கோவை-டூ-ஷீரடி செல்லும் தனியார் ரயில்... ரயில் டிக்கெட்டை எங்கு வாங்கலாம்?.. கட்டணம் எவ்வளவு?.. இதோ முழு விபரம்
கௌரவ் திட்டத்தின்கீழ் பயன்பாட்டிற்கு வந்திருக்கும் இந்தியாவின் முதல் ரயில் சேவை பற்றிய முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தனியார் ரயில் சேவை முதல் முறையாக இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றது. கௌரவ் திட்டத்தின்கீழ் சுமார் 100 ரயில்களை நாடு முழுவதும் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன் அடிப்படையிலேயே முதல் ரயில் சேவை வடக்கு கோயம்பத்தூர் - ஷீரடியை தடத்தை இணைக்கும் வகையில் நேற்று தொடங்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த தனியார் மயமாக்கும் செயலுக்கே ரயில்வே ஊழியர்கள் மத்தியில் கடும் கண்டனத்தைப் பெற்றிருக்கின்றது. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே தனியார் ரயில் சேவை விழாவை போல் தொடங்கியது. தெற்கு ரயில்வேவைச் சார்ந்த மூத்த அதிகாரிகள் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த ரயில் ஷீரடிக்கு மக்களை தரிசனத்திற்கு அழைத்து செல்லும் வகையில் இயங்கும். மேலும், வாரம் ஒரு முறை மட்டுமே இயங்கும். பயணத்தின்போதும், பயணத்திற்கு பின்னரும் இந்த ரயிலை தற்போது தனியார் நிறுவனமே கவனிக்க இருக்கின்றது. அதாவது, எந்த நிறுவனத்தின் வசம் தற்போது ரயில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ, அந்த ரயிலே டிக்கெட் விற்பனை, பராமரிப்பு பணிகள், பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை மேற்கொள்ளும்.

இந்த ரயிலுக்கான டிக்கெட்டுகளை கோவை, ஈரோ மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள சில தனியார் நிறுவனங்கள் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். மேலும், கோவை, சேலம், ஈரோ மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து சாய்பாபா கோவில்களிலும் ரயிலுக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருவிதமாக டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும். ரயில் பயணத்திற்கான கட்டணம் மட்டும் மற்றும் பேக்கேஜ் திட்டம் என இரு விதங்களில் டிக்கெட்டுகள் கிடைக்கும்.
வெறும் பயணத்திற்கு மட்டுமான டிக்கெட் கட்டண விபரம்:
ஏசி அல்லாத ஸ்லீப்பர் கோச்சிற்கு ரூ. 2,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3ஆம் வகுப்பு ஏசிக்கு ரூ. 5 ஆயிரம் கட்டணம்.
2 ஆம் வகுப்பு ஏசிக்கு ரூ. 7 ஆயிரம் கட்டணம்.
முதலாம் வகுப்பு ஏசிக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பேக்கேஜ் கட்டணம் விபரம்:
ஏசி அல்லாத ஸ்லீப்பர் கோச்சிற்கு ரூ. 4,999 கட்டணமும்
3 ஆம் வகுப்பு ஏசிக்கு ரூ. 7,999 கட்டணமும்
2 ஆம் வகுப்பு ஏசிக்கு ரூ. 9,999 கட்டணமும்
முதல் வகுப்பு ஏசிக்கு ரூ. 12,999 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவையில் ஷீரடி சென்று திரும்பி வருவதற்கான கட்டணம் இதுவாகும். இதுமட்டுமின்றி சீரடி சிறப்பு தரிசனம், மூவர் தங்கும் வசதிக் கொண்ட ஏசி ரூம், டூர் வழிகாட்டி மற்றும் பயண இன்சூரன்ஸ் ஆகியவையும் இந்த கட்டணத்தில் அடங்கும். ஆனால், உணவு மற்றும் மந்திராலயம் தரிசனம் எல்லாம் தனிப்பட்டவை என தனியார் ரயில்சேவை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது ஓர் ஐந்து நாட்கள் பயணம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பொதுவாக கோவையில் இருந்து ஷீரடி சென்று வர ஸ்லீப்பர் கோச்சிற்கு ரூ. 1,000 முதல் ரூ. 1,200 வரை செலவாகின்றது. ஆனால், தங்களுடைய நிர்வாகமோ சென்று மீண்டும் திரும்பி வருவதற்கே ரூ. 2,500ஐ மட்டுமே கட்டணமாக நிர்ணயித்துள்ளோம் என தனியார் ரயில் சேவை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணத்தின்போது இந்த தனியார் நிறுவனம் ஏராளமான சிறப்பு வசதிகளை வழங்குவதாக தெரிவித்திருக்கின்றது. அதாவது, பயணிக்கு தேவையான தலையணை, பெட்ஷீட், டூத் பிரஷ், பேஸ்ட், சோப்பு உள்ளிட்டவற்றை வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், பெட்ஷீட்டை பயணிகள் திரும்பி தர தேவையில்லை என்றும், அதை அவர்களே வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் என்றும் கூறியிருக்கின்றது.

இதுமட்டுமின்றி அவசர காலத்திற்கு உதவும் வகையில் ரயில் ஓர் மருத்துவர் நிர்ணயிக்கப்படுவர் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, அரை மணி நேர இடைவெளியில் கழிவறைகளை சுத்தம் செய்வதற்காக பணியாளர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவை பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்க திட்டமிட்டுள்ளோம். இதற்கும் பெரியளவில் கட்டணம் வசூலிக்கப்போவதில்லை என அது கூறியுள்ளது.

இவ்வாறு பல்வேறு தகவல்கள் வெளியிட்டும் இந்த தனியார் ரயில் சேவைக்கு எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக, எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் கருப்பு சட்டை மற்றும் கொடியை பிடித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனியார்களுக்கு ரயில்வே துறை விற்கப்படுவதைக் கண்டித்து மத்திய அரசு மற்றும் ரயில்வே அமைச்சகத்திற்கு ஏதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இருப்பினும், பாரத் கௌரவ் ரயில் அதன் முதல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








