ஆங்கிலத்திற்கு பதிலாக மைல்கற்களில் இடம்பெறும் இந்தி மொழி
தமிழகத்தின் சில மாவட்டங்களிலுள்ள தேசிய நெடுஞ்சாலையின் மைல்கற்களில் ஆங்கிலத்திற்கு பதிலாக ஊர் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சில ஊர்களின் பெயர் பலகைகள், மைல் கற்கள் ஆகியவற்றில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியில் பெயர்கள் எழுதப்பட்டு வருகின்றன.

வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 75 மற்றும் 77 ஆகியவற்றில் உள்ள பெயர்ப் பலகைகளிலும் மைல் கற்களிலும் உள்ள ஊரின் பெயர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.

ஆனால், கடந்த சில வாரங்களாக ஆங்கிலத்தில் உள்ள பெயர்கள் மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக இந்தியில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இதனால், தமிழ் தெரியாத, ஆங்கிலம் கற்காத பலரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக வேலூர் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வரக்கூடிய மாநிலம். அங்குள்ள மைல்கற்களில் ஹிந்தி மற்றும் தமிழில் எழுதப்பட்டுள்ள எந்த பெயரும் அவர்களுக்கு புரியாது என்பதால் எந்த ஊரை நோக்கிச் செல்கிறோம் என தெரியாமல் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் தடுமாறி வருகின்றனர்.

நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இந்தியில் எழுதப்பட்டுயிருப்பது தமிழகத்திலுள்ள பொதுமக்கள், வாகன ஓட்டிகள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைத்து தரப்பினரிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைல்கற்களில் பெயர்களை ஹிந்தியில் எழுதப்படுவதைக் கொண்டு, தமிழகத்தில் மறைமுகமாக இந்தியை திணிக்க மத்தியரசு முயன்று வருவதாக அரசியல் கட்சி தலைவர்களிடையே குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.

இதற்கிடையில் சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பல்வேறு மீம்ஸ்களும் இணையதளங்களில் உலா வருகின்றன. மேலும் நெடுஞ்சாலையின் மைல்கற்களில் இந்தியில் எழுதப்பட்டுயிருக்கும் பெயர்களை சிலர் கருப்பு மையை வைத்து அழித்தும் வருகின்றனர்.

தமிழகத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையின் மைல்கற்களில் இந்தியில் பெயர்கள் எழுதப்படுவதை குறித்து கருத்து தெரிவித்த, மத்திய சாலை போக்குவரத்து கப்பல்துறை இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன்,
தமிழகத்தில் அதிகளவில் வடமாநிலங்களை சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் வருவதாகவும், அவர்களுக்கு வழியை சரியாக புரிந்துக்கொள்ளவே இங்கு அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள மைல்கற்கள் மற்றும் ஊர் பலகளைகளில் பெயர்கள் இந்தியில் எழுதப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications