ரயில் விபத்தின்போது நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி? இன்னொரு ஒடிசா ரயில் விபத்து சம்பவம் நடக்கவே கூடாது!!
இந்தியாவில் சமீப சில காலமாக ரயில் சார்ந்து விபத்துகள் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, சமீபத்திய ஒடிசா ரயில் விபத்து சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்வலையில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.
இருப்பினும், ரயில்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறையவில்லை. ஏனெனில், ஏழைகளுக்கான மலிவு விலை போக்குவரத்தாக ரயில்கள் இருக்கின்றன. ஆகையால், இது அவர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாததாக அமைந்து உள்ளது. ஓர் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல பேருந்துகள், விமானங்களில் பல ஆயிரக் கணக்கான ரூபாய் செலவாகும் எனில், ரயில்களில் செல்ல ஒரு சில நூறு ரூபாய்கள் அல்லது ஆயிரங்களே போதுமானது.

எனவேதான், இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிகவும் ஃபேமஸானதாக இருக்கின்றது. இந்த வரவேற்பே நாட்டின் மிகப் பெரிய வலையமைப்பைக் கொண்ட போக்குவரத்தாக இந்தியன் ரயில்வேஸ் உருவெடுக்க காரணமாக அமைந்திருக்கின்றது. இந்த மாதிரியான ரயில்களிலேயே நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் விபத்துகள் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலில் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது என்கிற பாதுகாப்பு வழிமுறைகளையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ரயிலின் மையப் பகுதியில் உள்ள இருக்கைகளை தேர்வு செய்யலாம்: பெரும்பாலான ரயில் விபத்துகளில் மிக மோசமான பின் விளைவுகளை முன் பக்க ரயில் பெட்டிகளே சந்திக்கின்றன. மையப் பகுதியில் இருக்கும் பெட்டிகளில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படுகின்றன. இதேபோல், ரயிலின் கடை வரிசை பெட்டிகளும் விபத்துகளின்போது அதிக பாதிப்பைச் சந்திக்கின்றன.

ஆகையால், முடிந்த அளவு ரயிலின் மையப் பகுதியில் உள்ள பெட்டிகளை பயணங்களின்போது தேர்வு செய்யலாம். ஆனால், நம்முடைய துரதிர்ஷ்டம் இந்தியாவில் ரயில் கோச்சுகளை தேர்வு ஆப்ஷன் இல்லை. லோவர் பர்த், அப்பர் பர்த், மிடில் பர்த் மற்றும் சைடு பர்த் என பர்த்துகளை தேர்வு செய்யும் வசதியே உள்ளது.
பின்னோக்கி பார்த்து உட்காரலாம்: ரயில் விபத்தைச் சந்திக்கும் எனில் அந்த நேரத்தில் முன்னோக்கி பார்தது அமர்ந்துக் கொண்டிருப்பவர்கள் முன்னோக்கி தள்ளப்படுவார்கள். அதுவே நாம் பின்னோக்கி பார்த்து அமர்ந்திருந்தால் இருக்கையை நோக்கி தள்ளப்படுவோம். ஏற்கனவே நம்முடைய முதுகு பகுதி பின் பக்கத்தை சப்போர்ட் செய்தவாறு இருக்கும் என்பதால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது. ஆனால், முன்னோக்கி பார்த்தவாறு அமர்ந்திருப்பவர்களுக்கு இது மிகுந்த ஆபத்தான சூழலை ஏற்படுத்திவிடும்.

அவசரகால வெளியேற்றம் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ளுங்கள்: எமெர்ஜென்சி எக்ஸிட் எனப்படும் அவசர கால வெளியேற்றம் எங்கு இருக்கின்றது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அவசர நேரத்தில் உடனடியாக வெளியேற அவை உதவியாக இருக்கும். ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளிலும் இந்த அவசர கால வெளியேற்றம் என்பது கட்டாயம் இருக்கும். அதை எளிதில் அடையாள காண வேண்டும் என்பதற்காக அந்த ஜன்னல் சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கும்.
விரைந்து வெளியேற முயற்சிக்கவும்: ஆபத்து நடைபெற்றிருப்பதை உணர்ந்தால் உடனடியாக உங்களையும், உங்களுடன் வந்திருப்பவர்களையும் மட்டும் பாதுகாக்க முயற்சிக்க வேண்டும். உடைமைகளை தேடி நேரத்தை வீணடிக்கக் கூடாது. சில நேரங்களில் ரயில் விபத்துகள் தீ விபத்தாக மாற கூடும். ஆகையால், விபத்து நடைபெற்ற உடனேயே உங்களையும், உங்களின் அன்புக்குரியவர்களையும் மட்டும் பத்திரப்படுத்த முயற்சிக்க வேண்டும். தேவையில்லாமல் நேரத்தை விரையமாக்கக் கூடாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயில் விபத்துகள் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதேவேளையில், விபத்துகளைக் குறைக்கும் முயற்சியில் ஏற்கனவே ரயில்வேத்துறைக் களமிறங்கி விட்டது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே காவச் சிஸ்டம். இது இரு ரயில்கள் எதிரெதிரில் வருமானால் தானாக ரயிலை நிறுத்த உதவும். சுமார் 400 மீட்டர் இடைவெளியில் ரயில்களை இந்த சிஸ்டம் நிறுத்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுபோலவே பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற அம்சங்களையும் ரயில்களில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. குறிப்பாக கார்களில் இருக்கும் சீட் பெல்ட் மற்றும் ஏர் பேக் போன்ற புதுமுக பாதுகாப்பு அம்சங்கள் ரயில்களிலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









