கோவையில் கலக்கல்... கல்யாணத்திற்கு ஹெலிகாப்டரில் வரலாம்... வாடகை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க...
ஹெலிகாப்டரை வாடகைக்கு வழங்கும் சேவை, கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெங்களூரில் நடைபெற்ற பேரனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்த தாத்தா-பாட்டி குறித்த செய்தி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பெங்களூரை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து அவர்கள் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து கொண்டு பயணம் செய்தனர்.

இப்படி ஹெலிகாப்டரை வாடகைக்கு வழங்கும் சேவையானது, தமிழகத்தின் கோவை மாநகரிலும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த எக்ஸ்பிரஸ் ஹாலிடேஸ் (Express Holidays) மற்றும் பிளானெட் எக்ஸ் ஏரோஸ்பேஸ் (Planet X Aerospace) ஆகிய இரண்டு நிறுவனங்களும் கூட்டாக இணைந்து, இந்த சேவையை தற்போது வழங்க தொடங்கியுள்ளன.

பிஸ்னஸ் க்ளாஸ் ஹெலிகாப்டருடன் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தில், இந்த புதிய முயற்சி கையில் எடுக்கப்பட்டுள்ளது. வசதி படைத்தவர்கள் மத்தியில், இந்த வாடகை ஹெலிகாப்டர் சேவை உடனடியாக பெரும் வரவேற்பை பெற தொடங்கியுள்ளது. தற்போது பலர் போட்டி போட்டு கொண்டு, இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ய தொடங்கியுள்ளனர்.

புதிதாக திருமணம் செய்த ஜோடி, தங்கள் திருமணத்தை இந்த ஹெலிகாப்டர் சேவையுடன் வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளனர். அந்த ஜோடி 30 நிமிடங்களுக்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து கொண்டு, தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் உற்சாகமாக பயணம் செய்தனர். இதன் மூலம் கோவை மாநகரின் அழகை, வானில் இருந்து அவர்கள் கண்டுகளித்தனர்.

அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், தங்களின் தேனிலவு பயணத்தை அந்த தம்பதியினர் தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளனர். அதற்கு பதிலாக குடும்ப உறுப்பினர்களுடன் உற்சாகமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்து மகிழ்ந்துள்ளனர்.

இந்த சவாரி குறித்து மணமகள் கூறுகையில், ''ஈஷா யோகா மையம், ஆதியோகி சிலை என வானில் இருந்து கோவையின் அழகை கண்டுகளித்தோம். இது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது'' என்றார். இவர்கள் போன்ற இளம் ஜோடிகள் மட்டுமல்லாது, குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்வதற்கு மற்றவர்களும் விருப்பம் காட்டுகின்றனர்.

இதற்கு எடுத்துக்காட்டாக மற்றொரு குடும்பமும் ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளனர். குடும்ப தலைவர், அவரது மனைவி, அவர்களது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் ஆகியோர், தொண்டாமுத்தூரில் உள்ள தங்களுக்கு சொந்தமான பெரிய பண்ணை, ஈஷா யோகா மற்றும் ஆதியோகி சிலைகளை கண்டுகளிப்பதற்காக ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

இதுகுறித்து பிளானெட் எக்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவரும், ஓய்வு பெற்ற விங் கமாண்டருமான சதீஷ் குமார் கூறுகையில், ''இந்த குடும்பத்தினர் ஆதியோகி சிலையையும், அங்கே சூரிய அஸ்தமனத்தையும் காண விரும்பினர். அத்துடன் தங்களின் பண்ணை வீட்டை காண்பதும் அவர்களின் விருப்பமாக இருந்தது. அதற்கேற்ப அவர்களின் பயணத்தை நாங்கள் திட்டமிட்டோம்'' என்றார்.

திருமணங்களுக்கு மணமக்கள் வருவதற்கும், வானில் இருந்து பூக்களை தூவுவதற்கும், இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்த முடியும் எனவும் சதீஷ் குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ''நோயாளிகளை அழைத்து செல்வது மற்றும் உடல் உறுப்புகளை கொண்டு செல்வது என மருத்துவ அவசரங்களுக்கும் நாங்கள் இந்த சேவையை வழங்குகிறோம்'' என்றார்.

இதுகுறித்து பாலிமர் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கோவை துடியலூர் பகுதியில் உள்ள பிளானெட் எக்ஸ் நிறுவனத்தின் ஹெலிபேடில்தான் இந்த ஹெலிகாப்டர் வழக்கமாக நிறுத்தப்பட்டிருக்கும். விருப்பம் உள்ளவர்கள் இந்த ஹெலிகாப்டருடன் புகைப்படங்களையும் எடுத்து கொள்ளலாம். பயணமும் மேற்கொள்ளலாம். இரண்டுக்கும் அதற்கு ஏற்ற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த ஹெலிகாப்டருடன் ஒரு மணி நேரம் புகைப்படங்களை எடுத்து கொள்வதற்கு 20,000 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டரின் உள்ளே, வெளியே என எங்கு வேண்டுமானாலும் புகைப்படம் எடுத்து கொள்ள முடியும். அதே சமயம் பயணம் மேற்கொள்ள விரும்பினால், அதற்கான கட்டணம் 75,000 ரூபாயிலிருந்து தொடங்குவதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








