பாவம்... பறவைகள் வராமல் இருக்க விமான நிலையங்களில் செய்யப்படும் தந்திரம்... இப்படி எல்லாம் கூட பண்ணுவாங்களா?
பறவைகள் வராமல் தடுப்பதற்காக விமான நிலையங்கள் என்னென்ன யுக்திகளை கையாள்கின்றன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்கள் பல்வேறு அபாயங்களை வெற்றிகரமாக கடந்துதான் அனைத்து பயணிகளையும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்கின்றன. விமானங்களுக்கு இருக்கும் பல்வேறு அபாயங்களில் பறவைகளும் முக்கியமானவையாக உள்ளன. ஆம், பறவைகளால் விமானங்களுக்கு ஏராளமான பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

பறவைகள் மோதுவதால் விமானங்களின் இன்ஜின் கூட சேதமடையலாம். எனவே பராமரிப்பு பணிகளுக்காக, புறப்பட்ட விமான நிலையத்திற்கே கூட விமானங்கள் மீண்டும் திரும்பும் சூழல் ஏற்படலாம். இது போன்ற நிகழ்வுகள், கடந்த காலங்களில் பல முறை நிகழ்ந்துள்ளன. இதனால் நேர விரயம் உள்பட பயணிகளுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

மேலும் விமான நிறுவனங்களுக்கும் வீண் செலவு ஏற்படுகிறது. அமெரிக்காவில் ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் பறவைகள் மோதுவதால் பாதிக்கப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், இதில் பெரும்பாலான நிகழ்வுகள் மிகவும் சிறியவைதான்.

எனவே பயணிகளுக்கோ அல்லது விமானத்தின் ஊழியர்களுக்கோ பெரிய பாதிப்புகள் ஏற்படுவது கிடையாது. இருந்தாலும் நாங்கள் ஏற்கனவே கூறியபடி சில சமயங்களில் பறவைகள் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் பறவைகளை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா உள்பட உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள விமான நிலையங்களிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த தகவல்களை இதற்கு முன் நீங்கள் கேள்விபட்டிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என நாங்கள் கருதுகிறோம். விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற வித்தியாசமான நடவடிக்கைகள் மூலம் விமானங்கள் எளிதாக டேக் ஆஃப் மற்றும் லேண்ட் ஆவது உறுதி செய்யப்படுகிறது.

பறவைகள் மிக சுறுசுறுப்பாக செயல்பாட்டில் உள்ள சமயங்களில், விமானங்கள் டேக் ஆஃப் மற்றும் லேண்ட் செய்யப்படுவதை பல்வேறு விமான நிலையங்கள் தவிர்த்து விடுகின்றன. அதாவது விமானங்களின் பயண திட்டங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு விமான நிலையத்தின் ஏர்ஸ்பேஸில் காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை பறவைகள் அடிக்கடி பறக்கிறது என வைத்து கொள்வோம்.

அப்படியானால் காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை, அந்த விமான நிலையத்தில் விமானங்கள் டேக் ஆஃப் மற்றும் லேண்ட் செய்யப்படுவது தவிர்க்கப்பட்டு விடும். காலை 6 மணிக்கு முன்பாகவும் மற்றும் 10 மணிக்கு பின்பாகவும் மட்டுமே விமானங்கள் டேக் ஆஃப் மற்றும் லேண்ட் செய்வதற்கான அனுமதி வழங்கப்படும்.

விமானங்களின் பயண திட்டங்களில் மாற்றங்களை செய்வதுடன், பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ள பறவைகளின் உணவு ஆதாரங்களை அகற்றுவதற்கான முயற்சிகளையும் விமான நிலையங்கள் மேற்கொள்கின்றன. அதாவது விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில், பறவைகளின் உணவு ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் அவை அகற்றப்படும்.

பெரும்பாலான விலங்குகளை போல், பறவைகளும் உணவை கண்டுபிடிப்பதற்காக பயணம் செய்கின்றன. எனவே விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு இல்லை என்றால், அவை நீண்ட நாட்களுக்கு அங்கு இருக்காது. எனவே முடிந்தவரை பறவைகளுக்கான உணவு ஆதாரத்தை அழித்து, அவற்றை வேறு இடங்களுக்கு இடம்பெயர வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுதவிர பறவைகளிடம் இருந்து விமானங்களை பாதுகாப்பதற்காக, அலாரம் மற்றும் சைரன்களும் விமான நிலையங்களில் பயன்படுத்தப்படுகின்றன. பறவைகள் கூட்டமாக விமான நிலையத்தை நோக்கி பறந்து வருகின்றன என்றால், அலாரம் மற்றும் சைரன்கள் 'ஆக்டிவேட்' செய்யப்படும். இதன் மூலமாக எழும்பும் சத்தம், பறவைகள் விமான நிலையத்திற்குள் நுழைவதை தடுக்கிறது.

சில பறவைகள் ஏரிகள் மற்றும் குளங்கள் போன்ற நீர்நிலைகளில் தரையிறங்கும் வழக்கத்தை வைத்துள்ளன. இதுபோல் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகள் இருக்கும்பட்சத்தில், வலை மூலம் அவற்றை மூடி வைப்பதையும் விமான நிலையங்கள் பின்பற்றுகின்றன. இதன் மூலமும் பறவைகள் அங்கு தரையிறங்குவது தவிர்க்கப்படுகிறது.

இதில், உணவு ஆதாரங்களை அழிப்பது போன்ற நடவடிக்கைகள் பறவைகளுக்கும் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. ஆனால் மனித உயிர்களை கருத்தில் கொண்டு, விமான நிலையங்களுக்கு பறவைகள் வராமல் தடுக்க இவ்வாறு செய்யப்படுகிறது. அத்துடன் விமானங்களில் பழுது போன்ற பிரச்னைகளுக்கு பறவைகள் காரணமாக இருப்பதாலும், பொருட்செலவை கருத்தில் கொண்டும், விமான நிலையங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.


Click it and Unblock the Notifications