சொகுசு கார்களில் சுதந்திர தின கொண்டாட்டமா? ஓனர்களை சுற்றி வளைத்து பிடித்த ஹைதராபாத் போலீஸ்
ஹைதராபாத்தில் சுதந்திர தினத்தில், விலைமிக்க கார்களின் உரிமையாளர்கள் மேற்கொண்ட பேரணியை போலீஸார் அதிரடியாக தடுத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

சூப்பர் கார்கள் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது செய்திகளில் இடம்பெற்று வருகின்றன. கடந்த மாதத்தில் நடிகர் விஜய் அவரது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான சொகுசு கார் வரி தொடர்பாக தாக்கல் செய்திருந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதில் நீதிபதிகளின் உத்தரவும், அவர்கள் கூறிய கருத்துகளும் இணையத்தில் வைரலாகின. இதையெல்லாம் விட சொகுசு காருக்கான நுழைவு வரியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சத்தை அபராதமாக நீதிமன்றம் விதித்தது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் 2015ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார் தொடர்பாக தொடர்ந்த வழக்கு கடந்த வாரத்தில் மீண்டும் விசாரணை வந்திருந்தது. இதில் நடிகர் தனுஷுக்கு எதிராக காட்டமாக தனது கருத்துகளை தெரிவித்த நீதிபதி, ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி பாக்கி ரூ.30 லட்சத்தை செலுத்த தனுஷ் தரப்புக்கு உத்தரவிட்டார்.

இவ்வாறு பிரபலங்களும், அவர்களது லக்சரி கார்களும் தொடர்பான செய்திகள் தொடர்து வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், போக்குவரத்து வழிக்காட்டுதல்களை மீறி, விலைமிக்க கார்களில் பேரணி நடத்தியவர்கள் மீது தெலுங்கானா ஆர்டிஓ வழக்கு பதிவு செய்துள்ளது.
75வது இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்ததாக இந்த சம்பவத்தில் சிக்கிய லக்சரி கார் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பேரணியில் ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்கினி மற்றும் மஸாரெட்டி உள்ளிட்ட கோடிகளில் விலைகளை கொண்ட கார்களை வைத்திருப்பவர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியாக லக்சரி கார்களில் சாலையை ஆக்கிரமித்தவாறு வந்தவர்களை ஹைதராபாத், ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதன்பின் இந்த பேரணியில் கலந்து கொண்ட லக்சரி கார் உரிமையாளர்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

சுதந்திர தினத்தின் போது பேரணியாக சென்றது மட்டுமின்றி இதில் பெரும்பான்மையாக லக்சரி கார் உரிமையாளர்கள் சாலை வரியை செலுத்தவில்லை என்பதுதான் அபராதத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களில் சாலை வரியை செலுத்த வேண்டியவர்கள் கிட்டத்தட்ட ரூ.5-8 கோடி வரையில் செலுத்த வேண்டியதாக உள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது இந்த தொகையினை செலுத்திய பின்னரே சாலை வரியை செலுத்தாமல் பயன்படுத்தப்படும் லக்சரி கார்கள் விடுவிக்கப்படும் என தெரிகிறது. மற்றப்படி இந்த லக்சரி கார் உரிமையாளர்களுக்கு பேரணி நடத்தியதற்காக எவ்வளவு தொகை அபராதமாக விதிக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

முன்னதாக, சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக ஹைதராபாத் போலீஸார் நகரில் தீவிரமாக தயாராகி வந்தனர். இதன்படி, ஆகஸ்ட்15ஆம் தேதி காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பொது வாகன போக்குவரத்திற்காக ராம்தேவ் குடாவில் இருந்து கோல்கொண்டா கோட்டை வரையிலான சாலை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

2021 சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள ஏ, பி மற்றும் சி பிரிவுகளில் கார் பாஸை வைத்திருப்பவர்கள் மட்டுமே ராம்தேவ் குடாவில் இருந்து கோல்கொண்டா வரையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் ‘டி' கார் பாஸுடன் வாகனங்களில் வரும் அனைத்து அழைப்பார்களும் வேறு பாதையில் கோட்டைக்கு வருமாறு கோரப்பட்டது.

அதேபோல் டி-பாஸில் பயணம் செய்து வருபவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கும் தனி இடத்தை போலீஸார் ஒதுக்கினர். அதேநேரம் ‘இ' பாஸை வைத்திருப்பவர்கள் வருவதற்கு வேறு வழியும், அவர்கள் வாகனத்தை நிறுத்துவதற்கு வேறு பகுதியும் வழங்கப்பட்டது.

இவ்வாறு சுதந்திர தினத்தை பாதுகாப்பாக கொண்டாடுவதற்காக போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க, இவ்வாறு லக்சரி கார்களில் போக்குவரத்து விதிகளை மீறியவாறு பேரணியாக வந்தால் யாருக்கு தான் கோபம் வராமல் இருக்கும். அதனால் தான் போலீஸார் அபராதத்தை அவர்கள் அனைவருக்கும் விதித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications