அமெரிக்கா எங்கேயோ குண்டு போடுறது இங்க காரின் விலையை உயர்த்துமா? பெட்ரோலையும் பேரலில் புடிச்சு வைக்கனும் போல!
அமெரிக்கா- ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர், உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு நாடுகளும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு வருவதை பற்றி செய்திகளில் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். அமெரிக்காவுக்கு உதவியாக ஈரானுக்கு அருகே உள்ள இஸ்ரேலும் களத்தில் இறங்கி இருப்பதால் பதற்றம் இன்னும் அதிகமாகி உள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா வழக்கம்போல் நடுநிலை வகிப்பதால் நேரடியாக எந்த தாக்கமும் இருக்காது என்றாலும், மறைமுக தாக்கம் இருக்கக்கூடும்.
இந்த வகையில், இந்திய ஆட்டோமொபைல் துறையும் சில சவால்களை சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முக்கியமானது, எரிபொருள் செலவு அதிகரிப்பாகும். உலக நாடுகளின் கச்சா எண்ணெய் தேவையை தீர்ப்பதில் ஈரான் டாப்-10 நாடுகளுள் ஒன்றாக உள்ளது. அத்தகைய நாட்டின் வளம் பாதிக்கப்படுவது கச்சா எண்ணெய் தேவையை அதிகப்படுத்தும். ஏனெனில், எப்படியிருந்தாலும் அமெரிக்கா ஈரானின் எண்ணெய் வளங்களை குறிவைத்து தான் தாக்கக்கூடும்.

இருப்பினும், இதில் இந்தியாவிற்கு பெரிய அளவிற்கு பாதிப்பு இருக்காது என்றே பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வரும் வாரங்களில் சில பைசா அளவிற்கு மட்டுமே பெட்ரோல், டீசலின் விலை உயரக்கூடும். இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க ஆரம்பித்து இருப்பதும் இதற்கு ஒரு காரணம் என சொல்லலாம்.
இந்த போரினால் கச்சா எண்ணெய் தேவை பெரியதாக இருக்காது என்றாலும், ஆட்டோமொபைல் வாகன பாகங்களுக்கான உலகளாவிய விநியோகச் சங்கிலியில் நெருக்கடியை ஏற்படுத்தி, இந்தியாவின் வாகனத் துறையின் செயல்பாடுகளை அச்சுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதிலடித் தாக்குதல்களால், உலகளாவிய கப்பல் போக்குவரத்துப் பாதைகள் மற்றும் அவற்றிற்கான எரிசக்திச் செலவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், கடல் வழியாக இந்தியாவிற்கு வாகன பாகங்கள் கொண்டுவரப்படுவதும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகன பாகங்களை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதும் பாதிக்கப்படலாம். துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ளாவிடின் இது இந்திய வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு நிரந்தரச் சுமையாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஹார்முஸ் ஜலசந்தியின் மூடல் இதற்கு ஒரு முக்கியக் காரணம். ஈரான் இந்த ஜலசந்தியை கப்பல் போக்குவரத்துக்காக மூடியுள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 40% முதல் 60% வரை இந்த வழியாகவே நடக்கிறது. இத்தகைய முக்கியமான வழித்தடத்தின் தொடர் மூடல், வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி & இறக்குமதியைப் பெரிதும் பாதிக்கும்.
இதனால், கப்பல்கள் தென்னாப்பிரிக்கா வழியாகச் செல்ல வேண்டிய கட்டாயத்தால், போக்குவரத்து நேரம் 10 முதல் 20 நாட்கள் கூடுதலாகிறது. இதனால் சரக்கு மற்றும் இன்சூரன்ஸ் (Insurance) செலவுகள் உயர்ந்து, சில முக்கியப் பாதைகளில் கப்பல் கட்டணங்கள் 350%க்கு மேல் அதிகரித்துள்ளன. இதற்கு அதிகரித்துவரும் எரிசக்திச் செலவுகளும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.
மார்ச் 2ஆம் தேதியான இன்று கச்சா எண்ணெய் விலை 12% உயர்ந்து, ஒரு பேரலுக்கு 82 டாலரைத் தாண்டியுள்ளது. இது எஃகு, பிளாஸ்டிக், டயர்கள் போன்ற எரிசக்தி அதிகம் தேவைப்படும் வாகன பாகங்களின் உற்பத்திச் செலவை நேரடியாக அதிகரிக்கின்றது. பெரும்பாலான இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் தேவைக்கு ஏற்ப மட்டுமே உற்பத்தியை மேற்கொள்ளும் முறையைச் சார்ந்திருப்பதால், சிறு தாமதங்களும் அவற்றை பெரிதும் பாதிக்கின்றன.
குறைக்கடத்திகள் (Semiconductors) மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி பொருட்கள் போன்ற முக்கியமான பாகங்கள் இறக்குமதி செய்யப்படும் நாட்கள் அதிகமாகினால், வாகன உற்பத்தி நிறுத்தப்படலாம். திசைமாற்றம் செய்யப்பட்ட கப்பல் பாதைகளால், இரண்டு வாரங்களுக்கும் மேலாக சரக்கு கடலிலேயே முடங்குகிறது. இது இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் பணச் சுழற்சியில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
உயரும் எரிபொருள் செலவால் ஏற்படும் லாஜிஸ்டிக்ஸ் (Logistics) கட்டணங்கள் மற்றும் அதிகரித்த மூலப்பொருட்களின் விலைகள் என இரண்டின் சுமையையும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடைசியில் வாடிக்கையாளர்கள் மீதுதான் சுமத்தும். இது எஸ்யூவி கார்கள், பயணிகள் கார்கள் மற்றும் கமர்ஷியல் வாகனங்களின் விலைகளில் உடனடி உயர்வைக் கொண்டு வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய வளைகுடா கடல் பகுதி ஒரு முக்கியப் வழித்தடமாகச் செயல்படுவதால், ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதலால் இந்தியாவின் இறக்குமதி, ஏற்றுமதி திறன் பாதிக்கப்படும் என்றாலும், அது பெரிய அளவிற்கு இருக்காது என்பதே சற்று ஆறுதலான விஷயம் ஆகும். இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ளவை தற்போதைய நிலவரப்படி, இந்த போர் பதற்ற சூழல் இந்திய ஆட்டோமொபைல் துறையை எந்த அளவிற்கு பாதிக்கக்கூடும் என்பதாகும். ஒருவேளை வரும் நாட்களில் இந்த சூழல் இன்னும் தீவிரமடைந்தால், நிலைமை கை மீறி போவதற்கும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








