தெரிய வந்தால், அவர்கள் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்க எடுக்கப்படும். இவ்வாறு காவல் துறை உயர் அதிகாரிகளின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குருகிராம் பகுதி மக்களுக்கு இந்த உத்தரவு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. உண்மையில் வாகன தணிக்கை என்ற பெயரில், அப்பாவி வாகன ஓட்டிகள் பலர், ஒரு சில காவல் துறை அதிகாரிகளால் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை, லஞ்சம் என்ற பெயரில், ஒரு சில காவல் துறை அதிகாரிகளிடம் இழக்க வேண்டியுள்ளது. ஆனால் உயர் அதிகாரிகள் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவின் மூலம், ஒரு சில காவல் துறையினரின் அடாவடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான்.
இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இது போன்ற உத்தரவுகளை பிறப்பித்தால் நன்றாக இருக்கும் என வாகன ஓட்டிகள் பலரும் சமூக வலை தளங்கள் மூலமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற உத்தரவுகள் வாகன ஓட்டிகளின் பணத்தை மட்டுமல்லாது, நேரத்தையும் மிச்சம் பிடிக்க உதவி செய்யும் என்பது எங்களுடைய கருத்து.


Click it and Unblock the Notifications








