டெல்லி- மும்பை இடையே டால்கோ ரயிலின் முதல் பயணமே தாமதம்!
அதிவேக ரயில்களை இயக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக ஸ்பெயின் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டால்கோ ரயில் பெட்டிகளை வடக்கு பிராந்தியத்தில் வைத்து ரயில்வே துறை சோதனைகளை நடத்தி வருகிறது.
இலக்கு வைக்கப்பட்டபடி ஏற்கனவே இரண்டு கட்ட சோதனைகள் திருப்திகரமாக முடிந்துவிட்டன. இரண்டாவது கட்ட சோதனையின்போது, மணிக்கு 180 கிமீ வேகத்தில் பயணித்து புதிய வரலாறு படைத்தது டால்கோ ரயில். இந்தநிலையில், டெல்லியிலிருந்து மும்பைக்கு மூன்றாவது கட்ட சோதனைகள் துவங்கியிருக்கின்றன.

இலக்கு
டெல்லி- மும்பை இடையிலான 1,384 கிமீ தூரத்தை ராஜ்தானி ரயில்கள் 17 மணிநேரத்தில் கடக்கின்றன. ஆனால், டால்கோ ரயில்கள் 12 மணிநேரத்தில் கடந்து விடும் என்று கருதப்படுகிறது.

முதல் பயணம்
இந்த வழித்தடத்தில் முதல் சோதனை ஓட்டம் நேற்றுமுன்தினம் இரவு துவங்கியது. கடந்த 1ந் தேதி இரவு 7.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.31 மணிக்கு மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு டால்கோ வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது, 13 மணிநேரத்தில் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தாமதம்...
ஆனால், இந்த வழித்தடத்தில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழையால் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியிருந்ததால், ரயிலின் வேகம் வெகுவாக குறைத்து இயக்கப்பட்டது. இதனால், எதிர்பார்க்கப்பட்டதைவிட மூன்று மணி நேரம் தாமதமாக மும்பையை அடைந்தது டால்கோ ரயில்.

அதிகபட்ச வேகம்
குஜராத்தில்தான் மழையால் வேகம் குறைக்கப்பட்டது. ஆனால், சில இடங்களில் இலக்கு வைக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தில் டால்கோ ரயில் இயக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அப்படியா...
மழையால் மூன்று மணி நேரம் தாமதமானாலும், ராஜ்தானி ரயில்களைவிட விரைவாகவே தனது முதல் பயணத்தை டால்கோ ரயில் நிறைவு செய்திருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஆவலை இன்னும் அதிகப்படுத்தும் விஷயம்தான்.

சோதனை ஓட்டங்கள்
முதலாவது சோதனை ஓட்டம் நிறைவடைந்துவிட்ட நிலையில், வரும் 5ந் தேதி, 9ந் தேதி மற்றும் ஆகஸ்ட் 14 ஆகிய தேதிகளில் டெல்லி- மும்பை இடையே டால்கோ ரயில் சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட உள்ளது.

சராசரி வேகம்
டெல்லி- மும்பை இடையே மணிக்கு 130 கிமீ முதல் 150 கிமீ வேகம் வரை சீரான வேகத்தில் டால்கோ ரயிலை இயக்கும்போது தண்டவாளங்களின் செயல்திறன் குறித்து முக்கியமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஆவல்
டெல்லி- மும்பை இடையே அடிக்கடி பயணிப்போர் மத்தியில் இந்த டால்கோ ரயில் பேராவலை உண்டு பண்ணியிருக்கிறது. இந்த ரயிலை காண்பதற்காக பலர் மும்பை மற்றும் வழியில் உள்ள ரயில் நிலையங்களில் பலர் காத்திருந்ததையும் பார்க்க முடிந்ததாக மராட்டிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.

குட் நியூஸ்
சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, டெல்லி- சென்னை மற்றும் சென்னை- பெங்களூர் இடையில் அதிவேக ரயில்களை இயக்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்திருந்தது, டால்கோ ரயில் இந்த வழித்தடங்களில் வருவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








