ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் இருந்து திடீரென தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்! இந்த தப்பை இனி யாரும் பண்ணீராதீங்க!
இந்திய சாலைகளில் தினந்தோறும் எண்ணிலடங்கா விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு சில விபத்துக்களின் வீடியோ (Video) வெளியாகி, காண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி விடுகின்றன. இந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்று, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோ பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
அங்கு சமீபத்தில் ரெனால்ட் கைகர் (Renault Kiger) கார் ஒன்றை, ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) பைக்கில் 2 இளைஞர்கள் பின் தொடர்ந்து சென்றனர். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசி கொண்டே பயணம் செய்ததை போல் தெரிகிறது. இந்த 2 வாகனங்களும் மணிக்கு சுமார் 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்தான் சென்று கொண்டிருந்தன.

அத்துடன் 2 வாகனங்களுக்கும் இடையே இடைவெளியும் நன்றாகவே இருந்தது. ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக காரின் வேகத்தை குறைக்கும் நிலைக்கு ரெனால்ட் கைகர் டிரைவர் ஆளானார். எனவே பைக்கை ஓட்டி வந்தவரும், வேகத்தை குறைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
அவர் பிரேக் பிடிக்கவில்லை என்பதுடன், வேகத்தையும் குறைக்கவில்லை. இதன் காரணமாக காரின் பின் பகுதியில் பைக் மோதியது. மோதிய வேகத்தில் பைக்கில் இருந்த 2 இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். பைக்கை ஓட்டி வந்தவரின் கவனம் சிதறிய காரணத்தாலேயே இந்த சாலை விபத்து நிகழ்ந்துள்ளது.

வாகனத்தை ஓட்டி கொண்டிருக்கும்போது நமது கவனம் சிதற கூடாது. ஆனால் பலர் திடீரென வேறு சிந்தனைகளுக்கு சென்று விடுகின்றனர். இந்தியாவில் நடைபெற்று வரும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு இதுவே மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. லக்னோவில் நடைபெற்றுள்ள விபத்து இதை நமக்கு மிக தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
லக்னோவில் நடைபெற்றுள்ள இந்த விபத்து, பின் பக்கத்தை பதிவு செய்யக்கூடிய காரின் டேஷ்போர்டு கேமரா மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கார்களில் டேஷ்போர்டு கேமராக்கள் ஏன் அவசியம்? என்ற இன்னொரு பாடத்தையும் இந்த விபத்து நமக்கு கற்று தருகிறது. சாலை விபத்துக்களின்போது, உங்கள் மீது தவறு இல்லை என்றால், டேஷ்போர்டு கேமரா பதிவை ஆதாரமாக சமர்ப்பிக்க முடியும்.
அத்துடன் இந்த வீடியோ பதிவுகள், இன்சூரன்ஸ் க்ளைம் செய்யும் நடைமுறைகளையும் எளிமையாக்கும். எனவே உங்கள் காரில் உடனடியாக டேஷ்போர்டு கேமரா பொருத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். டேஷ்போர்டு கேமராவிற்காக நீங்கள் செலவழிக்கும் பணம் வீண் அல்ல. அது நிச்சயம் உங்களுக்கு பலன் தரும் முதலீடாகதான் இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடந்ததை எல்லாம் வைத்து பார்க்கையில், பைக்கில் வந்த 2 பேர் மீதுதான் தவறு உள்ளதை போல் தெரிகிறது. இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த நபர் ஹெல்மெட் வேறு அணியவில்லை. இவர்கள் செய்த தவறுகளை, செய்யாமல் இருந்தால் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.


Click it and Unblock the Notifications








