கார் திருட்டுக்கு உடந்தையாக இருந்தது யார் தெரியுமா? கொள்ளையன் சொன்ன விஷயத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்
கார் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தியாவில் கார் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. எனவே கார்கள் திருடப்படுவதை தடுப்பதற்காக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன. ஆனால் அதையும் மீறி, கொள்ளையர்கள் கார்களை திருடி சென்று விடுகின்றனர்.

உரிமையாளர்கள் பொத்தி பொத்தி பாதுகாக்கும் நிலையிலும், கார்கள் களவாடப்படுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கார் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக, போலீசாரும் மிக தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கார்களை திருடும் கொள்ளை கும்பல் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் தற்போது மூன்று பேர் கும்பல், காவல் துறை வசம் சிக்கியுள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. திருடப்படும் கார்கள், போக்குவரத்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் எப்படி விற்பனை செய்யப்படுகின்றன? என்பதை இந்த தகவல்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.

ஹரியானா மாநில போலீசார், கார் கொள்ளை கும்பல் ஒன்றை, நேற்று (ஜூன் 22ம் தேதி) அதிரடியாக கைது செய்தனர். கொள்ளையடிக்கப்படும் கார்கள், போக்குவரத்து துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், பதிவு மற்றும் விற்பனை செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சிகரமான தகவல், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் மொத்தம் 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதில், ஹரியானா மாநிலம் ரோஹ்டக் மாவட்டத்தை சேர்ந்த 2 போக்குவரத்து துறை அலுவலக அதிகாரிகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் இருந்து 14 கார்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆறு டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி ரக கார்கள் மற்றும் நான்கு டொயோட்டா இன்னோவா எம்பிவி ரக கார்கள் உள்பட மொத்தம் 14 கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில், ஒரு கார் டெல்லியில் கொள்ளையடிக்கப்பட்டது ஆகும். அந்த கார் ஹரியானா மாநிலம் டாத்ரி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எஞ்சிய கார்கள், தனிப்படை போலீசாரால் வெவ்வேறு இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் பெயர் பிரவீன். இவர் ஹரியானா மாநிலம் பிரேம் நகர் பகுதியை சேர்ந்தவர். அவரிடம் ஹரியானா மாநில காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''கொள்ளையடிக்கப்படும் கார்களின் இன்ஜின் மற்றும் சேஸிஸ் நம்பரை, போக்குவரத்து துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மாற்றிய பின் பிரவீன் விற்பனை செய்து வந்துள்ளார்'' என்றனர். கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு பேரும் ஹரியானா மாநிலம் மேஹம் பகுதியில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகத்தில் வேலை செய்து வருகின்றனர்.

இதில் ஒருவர் அனில் குமார். இவர் கிளர்க் ஆக வேலை செய்து வருகிறார். மற்றொருவர் சோம்பீர். இவர் கம்ப்யூட்டர் ஆபரேட்டாக வேலை செய்து கொண்டுள்ளார. கொள்ளையடிக்கப்படும் கார்களை, போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்ய இவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

கொள்ளையடிக்கப்படும் கார்களை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்ய உதவியதன் மூலம், போலீசார் ட்ரேஸ் செய்வதை அவர்கள் கடினமாக்கியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ''திருடப்படும் கார்களின் இன்ஜின் மற்றும் சேஸிஸ் எண்களை மாற்றியதுடன், போலியான ஆவணங்களை பயன்படுத்தி, ஹரியானாவில் அவற்றை அவர்கள் பதிவு செய்து வந்துள்ளனர்'' என்றனர்.

இப்படி மோசடியான முறையில் 500க்கும் மேற்பட்ட வாகனங்களை பதிவு செய்ததில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குற்றத்தை அவர்கள் அனைவரும் ஒப்பு கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே காவல் துறையினர் தற்போது விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

அவர்களுடன் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது தொடர்பாக காவல் துறையினர் தற்போது விசாரணை செய்து வருகின்றனர். அவர்களை கைது செய்வதற்கும், கொள்ளையடிக்கப்பட்ட கார்களை மீட்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கார்கள் என்பவை மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாக உள்ளன.

நீங்கள் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தாலும், இப்படிப்பட்ட கொள்ளையர்களிடம் உங்களது கார்களை பறிகொடுக்க வேண்டிய நிலை வரலாம். எனவே எப்போதும் கவனமாக இருங்கள். அத்துடன் கார்களில் டிராக்கிங் டிவைஸ்களையும் இன்ஸ்டால் செய்து வைக்கலாம். கார்கள் திருடப்பட்டால், அதனை கண்டறிவதற்கு டிராக்கிங் டிவைஸ்கள் உதவியாக இருக்கும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








