இனி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றால் 10 ஆண்டுகள் சிறை! புதிய சட்டத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு!
சாலையில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக டிரக் லாரி மற்றும் பஸ் ஓட்டுநர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலையில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றால் அவர்களுக்கான தண்டனை என்ன என இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
மத்திய அரசு பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரில் பல்வேறு சட்ட பிரிவுகளில் உள்ள தண்டனைகளை மாற்றி வருகிறது. அதன்படி தற்போது இந்தியாவில் சாலையில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுவது என்பது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் விபத்து ஏற்பட்டு விட்டால் உடனடியாக இந்த விபத்தில் ஈடுபட்ட அனைத்து வாகன ஓட்டிகளும் நின்று அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிக்கப்படாதவர்கள் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும்.
ஆனால் சாலையில் நடக்கும் பல விபத்துகளில் வாகன ஓட்டிகள் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்று விடுகின்றனர். இப்படியாக இந்தியா முழுவதும் அடையாளம் தெரியாத வாகனங்களால் சுமார் 50,000 பேர் ஆண்டுக்கு மரணம் அடைகின்றனர். இதனால் இதன் எண்ணிக்கையை குறைக்க இந்தியா முழுவதும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றால் அவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க பாரத் நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் புதிய வழிமுறைகளை கொண்டு வந்துள்ளது.

தற்போது வரை விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றால் அந்த வாகன ஓட்டிக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. மேலும் இந்த விபத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை காலத்தில் ஜாமினில் வெளியே வரவும் உரிமை உள்ளது என்ற நிலை இருக்கிறது. ஆனால் புதிய சட்ட திருத்தத்தில் இந்த சட்டம் கடுமையாக்கப்பட்ட தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இனி சாலைகளில் விபத்து ஏற்படுத்தி விட்டு வாகனத்தை நிறுத்தாமல் செல்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 7 லட்சம் வரையில் அபராதம் விதிக்க இந்த சட்டத்தில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி விபத்து ஏற்படுத்தி விட்டால் உடனடியாக வாகனத்தை நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் அருகில் உள்ள போலீசாருக்காவது தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இப்படியாக சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களால் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் பலியாகி வரும் நிலையில் இந்த பலியை எண்ணிக்கையை குறைப்பதற்காக மத்திய அரசு இந்த சட்டத்தை திருத்தம் செய்து தண்டனையை கடுமையாக்கி உள்ளது. ஏற்கனவே இப்படியாக விபத்தில் சிக்கும் நபர்களை காப்பாற்றும் மனிதர்களை நல்ல குடிமகன் என்ற பெயரில் அவர்களுக்கு பாராட்டுகளை வழங்கி வருகிறது.
இந்த சட்டத்திற்கு எதிராக மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார், போன்ற மாநிலங்களில் உள்ள டிரக் டிரைவர்கள் டாக்ஸி டிரைவர்கள் ஆட்டோ டிரைவர்கள் லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சட்ட திருத்தத்தை நீக்க கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் வட இந்தியாவில் இந்த சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதற்கு ஏன் வாகன ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அவர்கள் சொல்லும் ஒரே விஷயம் இப்படியாக சாலையில் விபத்து நடந்து விட்டால் உடனடியாக வாகனத்தை நிறுத்தி உதவி செய்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுனரை தாக்க அதிகமான வாய்ப்பு உள்ளது என்பது தான். அதன் காரணமாகவே பலர் நிறுத்தாமல் சென்று விடுகின்றனர் எனக் கூறுகின்றனர்.
இதுவும் பல இடங்களில் நடக்கக்கூடிய ஒரு விஷயம் தான். இதன் காரணமாகவே வட இந்தியாவில் இந்த சட்டத்திற்கு மிக கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருந்தாலும் இது மிக முக்கியமான தேவையான சட்டம் தான் என்பதால் இந்த சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. விரைவில் இது அமலுக்கு வரும் பட்சத்தில் இந்தியாவில் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் எல்லாம் ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சாலையில் விபத்து ஏற்படுத்தி விட்டு வாகனங்கள் நிற்காமல் போவது என்பது மிக அதிகமான சம்பவமாக இருக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இது போன்ற அதிகமான சம்பவங்கள் நடக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்றால் இந்த மாதிரியான சட்டங்கள் நிச்சயம் தேவை. இதற்கு எதிராக ஓட்டுனர்கள் போராடும் ஒரு விஷயமும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் தான். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications









