நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
பாலிவுட் சினிமா நம் இந்திய மக்களிடையே பல்வேறு ட்ரெண்ட்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, பழைய ஹிந்தி படங்களில் பிரபலமான கதாபாத்திரங்களை ரீ-கிரியேட் செய்து ரசிகர்கள் வெளியிடும் படங்கள் மற்றும் வீடியோக்களில் சிலவற்றை இணையத்தில் பார்த்திருப்பீர்கள். இவ்வளவு ஏன், தற்சமயம் பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் சினிமா நட்சத்திரங்கள் கூட அத்தகைய ஃபேமஸான கதாபாத்திரங்களை தங்களது படங்களில் காப்பியடித்து உள்ளனர்.
அந்த வகையில் பாலிவுட் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஷோலே திரைப்படத்தின் கதாபாத்திரங்களான ஜெய்-விரு பாணியில் கூடுதல் பெட்டி இணைக்கப்பட்ட மோட்டார்சைக்கிளில் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமான முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி மற்றும் தற்போதைய முன்னணி வீரர் ஹர்திக் பாண்டியா காட்சி தந்துள்ளனர். இருவரும் அத்தகைய மோட்டார்சைக்கிளில் அமர்ந்திருக்கும் படத்தினை ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"ஷோலே 2 மிக விரைவில்" என்ற கேப்ஷ்ன் உடன் இந்த படத்தை ஹர்திக் பாண்டியா வெளியிட்டுள்ளதால், அவரது இந்த இன்ஸ்டாகிராம் பதிவை பலத்தரப்பட்ட மக்கள் வெகுவாக ரசித்து லைக் செய்து வருகின்றனர். தற்போதுவரையில் மட்டுமே இந்த இன்ஸ்டா பதிவை லைக் செய்தவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. அத்துடன் ஆயிரக்கணக்கிலானோர் இந்த பதிவிற்கு கருத்துகளை கமெண்ட் பாக்ஸ் மூலமாக தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் தோனி மற்றும் ஹர்திக் பாண்டியாவை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும், அதேநேரம் ஷோலே 2 என குறிப்பிட்டு இருப்பதன் மூலமாக பாலிவுட் சினிமா ரசிகர்களிடமும் இந்த பதிவு சென்றுள்ளது.
இவற்றுடன், பழைய கூடுதல் பெட்டி இணைக்கப்பட்ட மோட்டார்சைக்கிளின் படத்தை பதிவிட்டு இருப்பதன் மூலமாக கிளாசிக் மோட்டார்சைக்கிள் பிரியர்கள் மத்தியிலும் ஹர்திக் பாண்டியாவின் இந்த இன்ஸ்டா பதிவு கவனத்தை பெற்றுள்ளது. இந்த படத்தில் நாம் காண்பது, பிஎம்டபிள்யூ ஆர்71 மோட்டார்சைக்கிளை ஆகும். முதல்முறையாக ஆர்71 பைக்கை பிஎம்டபிள்யூ நிறுவனம் 1938இல் ஜெர்மனியில் அறிமுகப்படுத்தியது. ஆனால் அடுத்த 1 வருடம் மட்டுமே இந்த பைக்கை பிஎம்டபிள்யூ நிறுவனம் தயாரித்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா...
ஆம், அந்த சமயத்தில் துவங்கிய இரண்டாம் உலக போரின் காரணமாக ஆர்71 மோட்டார்சைக்கிளின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் பிஎம்டபிள்யூ-வுக்கு ஏற்பட்டது. அந்த ஒரு வருடத்தில் வெறும் 2,638 ஆர்71 பைக்குகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. அதில் பெரும்பான்மையானவை போரில் டச்சு இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக நெதர்லாந்து அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் ஆயிரக்கணக்கானவை போரில் நசமாகின. தற்போதைக்கு உலகம் முழுவதிலுமே ஏறக்குறைய வெறும் 500 பிஎம்டபிள்யூ ஆர்71 பைக்குகள் மட்டுமே உள்ளன.
இத்தகைய உலகின் மிகவும் அரிதான பைக்குகளுள் ஒன்றான ஆர்71 -ஐ மஹிந்திர சிங் தோனி வைத்துள்ளார். இதில் இருந்து மோட்டார்சைக்கிள்கள் மீதான தோனியின் காதலை அறியலாம். மேற்கண்ட படத்தில், தோனியின் கேரேஜில் உள்ள இத்தகைய வரலாறு கொண்ட பிஎம்டபிள்யூ பைக்கில் தான் ஹர்திக் பாண்டியா மற்றும் தோனி அமர்ந்துள்ளனர். 746சிசி ஃப்ளாட்-ட்வின் என்ஜினை கொண்ட பிஎம்டபிள்யூ ஆர்71 பைக் உற்பத்தி செய்யப்பட்ட சமயத்தில் உலகின் மிகவும் ஆற்றல்மிக்க பைக்குகளுள் ஒன்றாக விளங்கியது.

இதன் காரணமாகவே இந்த பைக்கை போரில் பயன்படுத்த டச்சு இராணுவம் முன்வந்தது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஐ.எம்.இசட்-உரல் பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பிஎம்டபிள்யூ ஆர்71 மஹிந்திர சிங் தோனியின் பைக்குகள் கேரேஜில் ஓர் அரிதான வைரக்கல் என்றுதான் சொல்ல வேண்டும். இதனாலேயே மற்ற பைக்குகளை எல்லாம் விட்டுவிட்டு இந்த பைக்கில் அமர்ந்தவாறு ஹர்திக் பாண்டியா போஸ் கொடுத்துள்ளார். சரி, ஹர்திக் பாண்டியா எதற்கு தற்போது இந்த படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஆண்கள் கிரிக்கெட் போட்டி இன்று (ஜனவரி 27) ராஞ்சியில் நடைபெறவுள்ளது. ராஞ்சி தோனியின் இருப்பிடம் உள்ள நகரம் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஹர்திக் பாண்டியா தோனியுடன் நெருங்கிய நட்பு கொண்டவர் என்பதால் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தோனியின் கேரேஜில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. அத்துடன், மஹிந்திர சிங் தோனியும் மற்ற வீரர்களை சந்திக்க நேரடியாக போட்டி நடைபெறும் மைதானத்திற்கு ஒரு சின்ன விசிட் அடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








