இன்னும் ரெண்டே மாசம்தான்... பழைய வண்டிகளை மொத்தமா ஒழிச்சு கட்ட போறாங்க... திடீர் அறிவிப்பை வெளியிட்ட அரசு...
உலகில் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னையால், மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இந்தியா. அத்துடன் இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களின் (Road Accidents) எண்ணிக்கையும் மிகவும் அதிகமாக உள்ளன. இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் பழைய வாகனங்கள் மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கின்றன. இதன் காரணமாக பழைய வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதற்கு தேவையான முயற்சிகளை மத்திய அரசும், இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளும், மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்த வரிசையில் ஹிமாச்சல பிரதேச (Himachal Pradesh) மாநில அரசு தற்போது அதிரடியான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
இது 15 வருடங்கள் ஆன வாகனங்களை கட்டாயமாக 'ஸ்கிராப்பிங்' (Scrapping) செய்யும் திட்டம் ஆகும். அதாவது 15 வருடங்கள் ஆன வாகனங்களை அழிக்கும் திட்டம். ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தம் 12 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் தலா 1 'ஸ்கிராப்பிங்' மையங்களை அமைக்க ஹிமாச்சல பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

இந்த 'ஸ்கிராப்பிங்' மையங்களுக்கு முக்கியமான கட்டுப்பாடு ஒன்று விதிக்கப்பட்டுள்ளது. பழைய வாகனங்களில் இருந்து எடுக்கப்படும் உதிரி பாகங்களை மீண்டும் பயன்படுத்த கூடாது என்பதுதான் அந்த கட்டுப்பாடு ஆகும். 'ஸ்கிராப்பிங்' மையங்களில் பணியாற்றும் மெக்கானிக்குகள் மூலம், பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் மீண்டும் சந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இது போன்ற பழைய உதிரி பாகங்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு காரணமாக அமையலாம். அத்துடன் பழைய உதிரி பாகங்களை பயன்படுத்துவதால், சாலை விபத்துக்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகளும் கூட இருக்கின்றன. எனவேதான் இந்த அதிரடியான கட்டுப்பாட்டை ஹிமாச்சல பிரதேச மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், பழைய வாகனங்களை அழிக்கும் உரிமையாளர்களுக்கு, புதிய வாகனங்களை வாங்கும்போது, பதிவு கட்டணத்தில் (Registration Fee) தள்ளுபடி வழங்கப்படும். இதன்படி வர்த்தக பயன்பாடு அல்லாத வாகனங்கள் என்றால், அதாவது சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்கள் என்றால், புதிய வாகனங்களை வாங்கும்போது, பதிவு கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடி பெறலாம்.
அதுவே வர்த்தக வாகனங்கள் என்றால், புதிய வாகனங்களை வாங்கும்போது, பதிவு கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி பெறலாம். ஹிமாச்சல பிரதேச அரசின் இந்த அதிரடி திட்டம் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பழைய வாகனங்களை அழிக்கும் அரசின் திட்டம் வரவேற்க கூடிய ஒன்றுதான். இது சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதுடன், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவி செய்யும். ஆனால் பழைய வாகனங்களை அழிக்கும் உரிமையாளர்களுக்கு இன்னும் கூடுதல் சலுகைகளை வழங்கினால் நன்றாக இருக்கும்.
பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் அதே நேரத்தில், எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) மற்றும் சிஎன்ஜி வாகனங்களின் (CNG Vehicles) பயன்பாட்டை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இவை சுற்றுச்சூழலுக்கு நட்பானவை என்பதுதான் இதற்கு காரணம்.


Click it and Unblock the Notifications








