கார் பின்னாடி மோதி கீழே விழுந்த இளைஞர்! காரணம் இதுதானா! வீடியோவை பாத்தா இனி இந்த விஷயத்தை செய்யவே மாட்டீங்க!
இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு (Road Accidents), கவன சிதறல் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. வாகன ஓட்டிகளின் கவனம் சிதறியதால் நடைபெற்ற சாலை விபத்துக்களின் வீடியோக்கள் (Videos) பலவற்றை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் விழிப்புணர்வு நோக்கத்திற்காக வாசகர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த வரிசையில் யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று நமது கவனத்திற்கு வந்துள்ளது. ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டரில் பயணம் செய்த இளைஞர் ஒருவரின் கவனம் சிதறியதால், இந்த சாலை விபத்து நடைபெற்றுள்ளது. கியா செல்டோஸ் (Kia Seltos) காரின் பின் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் இந்த சாலை விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் இளைஞர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் ஒரு கையில் மட்டுமே ஸ்கூட்டரை ஓட்டினார். மற்றொரு கையில் செல்போனை நோண்டி கொண்டிருந்தார். எனவே அவரது கவனம் சாலையில் இல்லை.
இதன் காரணமாக முன்னால் சென்று கொண்டிருந்த கியா செல்டோஸ் காரின் பின் பகுதியில் அவரது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மோதியது. நல்ல வேளையாக இந்த விபத்தில் அவருக்கு பெரிய அளவிலான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் பயணம் செய்த இளைஞர், ஹெல்மெட் அணிந்திருந்தார். இது நல்ல விஷயம்தான்.
ஆனால் ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் எல்லாம், சாலை விபத்துக்கள் நடைபெற்ற பின்னர், உயிர் காப்பதற்குதான் உதவும். ஆனால் விபத்துக்களை தவிர்க்க வேண்டுமென்றால், கவனம் சாலையில் இருக்க வேண்டும். எனவே வாகனத்தின் டிரைவர் இருக்கையில் அமர்ந்து விட்டால், எக்காரணத்தை கொண்டும் கவனத்தை சிதற விடாதீர்கள்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாகனத்தை இயக்கி கொண்டே செல்போனில் மெசேஜ்களை 'செக்' செய்வது மற்றும் அனுப்புவது, செல்போனில் பேசி கொண்டே வாகனத்தை ஓட்டுவது போன்ற நிகழ்வுகள் எல்லாம் தற்போது அதிகமாக நடைபெற தொடங்கியுள்ளன. நாம் அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறுப்பதற்கில்லை.
அதற்காக வாகனத்தை இயக்கி கொண்டே செல்போனை பயன்படுத்தியாக வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. வாகனத்தை இயக்கி கொண்டிருக்கும்போது உங்களுக்கு செல்போனில் அழைப்புகளோ அல்லது மெசேஜ்களோ வந்தால், வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு செல்போனை பயன்படுத்துங்கள். ஒரு சில வினாடிகளையோ அல்லது நிமிடங்களையோ மிச்சம் பிடிப்பதற்காக, விபத்துக்களில் சிக்கி விட வேண்டாம்.
இந்த ஒரு சில வினாடிகள் அல்லது நிமிடங்களுடன் ஒப்பிடும்போது, உங்கள் உயிர் விலை மதிப்பற்றது என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள். அதேபோல் டென்ஷன் அல்லது குழப்பமான மன நிலையில் இருக்கும்போதும், வாகனங்களை இயக்க வேண்டாம். பாடல்களை கேட்பது போன்ற மனதை ரிலாக்ஸ் செய்யும் விஷயங்களை செய்த பிறகு, ஆக்ஸலரேட்டரை முறுக்க தொடங்குங்கள். இதுவும் சாலை விபத்துக்களை தவிர்க்க உதவி செய்யும்.


Click it and Unblock the Notifications