BMW காரை ஆற்றில் தள்ளி விட்ட இளைஞர்! ஹரியானா விவசாயிகள் செல்வ செழிப்பில் திளைப்பதற்கு காரணம் இதுதான்
ஹரியானா மாநில இளைஞர் ஒருவர் மிகவும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை வேண்டுமென்றே ஆற்றில் தள்ளி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹரியானா மாநிலத்தில் நேற்று (ஆகஸ்ட் 9) நடைபெற்ற ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சொந்தமாக ஒரு மாருதி சுஸுகி காரை கூட வாங்க முடியாமல் திண்டாடி வருபவர்கள் மத்தியில் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் விலை உயர்ந்த ஹை-எண்ட் பிஎம்டபிள்யூ காரை இளைஞர் ஒருவர் ஆற்றில் வீசியுள்ளார்.

இந்த சம்பவம் அதிர்ச்சி என்றால், அதற்கான காரணம் அதை விட பேரதிர்ச்சி. சம்பந்தப்பட்ட இளைஞருக்கு அவரது பெற்றோர் புதிய பிஎம்டபிள்யூ காரை சமீபத்தில் பரிசாக வழங்கியுள்ளனர். ஆனால் அந்த இளைஞர் தனக்கு ஜாகுவார் கார்தான் வேண்டும் என அடம் பிடித்து வந்துள்ளார். எனினும் அவரது பெற்றோர்கள் பிஎம்டபிள்யூ காரை பரிசாக கொடுத்து விட்டனர்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் அந்த இளைஞர் காரை வேண்டுமென்றே ஆற்றில் தள்ளி விட்டுள்ளார். தனது எதிர்ப்பை பதிவு செய்யும் நோக்கில் அவர் இதனை செய்துள்ளார். அத்துடன் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது பெய்து வரும் கனமழையால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் பிஎம்டபிள்யூ கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளது. ஆனால் ஒரு இடத்தில் புற்கள் மிகவும் உயரமாக வளர்ந்திருந்தால், அங்கு கார் சிக்கி கொண்டது. இதன்பின் அந்த இளைஞர் திடீரென காரை மீண்டும் மீட்க முயற்சி செய்துள்ளார். இதற்கு உள்ளூரை சேர்ந்தவர்களின் உதவியையும் நாடியுள்ளார். இந்தியா முழுக்க இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட இளைஞர் ஆற்றில் தள்ளி விட்ட பிஎம்டபிள்யூ காரின் துல்லியமான மாடல் எது? என்பது தற்போது வரை வெளியாகவில்லை. ஆனால் இது பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் அல்லது 5-சீரிஸ் காராக இருக்கலாம் என தெரிகிறது. இந்த இரண்டு கார்களுமே மிகவும் விலை உயர்ந்தவைதான். விலை எவ்வளவு தெரியுமா? 50 லட்ச ரூபாய்க்கும் மேல்.

அதேபோல் சம்பந்தப்பட்ட இளைஞரின் பெயர்? வயது? உள்ளிட்ட விபரங்களும் தற்போது வரை வெளியாகவில்லை. ஆனால் அந்த இளைஞர் ஹரியானா மாநிலம் யமுனா நகர் பகுதியை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பான துல்லியமான விபரங்கள் எதையும் தற்போது வரை போலீசார் வெளியிடவில்லை.

ஆனால் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள்தான் தற்போது அந்த இளைஞர் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அவர் கைது செய்யப்பட்டு விட்டாரா? என்பதும் இன்னும் தெளிவாக தெரியவில்லை. அதேபோல் அதிகாரிகளால் கார் மீட்கப்பட்டு விட்டதா? அதன் நிலை என்ன? என்பதும் தெரியவரவில்லை.

அதே சமயம் சம்பந்தப்பட்ட இளைஞரின் தந்தை பெரும் நிலக்கிழார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் போன்ற ஊர்களை எடுத்து கொண்டால், நகரப்பகுதிகளில்தான் பிஎம்டபிள்யூ, ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஜாகுவார் போன்ற லக்ஸரி கார்களை பார்க்க முடியும். ஆனால் ஹரியானாவின் நிலைமையே வேறு.

அங்கு கிராமப்புற பகுதிகளிலும் கூட இது போன்ற லக்ஸரி கார்களை சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். ஹரியானாவை சேர்ந்த நிலக்கிழார்கள் மற்றும் விவசாயிகள் சாலை அமைத்தல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு பணிகளுக்காக தங்கள் நிலங்களை அரசாங்கத்திற்கு விற்பனை செய்கின்றனர். இதற்காக அவர்களுக்கு பெரும் தொகை கிடைக்கிறது.

இந்த பணத்தின் மூலமாக மிகவும் விலை உயர்ந்த கார்களை கூட அவர்கள் சர்வ சாதாரணமாக வாங்குகின்றனர். உங்களுக்கு இன்னும் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை சொல்கிறோம். பராமரிப்பு செலவை காரணம் காட்டி ஹரியானா மாநிலத்தில் ஒரு சிலர் விலை உயர்ந்த கார்களை கூட அப்படியே கைவிட்டு விடுகின்றனர்.

அதற்கு பதிலாக புதிய கார்களை வாங்கி கொள்கின்றனர். இது பிற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சிகரமாகவும் இருக்கலாம். ஆச்சரியமாகவும் இருக்கலாம். ஆனால் ஹரியானாவில் இது போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்ததுண்டு. இதனிடையே சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
சரி, ஹரியானா மாநில இளைஞர்களுக்கு விலை உயர்ந்த லக்ஸரி கார்கள் மீது ஏன் இவ்வளவு வெறி? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். உள்ளூர் பாடல்கள் மற்றும் பஞ்சாபி பாடல்களில், பிஎம்டபிள்யூ, ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஜாகுவார் போன்ற லக்ஸரி கார் பிராண்டுகளின் பெயர்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.

இளைஞர்கள் மனதில் இது தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதுபோன்ற லக்ஸரி கார்களை ஓட்ட வேண்டும், சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என அவர்கள் நினைக்க தொடங்கி விடுகின்றனர். இத்தகைய சம்பவங்களுக்கு இதுவும் முக்கியமான காரணம். நாமும் ஹரியானாவில் பிறந்திருக்கலாம் என நினைக்கிறீர்களா? இந்த சம்பவம் ொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்


Click it and Unblock the Notifications