மரண கிணற்றில் பைக் ஓட்டினாலும் ஹெல்மெட் கட்டாயம் என்பதற்கு ஒரு அதிர்ச்சிகரமான உதாரணம் இது..!
மரண கிணறு சாகசத்தின் போது கார் மீது பைக் மோதியதில் தலை நசுங்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல்களை காணலாம்.
ஒடிசா மாநிலத்தில் நடந்த மரண கிணறு சாகச நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாக கார் மீது பைக் மோதியதில், பைக் ஓட்டுநர் ஒருவர் பார்வையாளர்கள் முன்னிலையிலேயே துடிதுடிக்க பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘கரணம் தப்பினால் மரணம்...' - மரண கிணற்றில் சாகசம் செய்வோருக்கு பொருத்தமான வாக்கியம் இது.
மரத்தினால் செய்யப்பட்ட செங்குத்தான கிணற்றிற்குள் உயிரை பணயம் வைத்து, மின்னலென சீறிப்பாயும், மரண கிணறு மோட்டார் பைக் சாகசம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துவிடும்.

மரண கிணறு சாகசம் என்பது தற்காலத் தலைமுறையினர் பெரும்பாலும் பார்த்திருக்கக்கூடிய ஒரு சாகச விளையாட்டாகும். தற்போது மிகவும் அரிதாகிவிட்ட இந்த சாகச நிகழ்ச்சி, இந்தியாவின் ஒரு சில இடங்களில் விழாக்காலங்களில் அல்லது கண்காட்சிகளில் மட்டுமே நடந்தப்பட்டு வருகிறது. (வெளிநாடுகளிலும் இது நடந்து வருகிறது)

திருவிழாக்கள் என்றாலே சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வாடிக்கையான ஒன்றாகும். ஒரு சில சர்க்கஸ்களிலும் நடக்கும் மரணக்கிணறு சாகசம் நூற்றாண்டுகள் கடந்த பாரம்பரியம் கொண்ட ஒரு ‘த்ரில்' விளையாட்டாகும்.

மரண கிணறு எப்படி இருக்கும்?
மரண கிணறு என்பது, 20 முதல் 40 அடி ஆழம் கொண்டதாகவும், செங்குத்துவடிவிலான கிணறு போன்ற அமைப்பில் இருக்கும். மரச்சட்டங்களால் உருவாக்கப்படும் இதன் அகலம் 25 முதல் 30 அடிகள் கொண்டதாக இருக்கும்.

இதில் இரண்டிற்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிள்களிலும், கார்களிலும் அதிவேகமாகச் சுற்ற ஆரம்பிக்கிறார்கள். (சில நேரங்களில் எதிரும் புதிருமாகக் கூட நடக்கிறது)ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டும்போதே எழுந்து நிற்பது, கால் மேல் கால் போட்டு உட்கார்வது, மல்லாக்கப் படுப்பது, கை கோர்த்துக்கொள்வது என்று மெய் சிலிர்க்கவைக்கும் சாகசம் இது.

ஒடிசா மாநிலம் ஜெய்ப்போர் என்ற பகுதியில் அண்மையில் நடந்த மரணக்கிணறு சாகச நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு கார்களிலும், மூன்று மோட்டார்சைக்கிள்களிலும் சாகசம் நிகழ்த்திக் கொண்டிருந்தனர் ரைடர்கள். மரண கிணற்றின் மேல் பகுதியில் பார்வையாளர்கள் இந்த சாகசத்தை கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர்.

நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்திலேயே கிணற்றில் அதிவேகமாக சுற்றிக்கொண்டிருந்த கார்களில் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்தது. காரின் பின்னாலேயே வந்துகொண்டிருந்த பைக் அந்த காரின் மீது பலமாக மோதியது. இதில் அந்த பைக்கை ஓட்டிவந்த 26 வயதான ஜீது பங்கர் சுயநினைவை இழந்த மயங்கி கிழே விழுந்தார், அவரின் மீது அந்த காரும் சரிந்து விழுந்தது.

சாகசத்தில் ஈடுபட்ட மற்ற ஓட்டுநர்கள் உடனடியாக ஓடிச்சென்று ஜீது பங்கரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர். எனினும் அவர் ஏற்கெனெவே
இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவத்தை பார்வையாளர் ஒருவர் தன் மொபைலில் படம்பிடித்துள்ளார். இந்த காட்சிகள் கான்போரை அதிர்ச்சியில் உறையவைப்பதாக இருக்கிறது.
சாகச நிகழ்ச்சியின் போது பலியான ஜீது பங்கர் உள்ளிட்ட எந்த ரைடருமே ஹெல்மெட் அணியவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஹெல்மெட் அணிந்து இந்த சாகசத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்திருக்க முடியாது.
இந்த விபத்து தொடர்பாக கார் ஓட்டுநர் ஃபெரோஸ் அன்சாரி (வயது 24) மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஜகிர் அன்சாரி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








