டிக்டாக் வீடியோவிற்காக காரில் சிவப்பு நிற பெக்கான்... மடக்கி பிடித்து இளைஞரை தூக்கி சென்ற போலீஸார்..
17 வயது இளைஞர் ஒருவர் டிக்டாக் வீடியோவிற்காக தனது தந்தையின் காரில் சிவப்பு நிற பெக்கானை (சைரன்) பொருத்தி சாலையில் சென்ற போது போலீஸாரிடம் சிக்கி கொண்டுள்ளார். இதுகுறித்த டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி தளம் வெளியிட்டுள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

தற்சமயம் பிரபலமான சமூக வலைத்தளமாக இருக்கும் டிக்டாக் இன்றைய தலைமுறையினர் இடையே மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி ஏற்படுத்தி வருகிறது. இன்னும் சொல்ல போனால் டிக்டாக் பெரும்பாலான மக்களின் அன்றாட வேலையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.தினமும் ஒரு டிக்டாக் வீடியோவாவது பதிவிட்டுவிட வேண்டும், இல்லையென்றால் தூக்கம் வராது என்று இருப்போரும் உள்ளனர்.

இதற்காக வீடியோவை பதிவு செய்யும்போது சிலர் இறந்துள்ள சம்பவமும் கேட்டிருக்கிறோம். ஒரு சிலரோ போலீஸ் நிலையத்தில், போலீஸாருடன் என பல சம்பவங்களில் போலீஸாரிடம் மாட்டி கொண்டுள்ளனர். இவ்வாறான வீடியோக்களை பதிவு செய்வதை போலீஸார் அந்த சமயத்தில் பார்க்காவிட்டாலும், அந்த வீடியோ வைரல் ஆகும்போது போலீஸாரின் பார்வைக்கு வந்துவிடுகிறது.

இதற்கென்று தனி பிரிவையே வைத்து போலீஸார் செயல்பட்டு கொண்டிருக்க, டெல்லிக்கு அருகே உள்ள குருக்ராம் பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் ஊரடங்கு சோதனையில் ஈடுப்பட்டிருந்த போலீஸார்கள் முன்பே டிக்டாக் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இதில் உச்சக்கட்டம் என்னவென்றால், வீடியோவிற்காக அந்த போலீஸார்களையே அவர் மறைமுகமாக உட்படுத்தி இருந்தது தான். அவர் பதிவு செய்தது ஒரு இந்தி பாடல். சிவப்பு நிற பெக்கான் பொருத்தப்பட்ட காரை குறித்து பாடப்படும் இந்த பாடலிற்காக அந்த இளைஞர் தனது தந்தையின் வெள்ளை நிற ஃபோக்ஸ்வேகன் மாடலில் சிவப்பு நிற பெக்கானை பொருத்தியுள்ளார்.

பிறகு அந்த கார் சோதனையில் ஈடுப்பட்டிருந்த போலீஸார் உள்ள சாலையின் வழியாக வரவேண்டும். சிவப்பு நிற பெக்கானை பார்த்தவுடன் போலீஸார் அனைவரும் இருபுறமும் ஒதுங்கி கொள்ள வேண்டும். கார் ஸ்டைலாக நடுவே செல்ல வேண்டும். இதுதான் அந்த இளைஞரின் திட்டம்.

இதனை செயல்படுத்தும் விதமாக, இந்த டிக்டாக் வீடியோவின் முதல் சில காட்சிகளை அவர் போலீஸார் நின்றிருந்த இடத்திற்கு சற்று தூரத்தில் பதிவு செய்து கொண்டிருந்தார். ஊரடங்கினால் சாலையில் அதிகளவில் வாகனங்கள் இல்லாததினாலும், சிவப்பு பெக்கான் பொருத்தப்பட்ட கார் என்பதினாலும் தூரத்தில் வரும்போதே போலீஸார் உடனே கண்காணிக்க ஆரம்பித்துவிட்டனர்.

பிறகு உள்ளே அமர்ந்திருப்பது ஒரு இளைஞர் என்பதை அறிந்தவுடன் காரை மடக்க அவர்கள் திட்டமிட்டுவிட்டனர். ஆனால் இதை அறியாத அந்த இளைஞர் போலீஸார் நமக்கு வழிவிடுவார்கள் என நினைத்து கொண்டு, வீடியோவை பதிவு செய்தப்படியே போலீஸாரை நெருங்கினார்.

வழி விடுவதற்கு பதிலாக காரை போலீஸார் நிறுத்துவதை பார்த்த பயந்துபோன இளைஞர் காரின் வேகத்தை அதிகரித்து போலீஸாரின் தடுப்புகளை உடைத்து கொண்டு சென்று விட முயற்சித்துள்ளார். இருப்பினும் நாங்கள் அவரது காரை எப்படியோ நிறுத்திவிட்டோம் என அப்போது சோதனை பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸார் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது அனைத்தும் ஒரு டிக்டாக் வீடியோவிற்காகவா என கேட்டு அதிர்ந்துபோன போலீஸார், பிறகு அந்த இளைஞரின் பெற்றோரை காவல் நிலையத்திற்கு நேரில் வரவழைத்து அறிவுரை கூறியதுடன், தகுந்த வயது இல்லாமல் காரை ஓட்டியதற்கு, அதிக வேகம் என அடுக்கடுக்காக புகார்களை கூறி மொத்தமாக ரூ.7,500 அபராதம் விதித்தனர்.

இந்தியாவில் விஐபி கார்கள் உள்பட தனிப்பயன்பாட்டு வாகனங்களில் சிவப்பு பெக்கான் பொருத்தக்கூடாது என ஏற்கனவே அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் மற்றும் போலீஸ் வாகனம் போன்ற அவசர கால வாகனங்களில் மட்டுமே இத்தகைய பெக்கான் பொருத்த அனுமதிக்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி ஊரடங்கினால் சாலைகள் காலியாக இருப்பதாலும் தான் இந்த இளைஞர் எளிதாக போலிஸாரிடம் சிக்கி கொண்டுள்ளார். ஒருவேளை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்திருந்ததால் அவரை பிடிக்க போலீஸாருக்கு அதிக சிரமங்கள் ஏற்பட்டிருக்கலாம். குருக்ராமில் ஊரடங்கினால் வாகனங்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








