NH-27, NH-144A... நெடுஞ்சாலைகளுக்கு எப்படி பெயர் வைக்கறாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது? என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தேசிய நெடுஞ்சாலைகள் (National Highways) நமது பயணங்களை மிகவும் எளிமையாக்கி விட்டன. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு, நம்மால் வெகு விரைவாக செல்ல முடிகிறது. நமது பயணங்களை மட்டுமின்றி, சரக்கு போக்குவரத்தையும் அவை வேகமாக்கியுள்ளன. இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் தேசிய நெடுஞ்சாலைகள் முக்கிய பங்காற்றுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் நம் ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் எவ்வளவு முக்கியம்? என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அப்படிப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது? என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ஆனால் இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

இந்தியாவில் சுருக்கமாக என்ஹெச் (NH) என அழைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது? என்பதை இந்த செய்தியில் மிக விரிவாக விளக்கி கூறியுள்ளோம். இந்த தகவல்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். சரி, வாருங்கள் இனி செய்திக்குள் செல்வோம்.

இந்தியாவில் தற்போது என்ஹெச்-1 (NH-1), என்ஹெச்-44 (NH-44), என்ஹெச்-144 (NH-144), என்ஹெச்-144ஏ (NH-144A) என்பது போன்ற பெயர்களில் பல்வேறு நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. எண்கள் மற்றும் ஆங்கில எழுத்துக்களை வைத்து, தேசிய நெடுஞ்சாலைகளுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது? என்பதைதான் நாம் இந்த பதிவில் பார்க்கவுள்ளோம்.

இந்தியாவில் ஒரு சில தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஒற்றை படை எண்களிலும் (Odd Numbers), ஒரு சில தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இரட்டை படை எண்களிலும் (Even Numbers) பெயர் வைக்கப்படுகிறது. முதலில் எந்தெந்த தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஒற்றை படை எண்களில் பெயர் வைக்கப்படும்? என்று தெரிந்து கொள்ளலாம்.

கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஒற்றை படை எண்களில் பெயர் வைக்கப்படும். கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசை நோக்கி செல்வதால், இந்திய வரைபடத்தில் இந்த தேசிய நெடுஞ்சாலைகள் கிடைமட்டமாக (Horizontal) இருக்கும். என்ஹெச்-1 மூலம் இதனை விளக்கி கூறுகிறோம்.

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பாரமுல்லாவில் (Baramulla) இருந்து, லடாக்கில் உள்ள லே (Leh) வரை என்ஹெச்-1 செல்கிறது. இந்த நெடுஞ்சாலை, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி செல்கிறது. எனவே 1 என்ற ஒற்றை படை எண் இதற்கு பெயராக சூட்டப்பட்டுள்ளது. தெளிவான புரிதலுக்கு மேலே வழங்கப்பட்டுள்ள புகைப்படத்தை பார்க்கவும்.

இதற்கு அடுத்து என்ஹெச்-27 பற்றி பார்க்கலாம். இது குஜராத் மாநிலம் போர்பந்தர் (Porbandar) நகரில் தொடங்கி, அஸ்ஸாம் மாநிலம் சில்சார் (Silchar) நகரில் முடிவடைகிறது. இந்த நெடுஞ்சாலை கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு நோக்கி செல்வதால், என்ஹெச்-27 என்ற ஒற்றை படை எண்ணில் அழைக்கப்படுகிறது.

இங்கே மேலும் ஒரு உதாரணத்தை பார்க்கலாம். இம்முறை நாம் பார்க்க போவது என்ஹெச்-81. தமிழ்நாட்டில் உள்ள கோவை மற்றும் சிதம்பரம் ஆகிய நகரங்களை இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை, கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு நோக்கி செல்வதால், என்ஹெச்-81 என்ற ஒற்றை படை எண்ணை கொண்டுள்ளது. இங்கே மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும்.

ஒற்றை படை எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகளை பொறுத்தவரையில், வடக்கில் இருந்து தெற்கிற்கு வர வர எண்கள் அதிகரித்து கொண்டே வரும். என்ஹெச்-1 வடக்கில் உள்ளது. அங்கிருந்து தெற்கு நோக்கி வர வர எண்கள் அதிகரித்து கொண்டே வருவதற்கு உதாரணம் என்ஹெச்-27 மற்றும் என்ஹெச்-81. இனி எந்தெந்த தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இரட்டை படை எண்களில் பெயர் வைக்கப்படும்? என்பதை பார்க்கலாம்.

வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு, இரட்டை படை எண்களில் பெயர் வைக்கப்படும். என்ஹெச்-44 மூலம் இதனை விளக்குகிறோம். இதுதான் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையாகும். ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் தொடங்கி, தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இந்த தேசிய நெடுஞ்சாலை நிறைவடைகிறது.

வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதி நோக்கி செல்வதால், என்ஹெச்-44 என்ற இரட்டை படை எண்ணை இந்த தேசிய நெடுஞ்சாலை பெற்றுள்ளது. இதற்கு அடுத்து என்ஹெச்-68 குறித்து பார்க்கலாம். இந்த தேசிய நெடுஞ்சாலையானது, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் (Jaisalmer) இருந்து, குஜராத் மாநிலம் ராதன்பூர் (Radhanpur) வரை செல்கிறது.

வடக்கு பகுதியில் இருந்து தெற்கு நோக்கி செல்வதால், என்ஹெச்-68 என்ற இரட்டை படை எண்ணை இந்த தேசிய நெடுஞ்சாலை பெற்றுள்ளது. இரட்டை படை எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகளை பொறுத்த வரையில், மேற்கில் இருந்து கிழக்கி நோக்கி வர வர எண்கள் அதிகமாகி கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. என்ஹெச்-44 மற்றும் என்ஹெச்-68 ஆகியவை இதற்கு உதாரணங்கள்.

சில சமயங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் குறிக்கப்படும் எண்களுக்கு முன்னால் வேறு சில எண்களும், பின்னால் ஆங்கில எழுத்துக்களும் குறிப்பிடப்படும். அது எதற்காக? என்பதையும் இந்த செய்தியிலேயே பார்த்து விடலாம். பொதுவாக இந்தியாவில் உள்ள அனைத்து முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளின் பெயர்களுக்கும் 1 அல்லது 2 இலக்க எண்கள்தான் பயன்படுத்தப்படும்.

3 இலக்க எண்களில் குறிப்பிடப்படும் நெடுஞ்சாலைகளை, துணை நெடுஞ்சாலைகள் (Subsidiary Highways) என அழைக்கின்றனர். உதாரணத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் 144, 244 மற்றும் 344 ஆகியவற்றை எடுத்து கொள்ளலாம். இவை என்ஹெச்-44 நெடுஞ்சாலையின் கிளைகள் ஆகும். ஒரு நெடுஞ்சாலையின் கிளைக்கு பெயர் வைப்பதற்கும் வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

தேசிய நெடுஞ்சாலையின் பெயருக்கு முன்னால் ஒரு எண்ணை சேர்த்து, அதன் கிளை குறிப்பிடப்படுகிறது. என்ஹெச்-44ன் கிளைகளான என்ஹெச்-144, என்ஹெச்-244 மற்றும் என்ஹெச்-344 ஆகியவை இதற்கு உதாரணங்கள் ஆகும். இங்கே என்ஹெச்-44 என்பதற்கு முன்னால், 1, 2 மற்றும் 3 ஆகிய எண்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் துணை நெடுஞ்சாலைகளின் செக்ஸன்களை (Sections) குறிப்பிடுவதற்கு, 'A' உள்ளிட்ட எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. 3 இலக்க எண்களுக்கு பின்னால், இந்த எழுத்து குறிப்பிடப்படும். இதற்கு என்ஹெச்-144A ஒரு உதாரணம் ஆகும். தேசிய நெடுஞ்சாலைகளுக்கு பெயர் வைப்பதற்கு பயன்படுத்தப்படும் நம்பர் சிஸ்டம் உங்களுக்கு தற்போது புரிந்திருக்கும் என நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications








