கார்ல போகும்போது தப்பி தவறி கூட இனி இதை பண்ணீராதீங்க... ஹெவியா ஃபைன் போட்றாங்க... எவ்ளோனு தெரியுமா?
காரில் செல்லும்போது சன்ரூஃப் வழியாக உடலை வெளியே நீட்டிக்கொண்டு பயணம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது சன்ரூஃப் உடன் கூடிய கார்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. சன்ரூஃப் உற்சாகமான அனுபவத்தை வழங்குவதுதான் இதற்கு காரணம். அதே நேரத்தில் சன்ரூஃப்கள் காரணமாக சாலை பாதுகாப்பில் அச்சுறுத்தலும் ஏற்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் சன்ரூஃப்கள் வழியாக உடலை வெளியே நீட்டிக்கொண்டு பலர் பயணம் செய்வதை நம்மால் சர்வ சாதாரணமாக காண முடிகிறது.

குழந்தைகள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரும் இதனை செய்கின்றனர். இதுபோன்ற செயல்பாடுகள் உற்சாகம் அளிக்க கூடியதாக இருக்கலாம். ஆனால் எந்த நேரத்திலும் அவை ஆபத்தில் முடிந்து விடுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. எனவே விபரீதங்களை தடுப்பதற்காக காவல் துறையினர் தற்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

கார் ஓடிக்கொண்டிருக்கும்போது சன்ரூஃப் வழியாக உடலை வெளியே நீட்டி கொண்டு வருவதன் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதனை மீறி இந்த செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். கொல்கத்தாவின் லால் பஜார் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள்தான் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

சமீப காலமாக மிகவும் பரபரப்பாக காணப்படும் சாலைகளில் கூட பலர் சன்ரூஃப் வழியாக உடலை வெளியே நீட்டிக்கொண்டு பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக ஃப்ளைஓவர்களில் பயணிக்கும்போது பலர் இப்படி செய்கின்றனர். இதன் மூலம் சிறிய உற்சாகத்திற்காக அவர்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்து கொண்டுள்ளனர். இதை அவர்கள் உணர்வதில்லை.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றபோது அவை அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. போக்குவரத்து காவல் துறையினர் சட்ட பூர்வமான நடவடிக்கை எடுப்பதற்கு இவை போதுமான ஆதாரங்களாக இருக்கின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிப்பதற்கு போக்குவரத்து காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த விதிமுறையின்படி ஏற்கனவே 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு விட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கார் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது சன்ரூஃப் வழியாக உடலை வெளியே நீட்டிக்கொண்டு அபாயகரமான ஸ்டண்ட்களில் ஈடுபடுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சன்ரூஃப் வழியாக உடலை வெளியே நீட்டிக்கொண்டு பயணம் செய்பவர்களால், அவர்களுக்கு மட்டும் பிரச்னை இல்லை. கூடவே அந்த காரில் இருப்பவர்களுக்கும், அந்த வழியாக பயணம் செய்யும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் சேர்ந்தே பிரச்னை ஏற்படுகிறது. இதை அனைவரும் உணர வேண்டும் என போக்குவரத்து காவல் துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.

இந்த எச்சரிக்கையை மீறி தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கு சிசிடிவி கேமராக்களின் உதவிகளை போக்குவரத்து காவல் துறையினர் நாடியுள்ளனர். இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை அடிப்படையாக கொண்டு, குற்றம் சாட்டப்படுபவர்கள் மீது சட்ட பூர்வமான நடவடிக்கையை எடுப்பதற்கு காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியாவில் சமீப காலமாகதான் சன்ரூஃப் வழியாக உடலை வெளியே நீட்டிக்கொண்டு பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. சிலர் காரின் மேற்கூரையின் மீது அமர்ந்து கொண்டு கூட அபாயகரமான முறையில் பயணம் செய்கின்றனர். முன்பெல்லாம் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை சாலைகளில் இதுபோன்று பயணம் செய்பவர்களை அதிகம் காண முடிந்தது.

ஆனால் தற்போது மிகவும் பரபரப்பான போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் கூட பலர் இவ்வாறு பயணம் செய்கின்றனர். இப்படி பயணம் செய்வதில் ஏராளமான ஆபத்துக்கள் உள்ளன. நகர பகுதிகளில் இப்படி பயணம் செய்வதால் பட்டம், ஒயர்கள் போன்றவைபட்டு கழுத்து, தொண்டை, தலை உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன என்பதை அனைவரும் உணர வேண்டும்.

கார் பயணத்தின்போது நாம் செய்யும் சிறு அலட்சியம் கூட மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதை அனைவரும் மனதில் கொள்வது அவசியம். வரும் காலங்களில் இதுபோன்ற செயல்பாடுகள் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காகவே கொல்கத்தாவில் தற்போது விதிமுறையை மீறுபவர்கள் மீது அதிரடியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








