நான் அந்த பக்கம் போனதே இல்லீங்க... போலீஸ் விதித்த அபராதத்தால் அதிர்ச்சியடைந்த கார் உரிமையாளர்
செய்யாத தவறுக்காக போலீசார் அபராதம் விதித்திருப்பதால், கார் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிகவும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. எனவே வாகன ஓட்டிகள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் ஒரு சில மாநில அரசுகளும் கூட புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. ஆக மொத்தத்தில் வாகன ஓட்டிகள் மத்தியில் புதிய மோட்டார் வாகன சட்டம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் போலீசாரின் மற்றொரு செயல்பாடும் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களான கிரேட்டர் நொய்டா மற்றும் ஆக்ராவை இணைக்கும் வகையில், 165 கிலோ மீட்டர் தொலைவிற்கு யமுனா எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு சீட் பெல்ட் அணியவில்லை என்ற காரணத்தை கூறி சலான் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி சலான் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சூழலில் யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் பயணமே செய்யாதவர்களுக்கு, ஓவர்ஸ்பீடு என்ற காரணத்திற்காக தற்போது சலான் வர தொடங்கியுள்ளது.

யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில், கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அதிவேகமாக பயணம் செய்ததற்காக, ஹோண்டா அமேஸ் கார் உரிமையாளர் ஒருவருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதித்து சலான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினம் தான் யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் பயணம் செய்யவே இல்லை என அந்த காரின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தவறான புகைப்படங்கள் காரணமாக இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நொய்டா போக்குவரத்து போலீசாரின் டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான புகார்கள் தற்போது குவிந்து வருகின்றன. இதற்கு யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.

அத்துடன் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு சலான்களை வழங்கும் தேசிய தகவல் மையத்தின் (National Informatics Centre) பொது குழுவையும் போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். முன்னதாக அலிகார் மாவட்ட பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் முன்னாள் மாவட்ட தலைவர் யத்தின் தீக்சித்தும் இதேபோன்றதொரு புகாரை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை 3ம் தேதியன்று யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் அதிவேகமாக சென்றதற்காக தனக்கு சலான் வழங்கப்பட்டதாகவும், ஆனால் சலானில் வேறொரு வாகனத்தின் புகைப்படம் இடம்பெற்றிருந்ததாகவும் யத்தின் தீக்சித் புகார் தெரிவித்திருந்தார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் யத்தின் தீக்சித் பின்வருமாறு எழுதியிருந்தார்.

''வேறொருவர் செய்த தவறுக்காக எனக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. என்ன ஒரு துல்லியம். டிஜிட்டல் சலானில், வாகனத்தின் எண்ணும் இல்லை'' என யத்தின் தீக்சித் எழுதியிருந்தார். வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள இந்த பிரச்னையை சரி செய்யும் முயற்சியில் போலீசார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








