விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது அந்தரத்தில் தொங்கியபடி செல்லும் ஸ்கை பேருந்துகள்... ஸ்கை பஸ்ஸா அப்படினா என்ன?
புல்லட் ரயிலை போல் வெகு விரைவில் இந்தியாவில் ஸ்கை பஸ்களும் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் சமீபத்திய பேட்டியின் வாயிலாக இந்த தகவல் உறுதியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் வெகு விரைவில் முதல் ஸ்கை பஸ் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல் தெரிவித்துள்ளார். டெல்லி - ஹரியானா இடையிலேயே முதல் ஸ்கை பேருந்து இயங்க இருக்கின்றது. ஸ்கை பேருந்து என்பது மெட்ரோவைபோல் இயங்கக் கூடிய போக்குவரத்து அமைப்பாகும். ஆனால், அதிக கோச்சுகளை இது கொண்டிருக்கின்றது. பேருந்தை போல் மிக குறுகிய அளவிலேயே இருக்கும்.

மேலும், அந்தரத்தில் தொங்கியபடி அவை செல்லும். இதனால்தான் இந்த பேருந்துகளை பறக்கும் பேருந்துகள் என்றும் அழைக்கின்றனர். தற்போது சென்னை கடற்கரை - தரமணி இடையே இயங்கக் கூடிய பறக்கும் ரயிலைப் போலே இந்த ஸ்கை பேருந்துகள் இயங்கும். இந்த பேருந்துகள் வழக்கமான பேருந்துகளில் இருந்து பல மடங்கு மாறுபட்டுக் காணப்படும்.

குறிப்பாக, பெட்ரோல் - டீசல் ஆகிய எரிபொருளுக்கு மாற்றாக அவை மின்சாரத்தால் இயங்கும். காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு இந்த வாகனம் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்பட இருக்கின்றது. இதன் வாயிலாக கணிசமாக போக்குவரத்து நெரிசலையும் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கின்றது.

சமீபத்தில் பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்ட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, ஸ்கை பேருந்தின் வருகையை உறுதிப்படுத்தினார். இதுகுறித்து பேசிய அவர், "விரைவில் ஸ்கை பேருந்துகளின் பயன்பாடு தொடங்க இருப்பதாகவும், இதன் வாயிலாக பெரும் அளவில் மாசுபாடு குறையும்" என தெரிவித்தார்.

ஸ்கை பேருந்துகள், தவுலா குவானில் தொடங்கி மனேசர் வரையில் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஆகையால் விரைவில் இந்த ஸ்கை பேருந்துகள் இந்தியா அலங்கரிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே பலரிடத்தில் ஸ்கை பேருந்து என்றால் என்ற சந்தேகம் தற்போது எழும்பியிருக்கின்றது. இதனை விளக்கும் தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஸ்கை பேருந்து என்றால் என்ன?
ஸ்கை பஸ் மெட்ரோ ரயிலை போல் இருக்கும். ஆனால், அதன் இயக்கம் சற்று வித்தியாசமாக இருக்கும். ஓர் குரங்கு அதன் கைகளால் மரக் கிளை ஊடாக செல்வதைப் போல் இந்த பேருந்துகள் பயணிக்கும். அதாவது, அந்தரத்தில் தொங்கியபடி செல்வதைப் போல் ஸ்கை பேருந்து இயங்கும். போக்குவரத்தில் எந்த தடையும் இருக்காது என்பதால் அது அதிக வேகத்தில் பயணிக்கும்.

மிக தெளிவாகக் கூற வேண்டும் என்றால் ஸ்கைபஸ் மணிக்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. ஆகையால், சாலையில் அதிக வேகத்தில் செல்ல முடியாதவர்கள் இந்த ஸ்கை பஸ் வாயிலாக அதிக வேகத்தில் செல்ல முடியும். மேலும், வெறும் 24 நிமிடங்களில் தௌலா குவான் இருந்து மனேசரை அது சென்று சேரும். ஆகையால், இந்த போக்குவரத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய தொழில்நுட்ப வல்லுநர் பி. ராஜாராம் எனபவராலேயே ஸ்கை பஸ் சிஸ்டம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஜெர்மனியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் எச்-பாஹ்ன் மற்றும் சஸ்பென்ஷன் ரயிலை (Schwebebahn) அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்கை பஸ் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் ஏற்கனவே இந்த ஸ்கைபஸ் மெட்ரோ டிரையலின் அடிப்படையில் தொடங்கப்பட்டது.

2004ஆம் ஆண்டில் அப்பணிகள் தொடங்கின. ஆனால், அப்போது ஏற்பட்ட ஓர் மிக பெரிய விபத்து ஸ்கை பஸ் அமைக்கும் பணிக்கு முற்றுப்புள்ளி போட வைத்தது. விபத்தில் ஒரு பணியாளர் கொள்ளப்பட்டார். மேலும், பலர் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகினர். இந்த நிலையிலேயே மீண்டும் ஸ்கை பஸ்ஸை இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் சமீப காலமாக மின் வாகன பயன்பாட்டு ஊக்குவிப்பு மிக வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்களை மின் வாகன பயன்பாட்டிற்கு மாற்றும் விதமாக வரி சலுகை மற்றும் மானியம் உள்ளிட்டவற்றை அரசுகள் வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே மாசு கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து நெரிசலைக்கு குறைக்கும் பொருட்டு விரைவில் ஸ்கை பேருந்துகள் நாட்டில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் மட்டுமின்றி விரைவில் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த வாகனம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உறுதிப்படுத்தியிருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








