ரிஷப் பண்ட் யாருனே தெரியாம செய்த உதவிக்கு இவ்ளோ பெரிய பரிசா! ஒரே நாளில் ஹீரோவாக மாறிய பஸ் டிரைவர், கண்டக்டர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் ரிஷப் பண்ட் (Rishabh Pant). இவர் கார் விபத்து (Car Accident) ஒன்றில் சிக்கிய சம்பவம், ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு இந்த கார் விபத்து நடைபெற்றது.
விபத்து நடைபெற்றது, உத்தரகண்ட் (Uttrakhand) மாநில பகுதியாகும். ரிஷப் பண்ட், உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்தான். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கார் விபத்தில், ரிஷப் பண்ட்டிற்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் ரிஷப் பண்ட் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளனர். ரிஷப் பண்ட் விரைவில் பூரண குணமடைந்து, மீண்டும் கிரிக்கெட் களத்திற்குள் இறங்க வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அத்துடன் பஸ் டிரைவர் சுஷில் குமார் மற்றும் கண்டக்டர் பரம்ஜித் ஆகிய இருவருக்கும் ரசிகர்கள் தற்போது நன்றி தெரிவித்து கொண்டுள்ளனர். ஏனெனில் விபத்து நடைபெற்றபோது, ரிஷப் பண்ட்டை மீட்டதில், இவர்கள் இருவரும் மிகவும் முக்கியமானவர்கள் ஆவர். இவர்கள் இருவரும் ஹரியானா ரோடுவேஸில் (Haryana Roadways) வேலை செய்து வருகின்றனர். ரிஷப் பண்ட்டை காப்பாற்றியதற்கான வெகுமதியை, ஹரியானா ரோடுவேஸ் இவர்கள் இருவருக்கும் தற்போது வழங்கியுள்ளது.
ஹரியானா ரோடுவேஸின் பானிபட் டெப்போ பொது மேலாளர் குல்தீப் ஜாங்ரா இந்த தகவலை தெரிவித்துள்ளார். சுஷில் குமார் மற்றும் பரம்ஜித் ஆகிய இருவருக்கும், பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் ஆகியவை வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹரியானா மாநிலத்தின் போக்குவரத்து துறை அமைச்சர் மூல்சந்த் ஷர்மாவும், அவர்களை பாராட்டியுள்ளார். சுஷில் குமார் மற்றும் பரம்ஜித் ஆகிய இருவரும்தான், ரிஷப் பண்ட்டை முதலில் காப்பாற்றியவர்கள் ஆவர்.
விபத்து நடைபெற்ற அதே நெடுஞ்சாலையில்தான், சுஷில் குமார் பேருந்தை ஓட்டி கொண்டு வந்துள்ளார். அதே பேருந்தில் பரம்ஜித் கண்டக்டராக பணியில் இருந்தார். விபத்தை பார்த்ததும், சுஷில் குமார் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தினார். பின்னர் அவர்கள் இருவரும் ரிஷப் பண்ட்டை மீட்க சென்றனர். முதலில் அவர்கள் இருவருக்கும், விபத்தில் சிக்கியது ரிஷப் பண்ட் என்பது தெரியாது. எந்த பலனையும் எதிர்பார்க்காமல், மனித நேயத்துடன்தான் உதவிக்கு சென்றுள்ளனர்.
இன்னும் சொல்லப்போனால், சம்பவ இடத்திற்கு சென்ற பிறகும் கூட, சுஷில் குமாருக்கு ரிஷப் பண்ட்டை அடையாளம் தெரியவில்லை. பரம்ஜித்தான் சரியாக அடையாளம் கண்டு கொண்டு, விபத்தில் சிக்கியது ரிஷப் பண்ட் என்றும், அவர் கிரிக்கெட் வீரர் என்றும், சுஷில் குமாரிடம் கூறியுள்ளார். இதற்கிடையே ஹரியானா மாநில அரசை போல், உத்தரகண்ட் மாநில அரசும், இவர்கள் இருவரையும் கௌரவிக்க திட்டமிட்டுள்ளது. சுஷில் குமார் மற்றும் பரம்ஜித் மட்டுமல்லாது, அந்த வழியில் வந்து உதவிய அனைவருக்கும் வெகுமதி அளிக்க உத்தரகண்ட் அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. சாலை விபத்தில் யாராவது பாதிக்கப்பட்டால், உடனடியாக உதவி செய்ய வேண்டும் என்பதுதான் அது. சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு பலரும் உதவி செய்ய முன்வருவதில்லை. வழக்கு, விசாரணை என பிரச்னைகள் வரும் என்று அவர்கள் நினைப்பதுதான் இதற்கு காரணம். சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களை எந்த வகையிலும் துன்புறுத்த கூடாது என இந்தியாவின் உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது என்பதை இங்கே அனைவரும் உணர வேண்டும்.
எனவே சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை நீங்கள் காண நேரிட்டால், உடனடியாக அவர்களுக்கு உதவி செய்யுங்கள். எவ்விதமான தயக்கமும், அச்சமும் உங்களுக்கு வேண்டாம். உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைத்தால், சாலை விபத்துக்களில் சிக்கிய பலர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன் சுஷில் குமார் மற்றும் பரம்ஜித் ஆகியோரை போன்று, அரசிடம் இருந்து பாராட்டுக்களும், வெகுமதிகளும் உங்களுக்கு கிடைக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். பிரதிபலன் பார்க்காமல் செய்த உதவிக்காக, அமைச்சர், அதிகாரிகள் மற்றும் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டு, ஹீரோவாக மாறியிருப்பதும் கூட இவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசுதான்!


Click it and Unblock the Notifications








