காரை நிறுத்த முயன்ற காவலர்... டிரைவர் செய்த மிருகத்தனமான காரியம்... அடி வயிற்றை கலங்க வைத்த வீடியோ
கார் ஓட்டுனர் ஒருவர் செய்த மிருகத்தனமான காரியத்தின் காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிரிழப்புகள் நிகழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இதற்கு முதன்மையான காரணமாக உள்ளது.

எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வைப்பதற்கு காவல் துறையினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வாகன தணிக்கை நடத்தி போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொள்கின்றனர்.

ஆனால் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் ஒரு சிலர் காவல் துறையினருடன் வாக்குவாதம் மற்றும் கை கலப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோன்ற சம்பவங்களை எடுத்துக்காட்டு காணொளிகள் பல முறை வெளியாகி இணையத்தில் பரவியுள்ளன. இந்த வகையில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பிகானெர் பகுதியில் ஊர்க்காவல் படையை சேர்ந்த வீரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக கார் ஒன்று வந்தது. அதன் ஓட்டுனர் விதிமுறைகளை மதிக்காமல், ராங் சைடில் (Wrong Side), காரை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. எனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படை வீரர், அந்த காரை நிறுத்த முயன்றார்.

ஆனால் அந்த காரின் ஓட்டுனர், வாகனத்தை நிறுத்தவில்லை. அப்போது ஊர்க்காவல் படை வீரர் எதிர்பாராத விதமாக காரின் பானெட் மீது விழுந்தார். எனினும் இரக்கம் இல்லாத அந்த காரின் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டி கொண்டே சென்றார். எனவே ஊர்க்காவல் படை வீரர் பானெட் மீது தொங்கியபடியே செல்ல வேண்டியதாயிற்று.

சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு அவர் பானெட் மீது தொங்கி கொண்டே பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பதிவாகியிருந்தது. காரின் ஓட்டுனர் செய்த இந்த மிருகத்தனமான சம்பவத்தின் காணொளி முகநூல் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

காரின் பானெட்டை பிடித்து கொண்டே ஊர்க்காவல் படை வீரர் பயணம் செய்வதையும், அப்போது ஒரு சில இரு சக்கர வாகனங்கள் அவ்வழியே பயணம் செய்வதையும் இந்த காணொளியில் பார்க்க முடிகிறது. இரு சக்கர வாகன ஓட்டிகளும் காரை நிறுத்த முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த கார் ஓட்டுனர் எதையும் காதில் வாங்கி கொண்டது போல் தெரியவில்லை.
கடந்த சனிக்கிழமை மாலை (செப்டம்பர் 19ம் தேதி) இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில், ஊர்க்காவல் படை வீரர் காயமடைந்துள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை முடிந்த பின், ஊர்க்காவல் படை வீரர் வீடு திரும்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இந்த மனிதாபிமானமற்ற காரியத்தை செய்த காரின் ஓட்டுனர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டார். ஆனால் காவல் துறை அதிகாரிகள் அவரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அவரை உடனே கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை காவல் துறை அதிகாரிகள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








