தெருவுக்கு தெரு நின்னு பிடிக்க போறாங்க... ஹெல்மெட்டில் இனிமேல் இது இருந்தா அவ்ளோதான்... என்னனு தெரியுமா?
ஹெல்மெட்டில் இனிமேல் இது இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹெல்மெட்களில் கேமராக்களை பொருத்துவதும், அதன் மூலம் பொது சாலைகளில் வீடியோ எடுப்பதும் சட்டத்திற்கு புறம்பானது என கேரள மாநில மோட்டார் வாகன துறையின் போக்குவரத்து கமிஷனர் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த எச்சரிக்கையை மீறி செயல்படுபவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹெல்மெட்களில் கேமராக்களை பொருத்தியுள்ள நபர்களால் இரு சக்கர வாகனங்களை கவனத்துடன் ஓட்ட முடியாது என்பதுதான் இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. இத்தகைய நபர்களால் மற்ற வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் போக்குவரத்து கமிஷனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த உத்தரவு தொடர்பாக தற்போது வரை ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை. எனினும் வரும் நாட்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேடிஎம் பைக் ஓட்டி வந்த ஒருவரை கேரள காவல் துறையினர் பிடித்தனர். அவரது ஹெல்மெட்டில் கேமரா பொருத்தப்பட்டிருந்ததுதான் இதற்கு காரணம்.

அந்த சமயத்தில் ஹெல்மெட்டில் கேமரா பொருத்த கூடாது என காவல் துறையினர் கூறினர். இதனால் அந்த பைக் ரைடருக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சட்டத்தில் என்ன உள்ளது? என்பது தொடர்பாக அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இறுதியாக அந்த பைக் ரைடருக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.

ஆனால் பைக்கில் மிரர்கள் இல்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சூழலில்தான் ஹெல்மெட்டில் கேமராக்கள் பொருத்த கூடாது என போக்குவரத்து கமிஷனர் தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதற்கு பின்னால் அவர் தெரிவித்துள்ள காரணத்தில் உண்மை இருக்கவே செய்கிறது.

அதே சமயம் கேமராக்களால் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன என்பதையும் நாம் மறுத்து விட முடியாது. பொது சாலைகளில் கேமராக்கள் மிகவும் அவசியம். பொதுவாக வெளிநாடுகளில் கார்களின் டேஷ்போர்டில் கேமராக்கள் பொருத்தப்படுவது வாடிக்கையான நிகழ்வாக மாறி விட்டது. அதே டிரெண்ட் இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவிலும் தற்போது பலர் காரின் டேஷ்போர்டில் கேமராக்களை பொருத்துகின்றனர். அதேபோல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மத்தியிலும் கேமராவுடன் கூடிய ஹெல்மெட்களை பயன்படுத்தும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கேமராவுடன் கூடிய ஹெல்மெட்டை அணிந்து கொண்டு இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோரை தற்போது நம்மால் அதிகம் பார்க்க முடிகிறது.

ஒரு சிலர் தாங்கள் மேற்கொள்ளும் பயணங்களை ஹெல்மெட்டில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் பதிவு செய்து சமூக வலை தளங்களில் வெளியிடுகின்றனர். இன்னும் சிலர் இந்த காட்சிகளை ஒரு ஆதாரமாக பயன்படுத்துகின்றனர். அதாவது விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவில் பதிவான காட்சிகள் முக்கியமான ஆதாரமாக இருக்கும்.

தவறே செய்யாமல் குற்றம் சாட்டப்பட்டால், இந்த வீடியோ காட்சிகளை காண்பித்து, போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றியிருப்பதை தெரிவிக்கலாம். கடந்த காலங்களில் இப்படியான சம்பவங்கள் பலமுறை நடைபெற்றுள்ளன. தேவையில்லாமல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பலர் கேமராவில் பதிவான காட்சிகள் மூலமாக தப்பியுள்ளனர்.

அதேபோல் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்ட கேமராக்களில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் பலமுறை சமூக வலை தளங்களில் வைரலாகவும் பரவியுள்ளன. காவல் துறையினர் தவறு செய்யும் காட்சிகளும் இதில் அடக்கம். அதேபோல் காவல் துறையினர் செய்த நல்ல விஷயங்களும் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளன.

அதே நேரத்தில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளையும் கூட ஒரு சிலர் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா மூலமாக பதிவு செய்து விடுகின்றனர். இது மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. எந்தவொரு விஷயத்திலும் நன்மைகளும் இருக்கும். தீமைகளும் இருக்கும்.

ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்த கேமராக்கள் காரணமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களின் கவனம் சிதறி விபத்து நடைபெறலாம் என்பதை எப்படி மறுக்க முடியாதோ, அதேபோல் இந்த கேமராவில் பதிவு செய்யப்படும் காட்சிகள் பல்வேறு விஷயங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications








