போலி போலீஸ் ஸ்டிக்கருடன் காரில் வலம் வந்த இளைஞர்... அவர் எதற்காக இப்படி செய்தார் தெரியுமா?
போலி போலீஸ் ஸ்டிக்கருடன் காரில் வலம் வந்த இளைஞரை போலீசார் மடக்கினர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் போலீஸ், எம்எல்ஏ போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வாகனங்களை சர்வ சாதாரணமாக காண முடியும். வாகனங்களின் நம்பர் பிளேட், முன் மற்றும் பின் பக்க விண்டு ஷீல்டு உள்ளிட்ட இடங்களில் வாகன உரிமையாளர்கள் இதனை ஒட்டி கொள்கின்றனர். சிலர் உண்மையிலேயே அந்த பதவிகளை வகிக்கலாம். ஆனால் சிலர் போலியாக ஒட்டி கொள்கின்றனர்.

இவை மிகவும் அதிகாரம் வாய்ந்த பதவிகள். எனவே இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டால், வாகன தணிக்கையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் நம்மை தடுத்து நிறுத்த மாட்டார்கள் என்பது பலரின் எண்ணமாக உள்ளது. இது உண்மையும் கூட. இதுபோன்ற ஸ்டிக்கர்களுடன் கூடிய வாகனங்கள் வந்தால், பெரும்பாலான நேரங்களில் போலீசார் நிறுத்துவது கிடையாது.

எனவே இதுபோன்ற ஸ்டிக்கர்களை பயன்படுத்தி கொண்டு, சட்டத்திற்கு புறம்பான செயல்களும் கூட சில சமயங்களில் அரங்கேற்றப்படுகின்றன. எனவே வாகனங்களில் இத்தகைய ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ வாகனமாக இல்லாத வரை, போலீஸ் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டுவது சட்ட விரோதம்.

ஆனால் போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக ஏராளமானோர் தொடர்ந்து இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டேதான் உள்ளனர். இந்த சூழலில் ஐதராபாத்தின் ஜீப்ளி ஹில்ஸ் பகுதியில் போலீசார் சமீபத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹோண்டா சிவிக் கார் ஒன்று அவ்வழியாக வந்து கொண்டிருந்தது.

அதன் முன் மற்றும் பின் பக்க விண்டு ஷீல்டில் 'போலீஸ்' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. வழக்கமாக இதுபோன்ற ஸ்டிக்கர்களுடன் வரும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் நிறுத்த மாட்டார்கள். ஆனால் சந்தேகத்தின் பேரில் ஹோண்டா சிவிக் காரை நிறுத்திய போலீசார், அதனை ஓட்டி வந்த சந்தீப்பிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக அவர் போலீஸ் என்ற ஸ்டிக்கரை போலியாக ஒட்டியிருந்தது கண்டறியப்பட்டது. இது மட்டும் அல்லாமல் மேலும் சில விதிமீறல்களும் அந்த வாகனத்தில் செய்யப்பட்டிருந்தன. AP16BE0300 என்பதுதான் இந்த காரின் உண்மையான பதிவு எண். ஆனால் அதற்கு பதிலாக AP16BE3 என்ற பேன்ஸி நம்பர் பிளேட்டுடன் அந்த கார் இருந்தது.

இது போலியான நம்பர் பிளேட் என்றே கருதப்படும். அத்துடன் இந்தியாவில் அனைத்து வாகனங்களின் நம்பர் பிளேட்களிலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஸ்டாண்டர்டு ஃபாண்ட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த ஹோண்டா சிவிக் காரில் பேன்ஸி நம்பர் பிளேட் இருந்தது. இதுவும் ஒரு விதிமுறை மீறல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் என்று போலியாக ஸ்டிக்கர் ஒட்டியதுடன் மட்டுமல்லாது இவ்வாறு அடுக்கடுக்கான விதிமீறல்களை செய்ததால், அந்த ஹோண்டா சிவிக் காரை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். அத்துடன் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் விதிகளின் படி இந்த வாகனம் தண்டிக்கப்பட்டதா? அல்லது தற்போது உள்ள விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பது தெளிவாக தெரியவில்லை. மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா சமீபத்தில்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications