இளைஞருக்கு ரூ.50,000 அபராதம்... கட்டியது யார்னு தெரியுமா? இந்த அதிசயம் யார் வாழ்க்கையிலும் நடக்காது
வாகனத்தை மாடிஃபிகேஷன் செய்த இளைஞருக்கு 48,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், யாருமே எதிர்பார்க்காத ஒரு அதிர்ஷ்டம் அவருக்கு அடித்துள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் பிரபலமான பிக்அப்-டிரக்குகளில் இசுஸு வி-க்ராஸ் (Isuzu V-Cross) முக்கியமானது. இந்திய சந்தையில் இசுஸு வி-க்ராஸ் வெகு வேகமாக பிரபலமடைந்து விட்டது. குறிப்பாக ஆஃப் ரோடு ஆர்வலர்கள் பலர் இசுஸு வி-க்ராஸ் பிக்அப்-டிரக்கை சொந்தமாக வைத்திருக்கின்றனர்.

அத்துடன் வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்பவர்கள் மத்தியிலும் இசுஸு வி-க்ராஸ் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இதில், கேரளாவை சேர்ந்த அபின் பாப்ஸ் ஆப்ரஹாம் மிகவும் முக்கியமானவர். அவரிடம் மிகப்பெரிய அளவில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட இசுஸு வி-க்ராஸ் பிக்அப்-டிரக் உள்ளது. இதற்காகவே அபின் பாப்ஸ் ஆப்ரஹாம் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார்.

ஆனால் அபின் பாப்ஸ் ஆப்ரஹாமின் இசுஸு வி-க்ராஸ் பிக்அப்-டிரக் சமீபத்தில் செய்திகளில் அடிபட்டது. ஹெவி மாடிஃபிகேஷன் காரணமாக கேரள மாநில மோட்டார் வாகன துறை அதிகாரிகள், அபின் பாப்ஸ் ஆப்ரஹாமுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததே இதற்கு காரணம். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவருக்கு 48 ஆயிரம் ரூபாயை மோட்டார் வாகன துறை அதிகாரிகள் அபராதமாக விதித்தனர்.

அபின் பாப்ஸ் ஆப்ரஹாமின் இசுஸு வி-க்ராஸ் பிக்அப்-டிரக் ஏற்கனவே இந்தியா முழுக்க பிரபலமாக இருந்து வருகிறது. வாகன மாடிஃபிகேஷனில் ஆர்வம் உள்ள பலரும் அதனை விரும்புகின்றனர். அப்படிப்பட்ட ஒரு சூழலில், அந்த வாகனத்திற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால், வாகன ஆர்வலர்கள் பலரும், அதன் உரிமையாளரான அபின் பாப்ஸ் ஆப்ரஹாமை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

இதில் இந்த பிக்அப்-டிரக்கின் பெரிய ரசிகர் ஒருவர் தானாக முன்வந்து, அபின் பாப்ஸ் ஆப்ரஹாம் அபராதம் செலுத்துவதற்காக, அவருக்கு பெரும் தொகையை வழங்கியுள்ளார். எஸ்வி பெர்ஃபார்மென்ஸ் சென்டர்தான் (SV Performance Centre) அந்த ரசிகர். இது ஆந்திர மாநிலம் விஜயாவாடாவில் செயல்பட்டு வரும் மிக பிரபலமான வாகன மாடிஃபிகேஷன் நிறுவனமாகும்.

மொத்த அபராத தொகையான 48 ஆயிரத்தில், 40 ஆயிரம் ரூபாயை அவர்கள் அபின் பாப்ஸ் ஆப்ரஹாமுக்கு வழங்கியுள்ளனர். இசுஸு வி-க்ராஸ் பிக்அப்-டிரக்கின் உரிமையாளரான அபின் பாப்ஸ் ஆப்ரஹாம் இந்த தகவலை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் இந்த பதிவை வெளியிட்டது முதல், அவரை பின்தொடர்பவர்களிடம் இருந்து இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

உண்மையிலேயே இது ஆச்சரியமான மற்றும் அரிதான நிகழ்வுதான். வாகனத்தை மாடிஃபிகேஷன் செய்த காரணத்திற்காக ஒருவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை, அந்த வாகனத்தை ரசிக்க கூடிய மற்றொருவர் தாமாக முன்வந்து செலுத்துவது என்பதை இதற்கு முன் நாம் எங்கும் பெரிதாக கேள்விபட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் இசுஸு வி-க்ராஸ் பிக்அப்-டிரக்கில், ராட்சத தோற்றம் கொண்ட ஆஃப்டர் மார்க்கெட் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வாகனத்தில் செய்யப்பட்டிருக்கும் மாடிஃபிகேஷன்களை அடுக்கி கொண்டே போகலாம். இந்த அனைத்து மாடிஃபிகேஷன்களும் சேர்ந்து உயரமான தோற்றத்தை வழங்கியுள்ளதுடன், இந்த வாகனத்தை ஒரு அசுரனை போல் மாற்றியுள்ளன.

ஆனால் இந்தியாவை பொறுத்தவரை வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வது என்பது சட்ட விரோதமானது. எந்தவொரு வாகனத்திலும் உருவத்தில் கட்டமைப்பு சார்ந்தோ அல்லது இன்ஜினில் செயல்திறன் சார்ந்தோ மாடிஃபிகேஷன்களை செய்யக்கூடாது. இது ஆபத்தானதும் கூட. இருந்தாலும் வாகன ஆர்வலர்கள் பலர், வாகனங்களை வெவ்வேறு வகையில் மாஃடிபிகேஷன் செய்து கொண்டுதான் உள்ளனர்.


Click it and Unblock the Notifications








