கேரளாவில் ஆர்எஸ்எஸ் செய்த வேலையால் குருவாயூர் கோவில் கார் ஏலம்... எவ்வளவுக்கு ஏலம் போனது தெரியுமா?
குருவாயூர் கோவிலுக்கு மஹிந்திரா நிறுவனம் நன்கொடையாக வழங்கிய காரை துபாய் தொழிலதிபர் ரூ43 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார். இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனத்தின் சிறப்பான தயாரிப்பாகப் பேசப்படுவது மஹிந்திரா தார் எஸ்யூவி கார். இந்த கார் கடந்த மே மாதம் அதிகம் விற்பனையான எஸ்யூவி கார்கள் பட்டியலில் டாப் 10 -ல் இடம் பிடித்தது. இந்த காருக்கு என இந்தியாவில் ரசிகர்கள் பலர் இருக்கிறார். பலர் இந்த காரை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த காருக்கான காத்திருப்பு காலமும் அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 2021 நவம்பர் மாதம் மஹிந்திரா நிறுவனம் தனது நிறுவனத்தின் தார் காரை கேரளமாநிலம் குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியது. இந்த நிறுவனம் தற்போது தயாரிப்பில் இல்லாத AX வேரியன்ட் என்ற அரிய ரக காரை இந்த கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியது. இந்த காரை வாங்கிய கோவில் நிர்வாகம் இதைக் கோவில் ஊழியர்கள் கோவில் பணிகளுக்காக பயன்படுத்துவார்கள் என முதல் சொன்னார்கள்.

ஆனால் சில மாதங்களுக்குப் பின்னர் இந்த காருக்கு பயன் இல்லை என்பதால் இந்த காரை ஏலத்தில் விடக் கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இந்த காருக்கான ஏலம் அறிவிக்கப்பட்டது. இந்த ஏலத்தில் அமல் முகம்மது அலி என்பவர் இந்த காரை வாங்குவதற்காகத் தனது ஏஜெண்ட் சுபாஷ் பணிக்கரை இந்த ஏலத்தில் கலந்து கொள்ள அனுப்பி வைத்தார். இந்த ஏலத்தில் கலந்து கொண்ட ஒரே நபர் அவர் தான்.

ரூ15 லட்சத்தை அடிப்படை விலையாகக் கொண்டு ரூ10 ஆயிரம் அதிகம் வைத்து ரூ 15,10,000 என்ற விலையில் ஏலம் துவங்கியது. அந்த விலைக்கே சுபாஷ் பணிக்கர் கேட்டதால் இந்த காரை அமல் முகம்மது அலி என்பவருக்கு வழங்கக் கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் இந்த ஏலத்தை எதிர்த்து ஹிந்து ஸ்வயம் ஸேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளை அமைப்பு இது) கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. கோர்ட்டில் நடந்த விசாரணையில் முதல் ஏலத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் வெளிப்படையாக ஏலம் நடத்த உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இந்த காருக்காக ஏலம் கடந்த திங்கட்கிழமை நடந்தது. இந்த ஏலத்தில் மொத்தம் 14 பேர் கலந்து கொண்டனர். மீண்டும் இந்த ஏலம் பழைய விலையான ரூ15 லட்சத்தை அடிப்படை விலையாகக் கொண்டு ரூ10 ஆயிரத்தை அதிகம் வைத்து ஏலத்தைத் துவங்கியது. ஏலத்தில் இந்த முறை கடுமையான போட்டி நடந்தது. ஏலத்தில் முடிவில் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் விக்னேஷ் விஜயகுமார் இந்த காரை ரூ43 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார்.

விக்னேஷ் விஜயகுமாரின் சார்பில் அவரது தந்தை விஜயகுமார் ஏலத்தில் கலந்து கொண்டு காரை வாங்கினார். அவரது மகன் குறிப்பிட்ட கார் குருவாயூரப்பனுடைய கார் என்பதால் விக்னேஷ் விஜயகுமார் எவ்வளவு பணம் செலவு ஆனாலும் பரவாயில்லை காரை ஏலத்தில் எடுக்கச் சொல்லி தன் தந்தையிடம் சொல்லியுள்ளார். அதன்படி தந்தையும் காரை ரூ43 லட்சத்திற்கு ஏலத்திற்கு எடுத்துள்ளார்.

மஹிந்திரா நிறுவனம் குருவாயூர் கோவிலுக்கு வழங்கியது தார் 4X4 எஸ்யூவி கார். இந்த காரின் AX வேரியன்ட்டை நன்கொடையாக வழங்கியுள்ளது. மஹிந்திரா நிறுவனம் இந்த வேரியன்ட் தயாரிப்பை தற்போது நிறுத்திவிட்டது இது பேஸ் வேரியன்டாகும். இந்த வேரியன்ட்டில் காருக்குள் என்டர்டெயின்மெண்ட் சிஸ்டம் இருக்காது. அதே போல ஸ்டியரிங் மவுண்ட் கண்ட்ரோல் சிஸ்டம் இருக்காது. அதே நேரத்தில் காக்குள் ஏசி வசதி இருக்கிறது.

இந்த கார் விற்பனையான போது பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடனும் விற்பனையானது. பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டார்போ சார்ஜ்டு இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இது 150 பிஎச்பி பவரையும் 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், டீசல் வேரியன்டை பொருத்தவரை 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இது 130 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், இரண்டு இன்ஜின் ஆப்ஷனிலும் மேனுவல் அல்லது அட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் உள்ளன. மஹிந்திரா நிறுவனம் கோவிலுக்கு வழங்கியது டீசல் இன்ஜின் காராகும்.

இந்த கார் மார்கெட்டில் ரூ13-18 லட்சம் என்ற விலையில் விற்பனையானது. இந்த காரை துபாய் தொழிலதிபர் கடவுளுக்கு சொந்தமான காராக இருந்ததால் அந்த காரை ரூ43 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளார். தற்போது இந்த காரை ஏலத்தில் எடுத்தவர்கள் இந்த காருக்கான 12 சதவீத ஜிஎஸ்டி வரியையும் ஏலம் எடுத்த பணத்துடன் சேர்த்துக் கட்ட வேண்டும் என்பது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications








