புது அதிரடி! 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்! மீறினால் என்ன நடக்கும் தெரியுமா?
4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தலை கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இரண்டு பேரும் தலை கவசம் அணிய வேண்டும் என்ற விதி இந்தியாவில் அமலில் இருந்து வருகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை கடைபிடிப்பது கிடையாது. இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு இது முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

எனவே சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்கு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்கி வருகிறது. இதன்படி 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது தலைகவசம் அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

மோட்டார் வாகன சட்டத்தில் சமீபத்தில் மத்திய அரசு செய்த திருத்தம் மூலம் 4 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தலை கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து இந்த விதிமுறையை தீவிரமாக அமல்படுத்தும்படி கர்நாடக மாநில போக்குவரத்து துறை தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை இரு சக்கர வாகனங்களில் அழைத்து செல்லும்போது, அவர்களுக்கும் தலை கவசம் அணிவித்திருப்பது இனி கட்டாயம். கட்டாய தலை கவச விதிமுறையை மீறுபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை மூன்று மாதங்களுக்கு இடை நீக்கம் செய்வதற்கு கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அத்துடன் அவர்கள் அபராதமும் செலுத்த வேண்டியது வரும். மோட்டார் வாகன (திருத்த) சட்டம் 2019ன் படி, தலை கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆனால் இந்த அபராத தொகையை கர்நாடக மாநில அரசு 500 ரூபாயாக குறைத்து நிர்ணயம் செய்துள்ளது.

கர்நாடகாவில் தற்போதைய நிலையில் 1.6 கோடி இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 60 லட்சம் இரு சக்கர வாகனங்கள் பெங்களூரில் உள்ளன. பெங்களூரில் தலை கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே வருகிறது.

இதன்படி கடந்த 2018ம் ஆண்டு 16.4 லட்சம் வழக்குகளும், 2019ம் ஆண்டு 20.3 லட்சம் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டை பொறுத்தவரையில் செப்டம்பர் மாதம் வரையில் மட்டுமே 20.7 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் தற்போது விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், வரும் காலங்களில் விதிமீறல்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு இருக்க கூடிய அதிகபட்ச பாதுகாப்பே தலை கவசம்தான். அதனை உணர்ந்து தலை கவசம் அணிந்து பயணிக்க அனைவரும் முன்வர வேண்டும். இது அபராதம் செலுத்துவதில் இருந்து உங்களை பாதுகாப்பதுடன் மட்டுமல்லாது, சாலை விபத்துக்களின்போது உயிரிழப்புகளையும் தடுக்கும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








