பென்ஸ் கார் என நம்பி போன மாநில அமைச்சருக்கே இந்த நிலைமையா!! இதை எதிர்பார்த்திருக்கவே மாட்டாரு...
பொது மக்களுக்காக விற்பனைக்கு வரும் கார் ஒன்றானது பல்வேறு சோதனைகளுக்கும், பல்வேறு சரிப்பார்ப்புகளுக்கும் பிறகே தொழிற்சாலையை விட்டு வெளிவருகிறது. அதுமட்டுமில்லாமல், க்ளோபல் என்சிஏபி, ஆசியன் என்சிஏபி என விற்பனைக்கு அறிமுகமான பின்பும் பாதுகாப்பு தரத்தை வெளிக்காட்டவும், மற்ற கார்களுடன் ஒப்பிட்டு பார்க்கவும் ஒவ்வொரு காரும் மோதல் சோதனைகளுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்த என்சிஏபி மோதல் சோதனைகள் சமீப காலமாக டிரெண்டாக பல்வேறு கார் பிராண்ட்களிடையே பரவி வருகிறது. இவ்வாறான சோதனைகள் அனைத்தும் ஒரேயொரு விஷயத்திற்காகவே, காரை நம்பி வாங்கும் வாடிக்கையாளரையும், அவரது குடும்பத்தையும், சாலையில் இருக்கும் மற்ற பாதசாரிகள் & உயிரினங்களையும் எந்தவொரு விபத்தும் இன்றி பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும். பொது மக்களின் உயிருக்கே இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும்போது, மக்கள் பலரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியின் உயிர் எவ்வளவு முக்கியமானது என்பதை நான் கூற வேண்டிய அவசியமில்லை.

ஆனால், ஹரியானா மாநில அமைச்சர் ஒருவர் கார் பயணத்தின்போது ஏற்பட்ட இயந்திர கோளாறில் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். ஹரியானா மாநில உள்துறை & சுகாதார துறை அமைச்சர் அனில் விஜி. இவர் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி ஹரியானாவில் உள்ள அம்பாலா காண்ட் என்ற பகுதியில் இருந்து குருக்ராம்மை நோக்கி குண்ட்லி-மனேசர்-பல்வால் (KMP) விரைவுச்சாலையில் தனது மெர்சிடிஸ்-பென்ஸ் காரில் பயணித்து கொண்டிருந்த போது காரின் அடித்தளத்தை தாங்கி இருக்கும் முக்கியமான பாகமான ஷாக் அப்சார்பர் இரண்டு துண்டாக உடைந்துள்ளது.
இந்த நிகழ்வில் மிகவும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அமைச்சர் பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த சம்பவத்தினை படங்களுடன் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பதிவில் அவர் மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு பக்கத்தினையும் டேக் செய்துள்ளார். யார் ஒருவருக்கும் காயம் இல்லை என்றாலும் இந்த சம்பவம் ஹரியானா மாநிலம் உள்பட நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த சம்பவத்தை விரிவாக விசாரிக்க ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் குழு (STI) அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின் போது ஹரியானா அமைச்சர் அனில் விஜி பயன்படுத்தி இருப்பது மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் இ-கிளாஸ் லக்சரி செடான் காரை ஆகும். அமைச்சர் இந்த பயணத்தின்போது தான் பயன்படுத்திய காரின் பெயரையும் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் கார் ஆனது இ200, இ 220டி மற்றும் இ 350டி ஏஎம்ஜி என்ற 3 விதமான வேரியண்ட்களில் தற்சமயம் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் இ200 என்ற பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கும் வேரியண்ட்டை இந்த சம்பவத்தின்போது ஹரியானா அமைச்சர் பயன்படுத்தி உள்ளார். சம்பவத்தில், இந்த காரின் ஓட்டுனர் பக்கத்தில் இருந்த ஷாக் அப்சார்பர் இரண்டு துண்டாக உடைந்துள்ளது. இ-க்ளாஸ் லக்சரி செடான் காரின் இந்த பெட்ரோல் வேரியண்ட்டில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 5500 ஆர்பிஎம்-இல் 194 பிஎச்பி மற்றும் 1650 ஆர்பிஎம்-இல் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

டீசல் வேரியண்ட்டில் பொருத்தப்படும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 3800 ஆர்பிஎம்-இல் 192 பிஎச்பி மற்றும் 1600 ஆர்பிஎம்-இல் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாகவும், ஏஎம்ஜி வேரியண்ட்டில் 3.0 லிட்டர் இன்லைன்-6 சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த ஏஎம்ஜி வேரியண்ட்டில் 286 பிஎஸ் மற்றும் 600 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றல் கிடைக்கிறது. இந்த மூன்று என்ஜின் தேர்வுகளிலும் கியர்பாக்ஸிற்கு 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
முக்கிய சிறப்பம்சங்களாக இ-க்ளாஸ் லக்சரி செடானில் எல்இடி விளக்குகள், பனோராமிக் சன்ரூஃப், ஏர் சஸ்பென்ஷன் (ஏஎம்ஜி வேரியண்ட்டிற்கு மட்டும்), 3-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், மடக்கூடிய பின் வரிசை இருக்கைகள், 12.3 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 360-டிகிரி கேமிரா, 7 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி பிரோகிராம் உள்ளிட்டவற்றை மெர்சிடிஸ் நிறுவனம் வழங்குகிறது. விற்பனையில் இ-க்ளாஸ் காருக்கு பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், வால்வோ எஸ்90, ஜாகுவார் எக்ஸ்.எஃப் மற்றும் ஆடி ஏ6 உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.


Click it and Unblock the Notifications