விமான போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்த வல்ல ஓர் விமான கான்செப்ட்
அதிவேக போக்குவரத்து சாதனங்களை உருவாக்குவதில் உலகம் முழுவதும் உள்ள பொறியாளர்கள் ஆர்வமுடன் செயலாற்றி வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்களது வித்தியாசமான கான்செப்ட்டை உலகுக்கு காட்டி, அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கிலாந்தை சேர்ந்த கிளாஸ்கோ பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று புதிய விமான போக்குவரத்து திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். ரயில் மற்றும் விமானத்தை உள்ளடக்கியதாக ஹைபிரிட் வாகன மாடலாக இதனை உருவாக்கியதுடன், ஹரிசான் என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர். பயணிகளின் நேரத்தை வெகுவாக மிச்சப்படுத்துவதோடு, மிகுந்த சவுகரியத்தையும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையிலும் இந்த விமான திட்டத்தை வெளியிட்டுள்ளனர்.

இதுதான் கான்செப்ட்
இந்த புதிய கான்செப்ட் விமானத் திட்டம் சேவைக்கு வந்தால், வெளிநாடுகளுக்கு செல்ல நீங்கள் விமான நிலையம் செல்ல வேண்டியிருக்காது. அருகிலுள்ள ஸ்கைலிங்க் என்ற நிலையத்திற்கு சென்று உங்களது உடைமைகளை கொடுத்துவிட்டு, ரயில் போன்ற பாட் என்ற பெட்டியில் ஏறி அமர்ந்து கொள்ள வேண்டியதுதான். நீங்கள் இறங்க வேண்டிய இடம் வரை அதே இருக்கையில் அமர்ந்து சென்று இறங்கிவிடலாம். அது அமெரிக்கா சென்றாலும் மாற்றம் இருக்காது.

பாட் பெட்டி
விமான நிலையத்திற்கு பதிலாக நகரின் முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்கைலிங்க் என்ற நிலையத்தில் இருக்கும் ரயில் பெட்டி தோற்றமுடைய பாட் எனும் பெட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும். ஒரு பெட்டியில் 48 பேர் பயணிக்கலாம். இந்த பாட் அனைத்தும் பேட்டரியில் ஓடக்கூடியது. மேலும், காந்த விசையில் தண்டவாளத்தில் சில மிமீ உயரத்தில் தொட்டு செல்லக்கூடியது. ஸ்கைலிங்க் நிலையத்தில் இருக்கும் தண்டவாளத்தில் நிற்கும்போது சார்ஜ் ஆகிக் கொண்டே இருக்கும். இந்த பாட் பெட்டியிலிருக்கும் பேட்டரியில்தான் விமானமும் இயங்கும்.

வித்தியாச விமானம்
பாட் பெட்டிகளை தூக்கிச் செல்லும் வகையில் விமானத்தின் கீழ்ப்புறத்தில் காந்தபுலம் கொண்ட இரண்டு கொக்கிகள் இருக்கின்றன. ஒரே தடவையில் பல பெட்டிகளை தூக்கிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரை இறங்க வேண்டிய இடம் வரும்போது விமானம் வேகத்தை குறைத்து 240 கிமீ வேகத்தில் வந்து இறங்கும். அப்போது தரையில் இருக்கும் காந்தவிசை கொண்ட தண்டவாளத்தில் அந்த இடத்திற்கு உரிய பெட்டி இறக்கிவிடப்படும்.

பருந்து போல தூக்கிச் செல்லும்
அதன்பின்னர் அந்த ரயில் பெட்டி மெதுவாக வேகத்தை குறைத்து நிற்கும். அதேவேளையில், அடுத்து அங்கு பயணிகளுடன் புறப்பட தயாராக இருக்கும் மற்றொரு பாட் பெட்டி விமானத்தின் வேகத்தில் இயங்கி காந்த விசை மூலம் விமானத்துடன் இணைத்துக் கொள்ளும். இதுபோன்று, ஒவ்வொரு பெட்டியில் இருக்கும் பயணிகள் மிக வேகமாக அடுத்தடுத்த ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல முடியும்.

மாற வேண்டாம்
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்வோரில் பெரும்பாலானோர் நேரடி விமானம் கிடைக்காவிட்டால், வழியில் இறங்கி பல மணி நேரம் காத்துக் கிடந்து அடுத்த விமானத்தை பிடிக்க வேண்டியிருக்கிறது. இந்த புதிய விமானப் போக்குவரத்து திட்டத்தில் விமானத்தை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை. கடைசிவரை ஒரே இருக்கைதான் என்பதோடு, உடைமைகளும் அதே பெட்டியில் வருவதால் காத்திருக்க தேவையில்லை. உதாராணமாக, டி.நகரில் இருந்து அமெரிக்காவுக்கு ஒரே பெட்டியில் செல்லலாம்.

விமானத்தில் வசதிகள்
விமானத்தில் பாட் பெட்டிகள் இணைந்தவுடன், அதன் மேல் இருக்கும் விமானத்தின் கேபினுக்குள் பயணிகள் செல்ல முடியும். விசாலமான அந்த கேபினில் காபி ஷாப், பார் மற்றும் இதர பொழுதுபோக்கு வசதிகள் இருக்கும். ஒருவேளை, இறங்க வேண்டிய இடம் வந்தால், அங்கு இறங்க வேண்டிய பயணிகள் மட்டும் குறிப்பிட்ட பாட் பெட்டிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுவர்.

நேரம் மிச்சம்
வீட்டிலிருந்து விமான நிலையத்திற்கும், அங்கு பாதுகாப்பு சோதனைகள் போன்றவற்றால் ஏற்படும் காலவிரயத்தை வெகுவாக தவிர்க்க முடியும் என்கின்றனர் இதனை வெளியிட்ட மாணவர்கள். விமானம் மாற வேண்டிய தேவையில்லை என்பதால் வீண் அலைச்சல் மற்றும் நேர விரயத்தை தவிர்க்க முடியும்.

நெரிசல் தவிர்ப்பு
தற்போது சில விமானங்களில் அதிக கூட்ட நெரிசல் மற்றும் கூடுதல் சுமையுடன் செல்கின்றன. சில விமானங்கள் பயணிகள் இல்லாமல் காற்றடிக்கின்றன. இதன் காரணமாக இயக்குதல் செலவீனம் அதிகமிருக்கிறது. ஆனால், இந்த புதிய கான்செப்ட் மூலம் இயக்குதல் செலவீனம் கணிசமாக குறையும் என்று கூறியிருக்கின்றனர். இது பேட்டரியில் இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கும் மிகுந்த நன்மை பயக்கும் கான்செப்ட் என்றும், 2050ம் ஆண்டு வாக்கில் இந்த கான்செப்ட் நனவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் கிளாஸ்கோ பல்கலைகழக மாணவர்கள்.


Click it and Unblock the Notifications








