எந்த விமானியும் இப்படி நடக்க விரும்ப மாட்டாங்க... நடு வானில் என்ஜின்கள் செயலிழந்தாலும் தப்பிக்க முடியுமா?
என்ஜின்கள் அனைத்தும் செயலிழந்தாலும் விமானங்களால் பாதுகாப்பாக தரையிறங்க முடியும். ஏனென்றால், அவை காற்றின் வேகத்திலேயே திறமையாக செயல்படும் வகையில் பார்த்து பார்த்து கவனத்துடன் வடிவமைக்கப்படுகின்றன. அதாவது, முன்னோக்கி செல்வதற்கான வேகத்தைப் பராமரிக்கவும், விமானத்தின் கட்டுப்பாட்டை தக்க வைக்கவும், விமானம் பறக்கும் உயரத்தை தொடர்ந்து உயர்த்தியும், குறைத்தும் விமானிகள் தங்களது கண்ட்ரோலில் விமானத்தை வைத்திருக்க முடியும்.
இன்றைய கால விமானப் போக்குவரத்து துறையில் இதுபோன்ற அவசரநிலைகள் மிக அரிதாகவே நிகழ்ந்தாலும், விமானிகளுக்கு இது போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள விரிவான பயிற்சி அளிக்கப்படுகிறது. வானில் பெரியதாக எந்தவொரு கஷ்டமும் இல்லாமல் விமானம் மென்மையாக இயங்கும் திறன் (அதாவது, விமானம் மேல்நோக்கி எழும் உயரம்: பின்னோக்கி விசையை செலுத்துவதன் மூலமாக முன்னோக்கி நகரும் தொலைவுக்கு இடைப்பட்ட விகிதம்) இதற்கு முக்கியம் ஆகும்.

இதனை, கிளைடு (Glide) விகிதம் என அழைக்கின்றனர். உதாரணமாக, 10:1 என்ற கிளைடு விகிதத்தை ஒரு விமானம் கொண்டிருக்கிறது என்றால், அந்த விமானம் 10 அலகுகள் தூரம் முன்னோக்கி நகரும்போது, அது 1 அலகு உயரத்தை மட்டுமே இழக்கிறது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், வானில் 10 மீட்டர் தொலைவிற்கு முன்னோக்கி செல்லும்போது, விமானத்திற்கும் தரைக்கும் இடையேயான தூரம் 1 மீட்டர் குறையும்.
குறைந்த ஆற்றலில் இயங்கக்கூடிய சில தனி விமானங்கள் 40:1 அல்லது அதற்கு மேற்பட்ட கிளைடு விகிதத்தைக் கொண்டிருந்தாலும், பரவலாக பல ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்தும் போயிங் 747 (Boing 747) போன்ற கமர்ஷியல் விமானங்கள் 15:1 முதல் 18:1 வரையிலும், ஏர்பஸ் ஏ330 (Airbus A330) 12:1 வரையிலும் கிளைடு விகிதங்களைக் கொண்டுள்ளன.

இதனாலேயே, மிகவும் கூர்மையான வடிவத்தில் வடிவமைக்கப்படும் தனி விமானங்கள் என்ஜின் பவரை அதிகம் பயன்படுத்தாமல், காற்றின் வேகத்தை பயன்படுத்தி இயங்குகின்றன. இவ்வாறு எவ்வளவு தொலைவிற்கு பயணிக்க முடியும் என்றால், 36,000 அடி உயரத்தில் (சுமார் 6 மைல்கள்) 10:1 கிளைடு விகிதம் கொண்ட ஒரு விமானம், என்ஜின் சக்தி இல்லாமல் சுமார் 60 மைல்களுக்கு பறக்க முடியும்.
இது பொருத்தமான தரையிறங்கும் இடத்தைக் கண்டுபிடிக்க கணிசமான தூரத்தையும், நேரத்தையும் வழங்குகிறது. அத்தகைய சூழலில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விமானிகள் தங்களின் குறிப்பிட்ட விமான வகைக்கு ஏற்ற 'சிறந்த கிளைடு வேகத்தை' பராமரிக்க முன்கூட்டியே பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். இது என்ஜின்கள் செயலிழந்த பின்பும் விமானத்தின் அதிகபட்ச இயங்கும் தூரத்தையும், அதிக நேரம் வானில் இருப்பதையும் உறுதி செய்கிறது.

இவ்வாறு என்ஜின்கள் செயலிழந்த போதிலும், பெரிய அளவிலான பயணிகள் விமானங்களை பாதுகாப்பாக கிளைடு செய்து தரையிறக்கிய சம்பவங்களும் உள்ளன. உதாரணத்திற்கு, 2001 ஆம் ஆண்டில் ஏர்பஸ் ஏ330 விமானம் ஒன்று முறையற்ற பராமரிப்பால் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேல் எரிபொருள் இல்லாமல் போனது. கேப்டன் ராபர்ட் பிச்சே மற்றும் விமான முதல் அதிகாரி டர்க் டி ஜாகர் ஆகியோர் விமானத்தை சுமார் 75 மைல்கள் (120 கிமீ) கிளைடு செய்தனர்.
இதுவே கமர்ஷியல் விமானங்கள் வரலாற்றில் மிக நீண்ட தொலைவிற்கு செய்யப்பட்ட கிளைடு ஆகும். பின்னர், அஸோர்ஸ் தீவுகளில் ஒன்றில் உள்ள லேஜஸ் விமான தளத்தில் வெற்றிகரமாக அவசரமாக விமானத்தை தரையிறக்கினர். இதன் மூலம், விமானத்தில் இருந்த 306 பேரும் உயிர் பிழைத்தனர்.

இதேபோன்று, 2009 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் லாகுவார்டியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்கன் ஏர்வேஸின் ஏர்பஸ் ஏ320 விமானம் சிறிது நேரத்திலேயே பறவைகள் கூட்டத்துடன் மோதியதியதால், 2,800 அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த போது இரு என்ஜின்களும் செயலிழந்த போதிலும், ஹட்சன் நதியில் கிளைட் மூலம் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு, என்ஜின்கள் செயலிழந்த போதிலும் குறிப்பிட்ட தொலைவிற்கு பயணித்து வெற்றிக்கரமாக விமானத்தை தரையிறக்கி, பயணிகள் காப்பாற்றப்பட்ட நிகழ்வுகள் இன்னும் சில உள்ளன. விமானத்தின் மொத்த எஞ்சின் செயலிழப்பு ஆனது அரிதாக இருந்தாலும், வலுவான விமான வடிவமைப்பு, முக்கிய அமைப்புகளுக்கு அவசர ஆற்றலை வழங்கும் ராம் ஏர் டர்பைன் மற்றும் விமானக் குழுவினரின் பயிற்சி அனுபவங்கள் மூலம் அத்தகைய சூழலை மனிதர்களாகிய நாம் திறம்பட கையாண்டுள்ளோம்; இனியும் கையாளுவோம்.


Click it and Unblock the Notifications









