டோல் கட்டணத்தை உடனே குறையுங்க! சாலையை இப்படி வெச்சிக்கிட்டு... மத்திய அரசு இப்போ இதுக்கு பதில் சொல்லணும்
எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கக் கூடியதாக சாலை போக்குவரத்து உள்ளது. இந்தியாவில் நெடுஞ்சாலைகள் இலட்சக்கணக்கிலான கிமீ தொலைவிற்கு உள்ளது. இருப்பினும், அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளிலும் தொடர்ந்து மத்திய அரசு ஈடுப்பட்டு வருகிறது. புதிய சாலைகளை அமைப்பது மட்டுமில்லாமல், அவற்றை தொடர்ந்து பராமரிக்க நிதி தேவை. அந்த நிதி நம்மிடம் இருந்துதான் சுங்கச்சாவடி கட்டணமாக செல்கிறது. அதற்கேற்ப நெடுஞ்சாலைகளையும், விரைவுச்சாலைகளையும் அமைத்து கொடுப்பதுதான் அரசாங்கத்தின் கடமை ஆகும்.
கடந்த சில வருடங்களில் இவ்வாறான நெடுஞ்சாலைகளை அமைக்கும் பணிகளில் மத்திய அரசாங்கத்தின் நெடுஞ்சாலை துறை பல விதங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது. துவக்கத்திலேயே நல்ல தரமான சாலையை அமைக்க முயற்சிக்கின்றனர். இருப்பினும், சில நெடுஞ்சாலைகள்/ விரைவுச்சாலைகளில் சில பகுதிகள் குண்டும் குழியுமாக இருப்பதை பார்க்க முடிகிறது.

சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தாலும், நாம் எப்போதும் கொடுக்கும் சுங்கச்சாவடி கட்டணத்தை தான் கொடுக்கிறோம். ஒரு சில பகுதிகளில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தால் 4-லேன் சாலையில் 2 அல்லது 1 லேனில் மட்டுமே பயணிக்க முடிகிறது. ஆனால், அதற்காக எல்லாம் சுங்க கட்டணத்தை அரசு குறைத்துக் கொள்வதில்லை.
ஒரு சில விரைவுச்சாலைகள் முழுவதுமாக அமைக்கப்படுவதற்கு முன்பே சுங்கச்சாவடிகள் செயல்பட துவங்குவதையும் இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். இதைதான் தற்போது, ஜம்மூ & காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றம் மத்திய அரசாங்கத்திடம் கேட்டுள்ளது. ஜம்மூ & காஷ்மீர் போன்ற நிறைய மலைப்பிரதேச பகுதிகளை கொண்ட மாநிலத்தில் நெடுஞ்சாலைகளை அமைப்பது மிகவும் கடினமான காரியம் ஆகும்.

அவ்வப்போது மழை பெய்து, மண்சரிவுகள் ஏற்பட்டு ஆங்காங்கே சாலைகள் சேதமடைவதை ஜம்மூ & காஷ்மீரில் பரவலாக காண முடியும். இதனால் அத்தகைய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன; பயண நேரம் அதிகமாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதால், தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அத்தகைய சாலைகளில் மக்களிடம் இருந்து சுங்கச்சாவடி கட்டணத்தை பெற கூடாது என ஜம்மூ & காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜம்மூ & காஷ்மீர் மாநிலத்தில் லகான்புர்- உதாம்புர் பகுதிகளுக்கு இடையே சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முழுவதுமாக நிறைவடையும் வரையில், இதற்கு இடையே உள்ள லகான்புர் மற்றும் பன் சுங்கச்சாவடிகளில் வெறும் 20% கட்டணத்தை மட்டுமே வாகன ஓட்டிகளிடம் இருந்து பெற வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறைக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

சுங்கச்சாவடி கட்டணங்களை தனியார் நிறுவனங்கள் வாயிலாக மத்திய அரசாங்கம் நாடு முழுவதும் வசூலித்து வருகிறது. குறிப்பிட்ட தொலைவிற்கு அந்த நெடுஞ்சாலை/ விரைவுச்சாலையை பராமரிப்பதும் அந்த நிறுவனத்தின் பணியே ஆகும். இந்த வேலைகள் எல்லாம் மத்திய நெடுஞ்சாலை துறையின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் நடக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜம்மூ & காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றம் சரியான நீதியை வழங்கியுள்ளதாகவே பார்க்கிறோம். எந்தவொரு சாலையையும், எவ்வளவு தரமானதாக அமைத்தாலும் ஒரு கட்டத்தில் சேதமடைவதும், அதனை நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சரி செய்வதும் தவிர்க்க முடியாதே ஒன்றே. ஆனால், அத்தகைய நேரங்களில் வாகன ஓட்டிகள் அடையும் சிரமத்தையும் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









