இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் டாக்சி சேவை: பெங்களூரில் துவங்குகிறது!
பெங்களூர் நகரின் முக்கிய பகுதிகளில் சர்வதேச விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் சேவை துவங்கப்பட இருக்கிறது. இதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
நாட்டிலேயே முதல்முறையாக பெங்களூரில் ஹெலிகாப்டர் டாக்சி சேவை விரைவில் துவங்கப்பட உள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

குளிர்ச்சியான சீதோஷ்ண நிலைக்கும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெயர் பெற்ற பெங்களூர் நகரம் போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் திணறி வருகிறது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கான வாய்ப்புகளே இல்லாத அளவுக்கு நிலைமை கை மீறி போய்க் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு மெட்ரோ ரயில் திட்டம் இப்போது புதிய ஓரளவு கை கொடுக்க துவங்கி இருக்கிறது. அதேநேரத்தில், சர்வதேச தொடர்பு அதிகம் உள்ள பெங்களூர் நகரில், சர்வதேச விமானம் நிலையம் வெகு தொலைவில் அமைந்துள்ளதால், விமான நிலையத்திற்கு சென்று வருவோருக்கு பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
Recommended Video


விமானத்தில் பயணிக்கும் நேரத்தைவிட, பலருக்கு விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் பயண நேரம் மிக அதிகமாக இருந்து வருகிறது. இதனை கருத்தில்கொண்டு பெங்களூரின் மையப்பகுதியையும், சர்வதேச விமான நிலையத்தையும் எளிதாக இணைக்கும் விதத்தில், ஹெலிகாப்டர் டாக்சி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த தகவல் பெங்களூர் நகரிலிருந்து சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வோருக்கு தித்திப்பான செய்தியாக அமைந்துள்ளது. ஆம், பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் இருக்கும் எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து தேவனஹள்ளியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் சேவை துவங்கப்பட இருக்கிறது.

பெங்களூர் சர்வதேச விமான நிலைய நிறுவனமும், தம்பி ஏவியேஷன் நிறுவனமும் இணைந்து இந்த ஹெலிகாப்டர் சேவையை துவங்க இருக்கின்றன. 13 பேர் பயணிக்கும் வசதி கொண்ட பெல் 412 என்ற ஹெலிகாப்டர் மாடலும், 5 பேர் பயணிக்கும் வசதி கொண்ட பெல் 407 என்ற மாடலும் இந்த சேவைக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.

எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்கு பரபரப்பு மிகுந்த சமயங்களில் இரண்டரை மணி நேரம் ஆகும். அதுவே ஹெலிகாப்டரில் வெறும் 15 நிமிடங்களில் சென்றுவிட முடியும்.

இந்த ஹெலிகாப்டர் சேவை விமான நிலையத்திற்கு செல்வோருக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதற்கான கட்டண விபரங்கள் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. எனினும், இது மிகவும் சவுகரியமான தொகையாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரானிக் சிட்டியிலிருந்து மட்டுமின்றி, பெங்களூர் நகரின் இதரப் பகுதிகளில் இருந்தும் ஹெலிகாப்டர் சேவையை அளிப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. அதாவது, பெங்களூர் நகரில் தனியார் கட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 90 ஹெலிபேடுகள் உள்ளன.

அவற்றையும் பயன்படுத்தி ஹெலிகாப்டர் சேவையை விரிவுப்படுத்திக் கொள்வதற்கான திட்டமும் உள்ளது. சிவில் ஏவியேஷன் விதிகளின்படி, விமான தடங்களை பாதிக்காத வகையில், 5,000 அடிக்கும் குறைவான உயரத்தில் ஹெலிகாப்டர்கள் பறப்பதற்கு அனுமதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வரும் நவம்பர் மாதம் பெங்களூரில் ஹெலிகாப்டர் சேவை துவங்கப்பட இருக்கிறது. இந்த திட்டம் வெற்றி பெற்றால், நாட்டின் பிற முக்கிய பெரு நகரங்களிலும் ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








