இனி புதியதாக போடப்படும் சாலைகள் இப்படிதான் இருக்க வேண்டுமாம்!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை...
தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சாலை பழுதடைந்திருந்தால் புதிய சாலை போடுவது வழக்கமான ஒன்று தான். பொதுவாக இவ்வாறு பழுதடைந்த சாலையினை சரி செய்யும்போது ஊழியர்கள் பழைய சாலையின் மீதுதான் தாரை ஊற்றுவார்கள்.

தாருடன் ஜல்லி போன்றவை கலந்து புதிய சாலையினை அமைப்பர். இது நமது தமிழகத்தில் வழக்கமாக நடக்கும் ஒன்றாகும். இவ்வாறு சாலை மீதே சாலை போடுவதினால் சாலையின் உயரம் அதிகரிக்கும். ஆனால் அவ்வளவாக பழுதடையாமல், சீரமைக்கப்படாமல் இருக்கும் கிளை சாலைகளின் உயரம் அப்படியே இருக்கும்.

இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதுண்டு. இவ்வாறான சாலைகளின் வளைவுகளில் பைக்குகளில் திரும்பும்போது சிறிய தடுமாற்றத்தை பெரும்பாலான வாகன ஓட்டிகள் சந்திந்திருப்பர்.
நன்கு பைக் ஓட்ட தெரிந்தவர்கள் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே தற்போது தான் பைக்கை ஓட்ட கற்று கொண்டு வருபவர்களுக்கு அத்தகைய வளைவுகளின்போது சற்று பயம் உள்ளுக்குள் வந்துவிடும். சில நேரங்களில் இது விபத்திலும் கொண்டு சென்று முடிக்கிறது.

அதுமட்டுமில்லாமல் சாலையில் உயரம் அதிகரிப்பதால் மழை நீர் அருகில் உள்ள கட்டடங்களுக்குள் புகுந்துவிடுகிறது. மேலும், சில இடங்களில் தண்ணீர் உடன் சேர்த்து புதியதாக போடப்பட்ட சாலையும் கூடவே அடித்து செல்வதையும் பார்த்திருக்கிறோம்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டே, பழுதான சாலைக்கு மாற்று சாலை போடும்போது, பழைய சாலையை முழுவதுமாக சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு புதியதாக சாலை போட வேண்டுமென தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மேற்பரப்பை சுரண்டி விட்டு சாலை போடுவது வீடுகளுக்குள் மழைநீர் புகுவதை வெகுவாக குறைக்கும் என கூறியுள்ள அவர், எந்த சூழ்நிலையிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலைகளின் மட்டத்தை அதிகரிக்கக்கூடாது எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பேரூராட்சி, நகராட்சி சாலைகள் போதிய கனத்துடன் இருப்பதால் பிபிடி சோதனை தேவையில்லை எனவும், சாலை போடும்போதே தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.

பல்வேறு இடங்களில் சாலைகளின் தரம் குறைவாக இருப்பதே அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது என சுட்டிக்காட்டியுள்ள தலைமை செயலாளர், எனவே சாலை போடும்போது அதற்கான மட்டத்தை சரியான அளவில் போட வேண்டும் எனவும் நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Note: Images use for representative purpose


Click it and Unblock the Notifications








