சென்னை- பெங்களூர் இடையே செமி புல்லட் ரயில்... ஆவ்வ்வ்... தூக்கம் வருதே... !!
அதிவேக ரயில்களை இயக்குவதற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் முனைப்பு காட்டி வருவது அறிந்ததே. மும்பை- ஆமதாபாத் இடையே நம் நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை ஜப்பானுடன் இணைந்து ரயில்வே துறை செயலாற்ற உள்ளது.
இதைத்தொடர்ந்து, நம் நாட்டின் முக்கிய வழித்தடங்களில் மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் ரயில்களை இயக்குவதற்கான முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டிருக்கின்றன. டெல்லி- மும்பை இடையே அதிவேக ரயில்களை இயக்கும் பொருட்டு, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டால்கோ ரயில்கள் தற்போது சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
டெல்லி- சென்னை இடையிலான வழித்தடத்தில் புல்லட் ரயிலை இயக்க சீன நிறுவனம் ஆய்வு செய்ய இருக்கிறது. இதைத்தொடர்ந்து, சென்னை- பெங்களூர் இடையே அதிவேக ரயில்களை இயக்குவதற்கான ஆய்வுப் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. ஆம், இந்த செய்தியை பலமுறை எழுதி அலுத்துவிட்டது. ஆனால், தற்போதைய மத்திய ரயில்வே அமைச்சகத்தின் வேகத்தை பார்த்தால், சாத்தியக்கூறுகள் அதிகம் தென்படுகின்றன.

இது ஜெர்மனிக்கு...
பெங்களூர் வழியாக சென்னை- மைசூர் இடையே அதிவேக ரயில்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் ஆய்வுகளை நடத்த உள்ளது. இதற்காக, மத்திய ரயில்வே அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன், ஜெர்மனியை சேர்ந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு சந்தித்து பேசியுள்ளது.

நம்பிக்கை
இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக அமையும் என்று ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியாவின் ரயில்வே துறையில் அதிக அளவில் ஜெர்மனியின் முதலீடுகளை கொணரும் வகையில், மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபும் சமீபத்திய ஜெர்மனி பயணத்தின்போது பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார்.

ஜெர்மனி ஆர்வம்
இந்த அதிவேக ரயில் பணிகள் குறித்த ஆய்வு செலவீனம் முழுவதையும் ஏற்பதற்கு ஜெர்மனி முடிவு செய்துள்ளது. இதனால், விரைவாக இந்த பணிகளுக்கு பச்சைக்கொடி காட்டப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரயில் நிலையம்
சென்னை- மைசூர் இடையிலான தடத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதோடு, ரயில் நிலையம் ஒன்றை சர்வதேச தரத்திற்கு உயர்த்தித் தருவதற்கான பணிகளையும் ஜெர்மனிக்கு வழங்க மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

செமி புல்லட் ரயில்
சென்னை- மைசூர் இடையே பெங்களூர் வழியாக மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் ரயில்கள் இயக்குவதற்குத்தான் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன. மேலும், தற்போதுள்ள வழித்தடத்தில் அதிக மாறுதல்கள் செய்யாமல், அதிவேக ரயில்களை இயக்க முடியுமா என்பதற்காகத்தான் இந்த ஆய்வு.

கர்நாடாக வேண்டுகோள்
இந்த ஆய்வுப் பணிகள் துவங்குவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், கர்நாடாகவில் அதிவேக ரயில்களை இயக்குவதற்கு ஆவனச் செய்யுமாறு மத்திய ரயில்வே அமைச்சகத்தை அம்மாநில முதல்வர் சித்தராமையா நேற்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

கனவு
சென்னை- பெங்களூர் இடையே அதிவேக ரயில் இயக்கப்படுமானால், அது இரு நகரங்களிலும் பணிபுரியும் தொழில்நுட்பத் துறை உள்பட அனைத்துத் துறை பணியாளர்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும்.

பயண நேரம்
தற்போது சென்னை- பெங்களூர் இடையே இயக்கப்படும் அதிவேக ரயிலான சதாப்தி எக்ஸ்பிரஸ் 5 மணிநேரத்தில் இரு நகரங்களையும் இணைக்கிறது. ஆனால், செமி புல்லட் ரயில் விடப்படும் பட்சத்தில், இரு நகரங்களையும் 2 மணி நேரத்தில் இணைப்பு வசதியை பெறும். இது விமானப் பயணத்தைவிட குறைவான செலவீனமும், பயண நேரமும் மிச்சப்படும்.


Click it and Unblock the Notifications