டிராஃபிக் ஜாம்ல மாட்டிகிட்டா இனிமேல் இதை பண்ணலாமா! இந்த ஐடியா இவ்ளோ நாளா நமக்கு தோணாம போச்சே!
இந்திய பெரு நகரங்களில் தற்போது போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலை விரித்தாட தொடங்கியுள்ளது. தொழில் வாய்ப்புகளை தேடி கிராமப்புறங்களில் இருந்து பெரு நகரங்களுக்கு மக்கள் படையெடுப்பது இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம் செய்யப்படாததும் கூட இதற்கு ஒரு காரணம்தான்.
இதுதவிர பஸ், மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் மக்கள் சந்திக்கும் சவால்களும் கூட போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு காரணமாக இருக்கின்றன. உதாரணத்திற்கு கூட்ட நெரிசல் அதிகம், குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகம் போன்ற இடங்களுக்கு சென்றடைய முடியாது என்பது போன்ற காரணங்களை முன் வைத்து மக்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.

இதன் காரணமாகவும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை அதிகரிக்கிறது. இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலும் இதே நிலைமைதான் காணப்படுகிறது. சீன தலைநகர் பெய்ஜிங் இதற்கு ஒரு உதாரணம். உலகில் மக்கள் தொகை மிகுந்த நகரங்களில் ஒன்றாக பெய்ஜிங் இருந்து வருகிறது.
தற்போதைய நிலையில் பெய்ஜிங் நகரில் சுமார் 2.50 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். எனவே அங்கு போக்குவரத்து நெரிசல் பிரச்னை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் போக்குவரத்து நெரிசல் பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்காக பெய்ஜிங் நகரில் புதிய திட்டம் ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டால், உங்களை மீட்பதற்கு ஆட்கள் வருவார்கள். கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? ஆனால் இதற்கு நீங்கள் சுமார் 60 டாலரை கட்டணமாக செலுத்த வேண்டும். இந்திய மதிப்பில் தற்போதைய நிலையில் இது சுமார் 5 ஆயிரம் ரூபாய் ஆகும்.
நீங்கள் சிக்கி கொண்டிருக்கும் இடத்திற்கு டூவீலரில் வந்து, அவர்கள் உங்களை அழைத்து சென்று விடுவார்கள். கார் போன்ற வாகனங்களை காட்டிலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் பயணம் செய்வதற்கு உண்மையில் டூவீலர்கள்தான் ஏற்றவை. சிறிய இடைவெளி கிடைத்தாலும் கூட, அதில் நுழைந்து சென்று விடலாம்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டு முக்கியமான நிகழ்வுகளை தவற விடுபவர்களுக்கு, இந்த சேவை ஏற்றதாக இருக்கும். ஆனால் பெய்ஜிங் நகரில் இத்தகைய சேவை அறிமுகம் செய்யப்படுவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாக கடந்த 2015ம் ஆண்டிலேயே இதேபோன்றதொரு சேவை பெய்ஜிங் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
டூவீலர்களில் வரும் நபர் உங்களை அழைத்து சென்று விடுவார். அவருடன் வரும் வேறு ஒரு நபர், போக்குவரத்து நெரிசலில் இருந்து உங்கள் காரை மீட்டு கொண்டு வந்து விடுவார். அப்போதைய சமயத்தில் இந்த சேவைக்கு 65 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூல் செய்யப்பட்டது. ஆனால் இந்த திட்டம் வெற்றியடையவில்லை.
கார்கள் திருடு போய் விடுமோ? என்ற அச்சம் காரணமாக, இந்த சேவையை நாட பலரும் விரும்பவில்லை. எனவே டிமாண்ட் குறைவாக இருந்த காரணத்தால், இந்த சேவை நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இம்முறை வரவேற்பு கிடைக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 5 ஆயிரம் ரூபாய் செலவு ஆனாலும் பரவாயில்லை... அதை விட முக்கியமான வேலை இருக்கிறது என கருதுபவர்களுக்கு இந்த சேவை ஏற்றதாக இருக்கும். மிகவும் முக்கியமான அலுவலக கூட்டங்கள் மற்றும் மருத்துவமனை போன்ற இடங்களுக்கு செல்பவர்கள், இந்த சேவையை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








