விலை உயர்ந்த பைக்குகளை பறிமுதல் செய்து அதிரடி காட்டிய போலீசார்... காரணம் இதுதான்...
விலை உயர்ந்த பைக்குகளை பறிமுதல் செய்து போலீசார் அதிரடி காட்டியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் இரு சக்கர வாகனங்களை வாங்கும்போது இரண்டு முக்கியமான விஷயங்களை மட்டுமே அதிகம் கவனிப்பார்கள். ஒன்று விலை. மற்றொன்று மைலேஜ். இந்த இரண்டு விஷயங்களை பொறுத்துதான், இரு சக்கர வாகன தேர்வு அமையும்.

ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. விலை மற்றும் மைலேஜ் ஆகிய விஷயங்களை காட்டிலும், ஸ்டைல், பெர்ஃபார்மென்ஸ், வேகம் ஆகிய விஷயங்களுக்குதான் வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள்.

இந்திய இளைஞர்கள் மத்தியில் டூரிங் மற்றும் ரேஸிங் உள்ளிட்ட விஷயங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. எனவே அதிக விலை என்பதையும் பொருட்படுத்தாமல், ராயல் என்பீல்டு, கேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் பைக்குகளை வாங்குவதில் இளைஞர்கள் அதிக முனைப்பு காட்டுகின்றனர்.

ஆனால் பொது சாலைகளில் பைக் ரேஸிங் மற்றும் ஸ்டண்டிங்கில் ஈடுபடுவது சட்ட விரோதமானது என்பது தெரிந்திருந்தும் கூட இளைஞர்கள் பலர் அதனை தொடர்ந்து செய்து கொண்டுதான் உள்ளனர். அத்தகைய இளைஞர்களை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டிணம் நகரில், சட்ட விரோதமான ரேஸிங்கிற்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிள்களை போக்குவரத்து போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இதில், பலவும் ஹை-எண்ட் பைக்குகள் ஆகும்.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''நாங்கள் பறிமுதல் செய்தவற்றில் பெரும்பாலானவை டாப்-எண்ட் பைக்குகள் ஆகும். டாப்-எண்ட் பைக் உரிமையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த பைக்குகள் வழங்கும் வேகம் காரணமாக இளைஞர்கள் அதிகளவில் ஈர்க்கப்படுகின்றனர்'' என்றார். இதுகுறித்து விசாகப்பட்டிணத்தில் உள்ள ஒரு ராயல் என்பீல்டு ஷோரூம் ஊழியர் கூறுகையில், ''கடந்த சில ஆண்டுகளாக டாப்-எண்ட் பைக்குகள் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

வெறுமனே விசாரித்து செல்வதுடன் வாடிக்கையாளர்கள் நின்று விடுவதில்லை. பைக்குகளை ஆர்வத்துடன் வாங்கவும் செய்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள்தான் அதிகம். வேகம் காரணமாகதான் இந்த பைக்குகள் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பிரபலமடைந்துள்ளன'' என்றார்.

இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350, புல்லட் 350, ஹிமாலயன் மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகிய மோட்டார்சைக்கிள்கள் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன.

சுதந்திரத்திற்கு பிறகு இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ மோட்டார்சைக்கிளாக ராயல் என்பீல்டு உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த போலீசாரும் கூட ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்தி வருகின்றனர்.

ராயல் என்பீல்டு தவிர கேடிஎம் நிறுவன பைக்குகளும் கூட இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. குறிப்பாக கேடிஎம் ட்யூக் 125, கேடிஎம் 390 மற்றும் ஆர்சி 200 ஆகிய பைக்குகள் இளைஞர்கள் மத்தியில் வேகமாக பிரபலம் அடைந்து வருகின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








