அரசு பேருந்துகள் அதிகமாகிவிட்டன... 25 வருடங்களுக்கு பிறகு முடிவுக்கு வரும் பிரபலமான தனியார் பேருந்து சேவை!!
கேரளாவில் கடந்த 25 வருடங்களாக பேருந்து சேவையை வழங்கி வந்த தனியார் நிறுவனம் ஒன்று அதன் சேவையை நிறுத்தி கொண்டுள்ளது. எந்த தனியார் பேருந்து நிறுவனம் அது என்பது குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
நகரங்களில் வேண்டுமாயின் அரசு பேருந்து சேவைகள் இருந்தாலும், இன்னமும் பெரும்பாலான கிராமப்புற பகுதிகளில் தனியார் பேருந்துகள் தான் பொது போக்குவரத்து சேவைக்கு உயிர் நாடி ஆகும். அரசு போக்குவரத்து கழகம் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் சேவையை துவங்கும் பொழுது அங்கு ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தின் சேவை மங்க துவங்கி, ஒரு கட்டத்திற்கு மேல் சேவையை முழுவதுமாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

ஏனெனில் அரசாங்கத்தால் குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவையை வழங்க முடியும். ஆனால் தனியார் நிறுவனங்களால் அவ்வாறான சேவையை வழங்குவது கடினம். இதனால் பொதுவாகவே, தனியார் பேருந்துகள் சற்று அதிக கட்டணத்திலேயே பேருந்துகளை இயக்குகின்றன. அந்த வழித்தடத்தில் அரசு பேருந்து சேவை வரும் பொழுது, குறைந்த கட்டணத்தினால் தானாக மக்கள் அரசு பேருந்தை நாடி சென்றுவிடுகின்றனர்.
இதை ஏன் இப்பொழுது கூறுகிறேன் என்றால், கேரளாவிலும் இதேபோன்று கிட்டத்தட்ட 25 வருடங்களாக செயல்பாட்டில் இருந்த 'ஹோலி ஃபேமலி' என்ற தனியார் பேருந்து நிறுவனம் ஒன்று தனது பேருந்து சேவையை நிறுத்தி கொண்டுள்ளது. 'ஹை ரேஞ்ச்-மலபார் நைட் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் இந்த தனியார் பேருந்து சேவை ஆனது 1990களின் இறுதியில் துவங்கப்பட்டது.
கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டாப்பனா நகரத்தில் துவங்கும் இந்த தனியார் பேருந்து சேவை ஆனது ஏறக்குறைய 450கிமீ பயணத்திற்கு பிறகு கண்ணூர் மாவட்டத்தில் முடிவடைவதாக இருந்து வந்தது. ஆனால் கேரள மாநில அரசின் பேருந்து கழகமான கே.எஸ்.ஆர்.டி.சி-இன் அரசு பேருந்துகள் இந்த நீண்ட தூர வழித்தடத்தில் அதிக எண்ணிக்கையில் இயங்க ஆரம்பித்துவிட்டதால், ஹோலி ஃபேமலியின் பேருந்து சேவை நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளது.

கண்ணூர் ஆனது அதிகளவில் மலைகளையும் காடுகளையும் கொண்ட பகுதியாகும். இத்தகைய பகுதி உடன் மலபார் பகுதி மக்களை இணைப்பது தான் இந்த பேருந்து சேவையின் முக்கிய அம்சமாக இருந்து வந்தது. இந்த பகுதியில் விவசாயிகளே அதிகம். அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் தவிர்க்க முடியாத போக்குவரத்தாக ஹோலி ஃபேமலியின் பேருந்து சேவை விளங்கி வந்த நிலையில், தற்போது அந்த பிரபலமான பேருந்து சேவை முடிவுக்கு வந்துள்ளது.
ஹோலி ஃபேமலி நிறுவனத்தால் இந்த வழித்தடத்தில் வெறும் 2 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. 2 பேருந்துகள் மட்டுமே என்றாலும், சுமார் 25 வருடங்களாக ஒரு தனியார் நிறுவனம் பேருந்து சேவைகளை வழங்கி வந்துள்ளது என்றால் அந்த பேருந்து சேவை அந்த பகுதி மக்களுக்கு எந்த அளவிற்கு முக்கியமானதாக இருந்துள்ளது என்பதை அறியலாம். 450கிமீ தொலைவை இந்த தனியார் பேருந்துகள் 12 மணிநேரத்திற்கும் அதிக நேர பயணத்திற்கு பிறகே நிறைவு செய்து வந்தன.
அதாவது, மாலை 6.30 மணியளவில் கட்டாப்பனாவில் இருந்து கிளம்பும் ஹோலி ஃபேமலியின் தனியார் பேருந்து கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகந்தபுரத்தை காலை 7 மணியளவில் சென்றடையும். இதேநேரத்தில் ஸ்ரீகந்தபுரத்தில் ஹோலி ஃபேமலியின் மற்றொரு பேருந்து பயணத்தை துவங்குவதாக சேவை வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. சமீபத்தில் கேரள அரசு நிறுத்தங்களில் நிறுத்தி செல்லும் தனியார் பேருந்துகளை அதிகப்பட்சமாக 140கிமீ தொலைவிற்கு மட்டுமே இயங்க அனுமதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. இதுவே தற்போது இந்த தனியார் பேருந்து சேவை நிறுத்தப்படுவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
Image Courtesy: Malabar Night Riders/Facebook


Click it and Unblock the Notifications








