இந்தியாவா இது? யாரும் எதிர்பார்க்காத சூப்பர் சேஞ்ச்... இப்போ சொல்லுங்க மத்திய அரசு செஞ்சது தப்பா?
மத்திய அரசின் அதிரடி சட்டம் உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் சூப்பரான மாற்றம் ஒன்று நடந்துள்ளது.

உலகிலேயே சாலை பாதுகாப்பு மிகவும் மோசமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இங்கு ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். அத்துடன் பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடையவும் விபத்துக்கள் காரணமாக உள்ளன.

இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சட்டை செய்வது கிடையாது. இதுவே விபத்துக்களுக்கு முக்கியமான காரணம். எனவே வாகன ஓட்டிகளை போக்குவரத்து விதிகளை பின்பற்ற வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகைகள் சமீபத்தில் உயர்த்தப்பட்டன.

இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக வாகன ஓட்டிகள் தற்போது போக்குவரத்து விதிகளை ஓரளவிற்கு பின்பற்ற தொடங்கியுள்ளனர். குறிப்பாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் நகரில், வாகன ஓட்டிகள் பெரும்பாலானோர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளனர். அங்கு டிரைவிங் லைசென்ஸ் உடன் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆம், விசாகப்பட்டிணம் நகரில் உரிய லைசென்ஸ் இல்லாமல் வாகனம் இயக்கி பிடிபடும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது விசாகப்பட்டிணம் நகருக்கு உண்மையிலேயே நல்ல செய்திதான். அங்கு போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களில், வெறும் 5 முதல் 8 சதவீதம் பேரிடம் மட்டுமே டிரைவிங் லைசென்ஸ் இல்லை என சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த எண்ணிக்கை முன்பு 15 முதல் 20 சதவீதமாக இருந்தது. எனவே இது மிகப்பெரிய வீழ்ச்சி என்று போலீசார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இருந்தபோதும் லைசென்ஸ் இல்லாமல் பிடிபடுபவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்களாகவே இருக்கின்றனர் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் கடந்த ஒரு ஆண்டு கால அளவில், டிரைவிங் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் சலான்களை வழங்குகின்றனர். அத்துடன் நிலுவையில் உள்ள அவர்களின் சலான்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

இதுபோன்ற தொடர்ச்சியான சோதனைகள் மூலமாகவே, விசாகப்பட்டிணம் நகரில் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதேபோன்று மற்ற போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு எதிராகவும் விசாகப்பட்டிணம் போலீசார் தற்போது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதன்படி குடி போதையில் வாகனம் ஓட்டுவது, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை காட்டிலும் அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குவது போன்ற விதிமுறை மீறல்களில் ஈடுபடுவோரின் டிரைவிங் லைசென்ஸ்களை போலீசார் சஸ்பெண்ட் செய்து வருகின்றனர். இதன்படி விசாகப்பட்டிணம் நகரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 500 டிரைவிங் லைசென்ஸ்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன.

குடி போதையில் வாகனம் ஓட்டுவது, அதிக வேகத்தில் தாறுமாறாக வாகனம் ஓட்டுவது மற்றும் செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவது ஆகியவைதான் பொதுவான விதிமுறை மீறல்களாக உள்ளன. இதில், குடி போதையில் வாகனம் ஓட்டுவதுதான் மிகவும் அதிகமாக உள்ளது. விதிமுறைகளை மீறி சிக்குவோரில், 50 சதவீதம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களாக உள்ளனர்.

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியில் இருந்து புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிகவும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கு பயந்து கொண்டும் பலர் விதிகளை முறையாக பின்பற்ற தொடங்கியுள்ளனர்.

புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை பல மடங்கு உயர்த்தியதற்கு ஆரம்பத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. ஏராளமான மாநில அரசுகளே இதற்கு எதிர்ப்புகளை பதிவு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சாலை விபத்துக்கள் குறைய வேண்டுமென்றால், இத்தகைய கடுமையான சட்டங்கள் அவசியமே.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications