ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் செயல்படும் விதமும், அதன் பலன்களும்... !!
ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் செயல்படும் விதம், அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாக காணலாம்.
கார் தொழில்நுட்பங்களும், பாதுகாப்பு அம்சங்களும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வேகமாக மேம்பட்டு வருகின்றன. அந்த காலத்தில் அம்பாசடர், ஃபியட் கார்களில் பிரேக் தொழில்நுட்பங்கள் இப்போது அளவுக்கு சிறப்பான விஷயம் இல்லை.
ஆனாலும், வாகன எண்ணிக்கையும், வாகனங்களின் அதிகபட்ச வேகம் குறைவாக இருந்ததால், விபத்துக்கள் என்பது சற்றே அரிதான விஷயம்.

ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் வேகமும், சாலை கட்டமைப்புகளின் தரமும் வெகுவாக உயர்ந்துவிட்டன. அதற்கு இணையாக விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டன. எனவே, அதற்கு தக்கவாறு, கார்களின் பிரேக் சிஸ்டத்தை மேம்படுத்துவது அவசியமாகியது.
அதற்கு மிகவும் உகந்த தொழில்நுட்பமாக பரவலாக தற்போது ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் [ABS] பயன்படுத்தப்படுகிறது. இதனை தமிழில் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு என்று குறிப்பிடப்படுகிறது. இதுகுறித்து இன்றைய கார் கராஜ் சிறப்புப் பகுதியில் விசேஷ தகவல்களை வழங்குகிறோம்.

கார்கள் இன்று நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை தாண்டி சர்வ சாதாரணமாக செல்கின்றன. அவ்வாறு செல்கையில், திடீரென பிரேக் பிடிக்கும்போது டயர்கள் சறுக்கிச் சென்று விபத்தில் சிக்கிவிடுகின்றன.

அதேபோன்று, சக்கரங்களில் கொடுக்கப்பட்டு இருக்கும் பிரேக் பிடிக்கும் அமைப்பு திடீரென பிரேக் பிடிக்கும்போது, பூட்டிக் கொண்டு சக்கரங்களின் சுழற்சி திடீரென நின்றுவிடும் அபாயம் இருக்கிறது.

இதனால், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிலை குலைந்து விபத்தில் சிக்கிவிடுகின்றன. இந்த குறையை போக்கும் வகையில், சக்கரங்களில் பிரேக் அமைப்பு செயல் இழந்து போவதை தவிர்க்கும் தொழில்நுட்பம்தான் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என்றழைக்கப்படுகிறது.

1920களிலேயே சக்கரங்கள் பூட்டிக் கொள்ளாமல் செய்வதற்கான ஆராய்ச்சிகள் துவங்கிவிட்டன. 1929ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விமானவியல் நிபுணரான கேப்ரியல் வாய்ஸ் என்பவர்தான் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர். 1950களில் இருந்து நவீன காலத்திற்கான ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்திற்கான நுட்பங்கள் உருவாகின.

1958ம் ஆண்டில் டன்லப் நிறுவனத்தின் மாக்சரெட் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீடியோர் மோட்டார்சைக்கிளில் பொருத்தி சோதனை நடத்தப்பட்டது. அதன் பிறகு, இந்த ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பரவலாக பல நிறுவனங்களின் மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்தப்பட்டது.

1960களில் ஃபெர்குஸன் பி99 ரேஸ் காரிலும் ஜென்சன் எஃப்எஃப் காரிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து, கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்கும் முதல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் 1970களில் அறிமுகமானது.

க்றைஸ்லர் மற்றும் பென்டிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் இணைந்து Sure Brake என்ற பெயரில் இந்த பிரேக்கிங் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 1971ம் ஆண்டில் ஃபோர்டு நிறுவனம் ஷ்யூர் ட்ராக் என்ற பெயரில் லிங்கன் கான்டினென்டல் காரின் பின்புற சக்கரங்களுக்கான ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்தது.

இதே ஆண்டில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்தது. ஜப்பானை சேர்ந்த டென்ஸோ என்ற நிறுவனம் நிஸான் நிறுவனத்திற்காக ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்தது.

1976ல் வாப்கோ நிறுவனமும், 1978ல் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும், 1982ல் ஹோண்டா நிறுவனமும் அறிமுகம் செய்தன. 1988ல் பிஎம்டபிள்யூ நிறுவனம் முதல்முறையாக ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் பைக் மாடல்களை அறிமுகம் செய்ததது. 1993ம் ஆண்டு லிங்கன் நிறுவனம் முதல்முறையாக 4 சக்கரங்களுக்கான ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்தது.

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமானது, கன்ட்ரோலர் ஆன்ட்டி லாக் பிரேக் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பமானது இசியூ எனப்படும் மின்னணு கட்டுப்பாட்டு அமைப்பு, நான்கு சக்கரங்களிலும் வேகத்தை உணர்ந்து இசியூ சாதனத்திற்க்கு தெரிவிக்கும் சென்சார்கள், வால்வுகள் மற்றும் பிரேக் ஹைட்ராலிக் சிஸ்டம் ஆகிய முக்கிய பாகங்களுடன் செயல்படுகின்றது.

சக்கரங்களில் பொருத்தப்பட்டு இருக்கும் சென்சார்கள் சக்கரங்களின் சுழற்சியை தொடர்ந்து கண்காணிக்கும். சக்கரங்களின் சுழற்சி வேகம் குறைந்தால் உடனடியாக இசியூ கம்ப்யூட்டருக்கு சென்சார்கள் தகவல் அனுப்பும்.
நான்கு சக்கரங்களின் வேகமும் சீராக இல்லாமல் போனாலோ அல்லது திடீரென சக்கரங்களில் சுழற்சி வேகம் குறைந்தாலோ, அதன் அடிப்படையில், சக்கரங்களின் சுழற்சிக்கு தக்கவாறு பிரேக் ஆற்றலை குறிப்பிட்ட இடைவேளைகளில் விட்டு விட்டு அளிப்பதுதான் இசியூ வேலை.

அதிகபட்சமாக வினாடிக்கு 15 முதல் 20 முறை வரை பிரேக் அழுத்தம் சக்கரங்களுக்கு தனித்தனி வால்வுகள் மூலமாக விட்டுவிட்டு கொடுக்கப்படும். இதனால், சக்கரங்களில் வேகத்தை குறைப்பதற்காக கொடுக்கப்பட்டு இருக்கும் வட்டுருளை அமைப்பின் இயக்கம் திடீரென நின்றுபோகாமல் செய்யும்.

ஏதாவது ஒரு சக்கரத்தின் சுழற்சி குறைவாக இருந்தால், அதற்கு தக்கவாறு மற்ற சக்கரங்களின் வேகத்தையும் இசியூ குறைத்துவிடும். இதனால், வளைவுகளில் திரும்பும்போது கூட சிறப்பான நிலைத்தன்மையை வழங்கும்.

ஏபிஎஸ் இல்லாத வாகனங்களில் சக்கரங்கள் தரைப் பிடிப்பை இழந்து சறுக்கிச் செல்லும். ஏபிஎஸ் உளள வாகனங்களில் சக்கரங்கள் தரைப்பிடிப்பை இழக்காமல், மிக குறைவான தூரத்திலேயே நின்றுவிடும்.

மற்றொரு பெரிய அனுகூலம் ஓட்டுனர் ஸ்டீயரிங் வீல் கட்டுப்பாட்டை இழக்காமல் இருப்பதால் விபத்து வாய்ப்பு வெகுவாக குறையும். டயர்கள் அதிக பாதிப்புகள், சேதமடைவதையும் ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் தவிர்த்துவிடும்.

மழை நேரத்தில் ஈரப்பதம் மிக்க சாலைகளில் கூட கார் வழுக்கிச் செல்லாமல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் சிறந்த பிரேக்கிங் திறனை அளிக்கும். இதன் காரணமாகவே, பல்வேறு நாடுகளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வாகனங்களில் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. நம் நாட்டிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட உள்ளது.

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்ட கார், பைக்குகள் விலை சற்று அதிகமாக இருக்கும். ஆனால், இவை தக்க சமயத்தில் உயிர் காக்கும் தொழில்நுட்பமாக இருப்பதால், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்ட வாகனங்களை வாங்குவது புத்திசாலித்தனம். விரைவில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தி அறிமுகம் செய்வது கட்டாயமாக்கப்பட உள்ளது.
Tamil Car and Bike Fans Like Us On Facebook!


Click it and Unblock the Notifications








